July 18, 2020

கோவிட் – 19 சில புரிதல்கள்


முடக்கல் ஆரம்பித்த மார்ச் ஏப்ரலிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயங்களும், அனுபவங்களும் பல உண்டு.

பொதுவாக தொற்று வியாதிகள் மக்கள் நெருக்கடி மிகு இடங்களிலும், சுகாதாரமில்லாத இடங்களிலும் இன்னும் அதிகமாக தொற்றவே செய்யும் என்பது பிறர் விளக்கித்தான் நமக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை.

அதிலும் பிற மாநிலங்களைக் காட்டிலும் உயர் மருத்துவக்கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் நமது சுகாதாரத் துறைக்கும், அரசுக்கும் நினைவூட்ட வேண்டிய அவசியமேயில்லை.

கைகளைக் கழுவுங்கள், தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள் என அறிவித்து விட்டு

மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை மாட்டிக் கொண்டு நடப்பதும்
அருகருகே நின்று கொண்டு விழாக்களில் பங்கு பெறுவதும்
முடக்குதலின் உள்ளேயே உள் முடக்குதல் அறிவிப்பதும்
கூடி நின்று கைதட்டுவதும், விளக்கேற்றுவதும்
மதுக் கடைகளை திறந்து விடுவதும்

என இருந்தால் தொற்று பரவாமல் என்ன செய்யும்!

சில நூறுகளாகத் தொற்று இருந்த போதும் சரி, கட்டுப்படுத்தவியலாத அளவிற்கு பரவிய  பின்னரும் சரி, பொது சுகாதாரத்தைக் குறித்து அரசும் மக்களும் எவ்வித கவலையும் பட்டதாகவோ! படுவதாகவோ! தெரியவில்லை.

குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன, அவைகள் முறையாக அகற்றப்படுவதில்லை, அவைகளில் எவ்விதமான கழிவுகள் கொட்டப்படுகின்றன என்பதும் எவருமறியார்; அதின் துர்நாற்றம் அதன் வழியாக கடந்து போகின்றவர்களின் முகக்கவசத்தையும் மீறி மூக்கிலடிக்கிறது.

மறுபுறம் மக்கள், தனி மனித இடைவெளியை முறையாகக் கடைபிடிப்பதில்லை, கறிக்கடைகளிலும். மீன் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் இடைவெளி விட்டு நில்லுங்கள் என Flex விளம்பரங்கள் கண் சிமிட்டினாலும், ‘அத ஏன் நாங்க செய்யப்போறோம்‘ என்கிற தொனியிலேயே கூடுகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு அடைப்பு என அறிவித்ததில் இருந்து மேற்குறிப்பிட்ட கடைகளில் சனிக்கிழமை அந்தி வேளைகளில் தள்ளுமுள்ளு என்பது வாடிக்கையாகிப் போனது. ‘சண்டேன்னா கறி’ அப்படிங்கிற எண்ணத்தில இருந்து கூட இன்னும் மீள முடியாத சமூகம் கொரோனா தொற்றிலிருந்து மீள இன்னும் காலம் இருக்கிறது!

முகக்கசவசங்கள் நாடிக் கவசங்களாகவே அணியப்படுகின்றன. அறிகுறிகள் தமக்கு இருந்தாலும், அதனை மறைக்கும் முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன; அதற்கு,  சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவோம் என்பதும், அரசினால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் படுவோம் என்பதும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன… இன்னும் உண்டு

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails