‘நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே நமையும் தேடுகிறது’ என்கிற கூற்று ஒன்று உண்டு; அப்படியாக மார்ச் மாதத்தில் சென்னை எழும்பூர் ICSA புத்தக நிலையத்திற்கு அறம் வெளியீடான அம்பேத்கரிய தலித் நாவல் தொரசாமி குறித்து விசாரிக்கச் சென்ற போது தான் பஞ்சமி நில உரிமை என்கிற இந்த புத்தகத்தைப் பார்த்ததும், தேடி வந்த புத்தகம் தான் கிடைக்கவில்லை, சரி இதனை வாங்குவோம் என வாங்கி வைத்திருந்தேன்.
இப்போது அதனை வாசித்து முடித்ததும், அடடா, இது நம் வாழ்வியலையும் வரலாற்றையும் அல்லவா அச்சு அசலாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. நாம் இதனை எப்படி இத்தனை ஆண்டு காலம் அறிய முற்படமால் இருந்து விட்டோம் என கருத வைத்து விட்டது.
1892 இல் James Henry Apperley Tremenheere (திரமென்ஹீர்) அவர்களால் எழுதப்பட்டு அரசாணையாக வெளிவந்த ‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ தான் இந்த புத்தகம். இவற்றைத் தொகுத்து புத்தகமாக கொணர்ந்திருக்கும் வே. அலெக்ஸ் அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர்.
மிகைப்படுத்தல் இல்லாத, புனைவுகள் அற்ற புள்ளி விவரங்களின் தொகுப்பு இந்த ஆவணம். தாழ்த்தப்பட்டோரின் சமூக-பொருளாதார அவலங்களை, நிலங்களின் அரசியலை, அடிமைகளாக நடத்தப்பட்ட முறைமைகளை, மிராசுகளின் அப்பட்டமான அடக்குமுறைகளைக் குறித்து அறிந்துகொள்ள இந்த புத்தகம் எவர்க்கும் பெரும் உதவியாக இருக்கும்..
தாழ்த்தப்பட்டோரை சோற்றிற்காக மதம் மாறிய கும்பல் என்றும், தாழ்த்தப்பட்டோர் நலனிற்காக தொடர்ந்து போராடி அருட்தொண்டு புரிந்தவர்களை பாவாடை என்றும் பகடிக்கு உள்ளாக்கும் அறமற்றோர் இன்றும் தொடரத்தான் செய்கிறார்கள்.
நிலங்களை அபகரித்தும், ஆக்கிரமித்தும், பிறருக்கு கல்வியையும் மறுக்கும் இவர்களுக்கு, எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் நிலங்களை வழங்கி, கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் துவங்கி கிறிஸ்தவ அருட்தொண்டு புரிந்தவர்களை ஏற்றுக்கொள்வதென்பது சிரமமானது தான்.
அன்றைய மதராஸ் - திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஸ்காடலந்தைச் சார்ந்த ஆடம் ஆண்ட்ரூ, வில்லியம் கெளடி என்கிற இரு இறைப்பணியாளர்கள் செய்த அருட்பணிகள் கணக்கிலற்றவை. கூடவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரமென்ஹீர் அவர்களின் இந்த குறிப்புகள் பறையர் இன மக்களுக்கு நிலங்களை அளிக்கும் விதமாக சட்ட மாற்றங்களைக் கொண்டு வரவும், கல்வி வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அவ்விரு இறைப்பணியாளர்களும் பெரும்பங்கு வகித்திருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் வெஸ்லியன் திருச்சபையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Salvation Army என்று அறியப்படும் கிறிஸ்தவ நற்பணி அமைப்பை ஆரம்பித்த வில்லியம் பூத் அவர்களும் தனது ஆரம்ப காலங்களில் வெஸ்லியன் (ஜான் வெஸ்லி) கோட்பாடுகளுடன் உடன்பட்டவர் என்பதும் வரலாறு. தென் தமிழகத்தில் குறிப்பாக நாகர்கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக சல்வேசன் ஆர்மி பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.
அன்றைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல்லாக ‘பறையர்’ இருந்திருக்கிறது. பறையர்கள் காலங்காலமாக நிலங்களோடு இருந்தவர்கள் என்றும், இம்மண்ணின் மைந்தர்கள் எனவும், அடிமைகளாக, தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்கள் எனவும் திரமென்ஹீர் பதிவு செய்கிறார்.
மேலும் பறையர்கள் பலம் பொருந்தியவர்கள், கடின உழைப்பாளிகள், அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் மனைவிகள் முதல் பிள்ளைகள் வரை களப்பணி ஆற்றக்கூடிய திறன் மிக்கவர்கள், தமது நிலை உயர்ந்தால் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் உயர்த்தும் நல்லெண்ணம் உடையவர்கள் என்பதாகவும், மாறாக மிராசுகள் நில ஆக்கிரமிப்பு செய்து கொண்டு எவ்வித உடல் உழைப்பையும் தராமல், நிலங்களை தரிசுகளாகச் செய்கின்றனர் என்கிறது இப்புத்தகம்.
1876 இல் வட ஆற்காடு மாவட்டத்தில் பணியைத் துவக்கிய திரமென்ஹீர் அவர்கள் 1878 இல் சிறிது காலம் செங்கல்பட்டில் பணியிலிருந்தாலும் பறையரின மக்களைப் பற்றியதான இக் குறிப்புகளை முன்வைப்பது 1892 இல் தான். கிட்டத்தட்ட 16 ஆண்டு கால கள அனுபவங்களும், பறையர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களும் தான் அவரை இந்த ஆய்வறிக்கையைக் காத்திராமகப் பதிவு செய்ய உந்தியிருக்கின்றன.
பூனாவில் பிறந்து ஸ்காட்லாந்தில் மறைந்த அவர் பணி செய்த இடங்கள் பின்வருமாறு
வட ஆற்காடு | கோயம்புத்தூர் | பெல்லாரி | விசாகப்பட்டினம் | நீலகிரி | பெங்களூர் | செங்கல்பட்டு | கர்னூல் | திருநெல்வேலி | மதராஸ் | சேலம் | மலபார் | தஞ்சாவூர் |
தாழ்த்தப்பட்டோர், தலித் வரலாறு குறித்து அறிந்து கொள்ள முற்படுவோர், தாழ்த்தப்பட்டவர்களின் நலன் பேசுவோர் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
| புத்தகம் - பஞ்சமி நில உரிமை - ‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ | தொகுப்பாசிரியர் - வே. அலெக்ஸ் | பதிப்பகம் - நீலம் | பக்கங்கள் - 192 |
No comments:
Post a Comment