July 23, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 3



சமகாலத்தில் இப்படியானதொரு உலகளவிலான பெருந்தொற்று நமை ஆட்கொண்டிருப்பது பெருந்துயரம் தரும் நிகழ்வு என்றாலும், இது நமை தகவமைத்துக் கொள்வதற்கும், நமது அதீத சுயநலம் பிடித்த லட்சியங்கள் தவறென்பதை உணர்ந்து கொள்வதற்கும், நமை ஆளும் தலைமைகள் எப்படியானவை என்பதை புரிந்து கொள்வதற்கும், அவர்களின் பின்னிருக்கும் கயமைகளை அறிந்து கொள்வதற்கும் கூடவே அவர்களது இயலாமைகளை உலகறிந்து கொள்வதற்கும் நமக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு இது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் சார் நலன்கள் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; எனினும், குறிப்பிட்ட சில சுய தேவைகளைத் தாண்டி பொதுநலன் சார் விடயங்களிலும், சமூகம் சார் விடயங்களிலும் கண்களைக் கட்டிக் கொண்டிருப்போமானால் நமது பிறப்பிற்கு நியாயம் செய்து விட முடியும் எனத் தோன்றவில்லை.

தொற்றின் ஆரம்ப நிலையில் அறிவியல் பூர்வமாக அதனை அணுகாமல், தமிழகத்திற்குள் தொற்று வரும் வாய்ப்பில்லை; ஏப்ரல், மே மாதங்களின் வெயிலுக்கு எந்த கிருமியானாலும் பரவாது; வயது மூத்தோருக்கு மட்டும் தொற்றும்/ பாதிப்பை ஏற்படுத்தும் என அவையிலேயே கேலி பேசிக்கொண்டும், மெத்தனமாகவும் இருந்து விட்டு இப்போது முட்டிக்கொண்டிருக்கிறது அரசு.

அரசு மருத்துவமனைகளுக்கான முக்ககவசங்கள், தற்காப்பு உடைகள் கொள்முதலில் கூட பெருமளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. மறுபுறம், தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 ன் பெயரில் பெருங்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ரூபாய் 500 மதிப்பிலான தற்காப்பு உடைகளுக்கு ரூ. 2500 வரை கணக்கு காட்டப்படுகின்றன. நுகம் சுமக்கும் மக்களின் மீது தனியார் மருத்துவமனைகள் தமது வணிகத்தை வலிந்து திணிக்கின்றன என்பது கண்கூடு.

PPE எனப்படும் தற்காப்பு உடைகளின் தேவையிலும், அவற்றை அணிவதிலும் சில நகைமுரண்களும், பெருமுரண்களும் இருப்பதாகப் படுகிறது. இன்றைய தேதியில் எந்த மருத்துவமனை வளாகத்தை நெருங்கினாலும் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு நிற்கும் மருத்துவப் பணியாளர்களை நாம் காண முடியும். அவர்கள் அணிந்திருக்கும் தற்காப்பு உடையை அவர்களின் பணி நேரம் முடியும் மட்டும் அணிந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

முரண் என்னவென பார்ப்போம்… தொற்று இருக்கும் ஒரு நபரை, மருத்துவப் பணியாளர் ஒருவர் சோதனை செய்திருக்கிறார் அல்லது குறிப்பிட்ட அறையில் சென்று அனுமதித்து விட்டு வருகிறார் அல்லது கொரோனாப் பிரிவில் உடனிருந்து கவனிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பின்னர் அம்மருத்துவப் பணியாளர் அதே தற்காப்பு உடையுடன் தொற்று இல்லாத வேறொருவரை அணுகுதல் புதிய தொற்றிற்கு வழிவகுக்கத்தானே செய்யும்!! அதைத்தானே நம் சமூகம் தொடர்ந்து செய்கிறது.

மருத்துவப்பணியாளர்கள் அவ்விதம் செய்வதிலும் தவறில்லை… PPE என்பதற்கு Personal Protective Equipment – ‘தற்’காப்பு உடைகள் என்பது தானே பொருள். பிறர் எக்கேடு கெட்டால் என்ன!!  

எட்வின்
சென்னை
23/7/2020

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails