February 09, 2009

வெப்பமாகுதலை (Global warming) தடுக்கும் முயற்சி

இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்தாலும்; முன்னெப்போதுமில்லாத அளவு தொலை தொடர்பில் வளர்ச்சி கண்டிருப்பினும் (செல்போன் இல்லாத நபரே இல்லையெனலாம்) 50 வருடத்திற்கு முன்னிருந்த அதே வளமையும், பசுமையும்,செழுமையும், ஆரோக்கியமும்இன்று இல்லை என்பதே வல்லுநர்களின் கருத்து.

Global warming - உலகம் வெப்பமாகுதல் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையில் ஒன்று. நமது சுற்றுப்புறத்தை நாமே சீரழித்து வருவதாகவே எனக்கும் சில ஆண்டுகளாக தோன்றுகிறது. பிற மாநிலங்களை விடுவோம்; மெட்ரோ என அழைக்கப்படும் சென்னை, மும்பை, பெங்களூரு, தில்லி, கல்கத்தா நகரங்களில் நாம் காணும் குப்பைகளும், வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீரும் உலக அரங்கில் நமது புகழ் பாடுகின்றன.

சென்னை மெரினாவே குப்பைகளால் அலங்கோலமாக காட்சி தருவது இன்னும் வேதனை. இந்தியாவை குப்பை மேடாக்குவதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி இரு தரத்தினரும் இத்தவறைச் செய்கின்றனர்.


எனது பழைய பதிவில் கூறியபடி பிளாஸ்டிக் குவளைகளில் தேனீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் நம்மில் சிலர் அதனை அலேக்காக ஓடும் ரயிலில் இருந்து அப்படியே வீசியெறிவதும், பேருந்து பயணச் சீட்டுகளை பயணம் முடிந்ததும் காற்றில் பறக்க விடுவதும், போதை வஸ்துக்களை மென்றுவிட்டு நடைமேடைகள் மற்றும் திரையரங்குகளில் உமிழ்வதும்.வேர்க்கடலைகளை வயிற்றினுள் தள்ளிவிட்டு அதன் தோடுகளை ஹாயாக பேருந்திலும், ரயிலிலும், திரையரங்குகளிலும் இருக்கைகளின் அடியிலே தள்ளுவதும் போன்ற தவறுகளை நாமே செய்கிறோம்.

...இவற்றை நிறுத்துவதோடு

# பிளாஸ்டிக் பையை நம்பாமல் துணிகளினாலான பையை கடைகளுக்கு செல்லும் போது எடுத்துச் செல்வது
# செல்போன் சார்ஜ் ஆகிவிட்டால் மின்சாரத்திலிருந்து துண்டிப்பது
# வேலையற்ற ஓய்வு சமயங்களில் கணினியை turn off செய்வது
# ஆளில்லாத அறைகளில் மின்சார ஒளி விளக்கை நிறுத்துவது
# அவசிய தேவைகளுக்கு மட்டும் கார் அல்லது இரு சக்கர வாகனம் உபயோகித்தல் மற்ற நேரங்களில் சைக்கிள் உபயோகித்தல்
# தேவையான அளவு மட்டும் நீரை செலவழிப்பது
# மற்றவர்களுக்கும் உலகம் வெப்பமாகுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது...

...போன்ற சின்னச் சின்ன விஷயங்களை கடைபிடிப்போமென்றால் உலக வெப்பமாகுதலை நம்மால் இயன்ற மட்டும் தடுக்கவியலும் அதோடு இன்னும் மின்சாரமில்லாத கிராமங்களுக்கு மின்சாரமும் வழங்க இயலும்; மட்டுமல்லாமல் நாம் நோயற்ற வாழ்வை வாழ்வதோடு நமது வருங்காலத்தினரும் அனுபவிக்கும்படி செய்யலாம்.

இதற்கான முயற்சியில் NDTV தொலைக்காட்சி இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

மும்பை நவம்பர் 2008ல் தீவிரவாதிகளின் தாக்குதலின் போது பாரபட்ச ஒளிபரப்பும், ஈழத்தமிழர்கள் விஷயத்தை இருட்டடிப்பும் செய்யும் தனியார் தொலைக்காட்சி NDTV என்றாலும் அவர்களின் இந்தமுயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

நேற்றைய முன்தினம் (07.02.2009) இந்திய நேரப்படி இரவு 7 மணி முதல் நேற்று (08.02.2009) இரவு 7மணி வரை NDTV தொலைக்காட்சியில் இந்தியாவை பசுமையாக்கும் ஒரு முயற்சியாக Greenathon என்ற 24 மணி நேர நேரடி ஒளிபரப்பை டொயாட்டோ நிறுவனத்தின்உதவியுடன் நடத்தினார்கள்.

உலக வெப்பமாகுதலை (Global Warming) என்னென்ன முறைகளால் தடுக்கலாம் எனவும், சுற்றுப்புறத்தை நாமே எவ்விதம் தூய்மையாக வைத்துக்கொள்ளலாம் எனவும் பல கருத்துக்கள் சமூக நல ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வட இந்திய சினிமா பிரபலங்களால் முன் வைக்கப்பட்டன.

பொதுமக்கள் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் விதம், இடையிடையே வட இந்திய சினிமா பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.(சந்தடி சாக்கில் மக்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் !!)

அதோடு மின்சாரமில்லாத கிராமங்களில் மின்சார வசதி ஏற்படுத்தும் விதம் உதவியை நாடியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் IPL சேர்மன் லலித் மோடி ஒரு கிராமத்தை தத்து எடுத்து அதற்கான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.

இயக்குனர் P. வாசுவின் குசேலன் திரைப்படத்தின் ஹிந்தி Remake ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்துள்ள நடிகர் ஷாருக்கானின் Billu Barber திரைப்படக்குழு 5 கிராமங்களுக்கு மின்சார உதவியளிப்பதாக ஷாரூக் உறுதியளித்தார்.

ஏறக்குறைய 2 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அவை அனைத்தும் IPCC (Intergovernmental Panel on Climate Change) சார்பாக நோபல் விருது பெற்ற திரு.பச்சோரி(Dr. R.K Pachauri) அவர்கள் துணை வேந்தராக பணிபுரியும் TERI(The Energy and Resource Institute) என்ற தனியார் தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, தென்னிந்திய பிராந்தியமான புதுச்சேரி பள்ளி ஒன்றில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக வினாடி வினாவும், மேற்கு பிராந்தியமான மும்பையில் தாதர் கடற்கரை சுத்தமாக்கும் பணியும், வடபிராந்தியமான தில்லியில் 24 மணி நேர தொடர் ஓட்டம் மற்றும் யமுனா நதியை சுத்தமாக்கும் பணியும் நடைபெற்றன.

Greenathon குறித்த மேலும் விவரங்கள் இங்கே

நாம் மனது வைத்தால் இந்தியாவை பசுமையாக்க முடியும் என்றே நம்புகிறேன்.

2 comments:

எட்வின் said...

கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், மற்றும் நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் வட இந்தியாவில் ஒரு கிராமத்திற்கான மின்சாரம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

எட்வின் said...

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்... கிராமங்களுக்கு இவர்களால் கொடுக்கப்படப் போகிற மின்சாரம் சூரிய ஒளி (solar electricity) மூலம் தயாராகுவது தான்.

Post a Comment

Related Posts with Thumbnails