March 09, 2025

இளையராஜாவும் சிம்பொனியும் பெருங்கனவுகளும்!




 1970 லேயே தொலைதூர பயிற்சி வழியாக செவ்விசை (Classical) கிட்டார் இசைப்பதில் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் தங்கப்பதக்கம் பெற்ற இளையராஜா அவர்கள் அதன் பிறகு லண்டனுக்கு நேரடியாக வந்து பல கச்சரிகளை செய்திருந்தாலும் அவரது வேர்களான நாட்டுப்புற இசை, இந்திய செவ்விசை, கர்நாடக சங்கீதம் என  அவரது பின்னணிக்கு எவ்வித தொடர்புமில்லாத மேற்கத்திய இசையை சிம்பொனி வடிவில் இன்று (மார்ச் 8, 2025) Ilaiyaraaja Symphony No. 1 - (Valiant) என்ற பெயரில் Royal Philharmonic Orchestra வழியாக நிகழ்த்துவது தான் அவரது இசையின் உச்சம் எனலாம். 

இளையராஜா அவர்கள் மேலும் பல Symphony இசைக் கோர்வைகளைப் படைக்கக்கூடும். அதனாலேயே இந்த முறை Symphony No. 1 என பெயர் சூட்டியிருக்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.   

இளையராஜா அவர்கள் இந்த அளவு உயர்ந்து நிற்பதற்கு அவர் ஒருவரே காரணம். அவரைக் கேட்டால் இறைவனையும், ரசிகர்களாகிய நமையும் காரணம் சொல்வார். 

இசையின் மீதான அவரது தீரா காதலும், அர்ப்பணிப்பும், நேரம் தவறாமையும், இழப்புகளை இசையினாலே வென்றெடுத்த அற்புதத் திறமையும் எண்பத்தொரு வயதிலும் அவரை தொடர்ந்து இயங்க வைப்பதுமன்றி சாதனைகளையும் நாம் எண்ணுவதற்கும் அப்பாற்பட்ட இசைக் கோர்வைகளைப் படைக்கவும் செய்திருக்கின்றன என்பது தான் நிதர்சனம். 

இத்தனைச் சாதனைகளுக்குப் பின்னர் இன்றளவும் வெறுப்பை உமிழும் ஆதிக்க  மனோபாவம் உடையோரையும், வன்மமேறிய ஊடகங்களின் முட்டாள்தனமான கேள்விகளையும் அவர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை, கூடவே அவை அவரது இசை ராஜாங்கத்தை எவ்விதத்திலும் பாதிப்பதுமில்லை என்பது தான் ஆச்சர்யம். 

அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘முயன்றால் முடியாத கனவுகள் எதுவுமில்லை’. அதனை நானும் என் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன்; இப்போதும் அதனை நுகர்ந்து கொண்டே இசைஞானியின் இசைக்கோர்வைககளின் மாயாஜாலத்தின் ஊடே Eventim Apollo அரங்கிலிருந்து இதனைப் பதிவு செய்கிறேன்.

Royal Philharmonic Orchestra வலைத்தளம் இப்படியாக இசைஞானியை பதிவு செய்கிறது. 

The release of Symphony No. 1 – Valiant on 26th January 2025 marks a groundbreaking milestone in global music history as the first full Western classical symphony composed in the UK by an Indian artist. This momentous achievement highlights Ilaiyaraaja’s unparalleled artistry and cements his legacy as a trailblazer across cultures and genres.

பண்ணைபுரம் ஞானதேசிகன் இசைஞானி இளையராஜா அவர்கள் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரும் பேறு தான்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails