December 30, 2020

விழாக்காலப் பேறுகள்

 

நான் சார்ந்திருந்த சமூகத்தில் டிசம்பர் துவங்கி விட்டாலே விழாக்கால உணர்வு மேலிடுவது பலர்க்கும் பொதுவானது. 


வீடுகளில் குடில்கள், வண்ணக் காகிதங்கள், நட்சத்திரங்கள், கொடிகள் வடிவமைப்பதில் இளைஞர்கள் தீவிரம் காட்டுவார்கள். 


வாழ்த்து அட்டைகள் அனுப்புவதில் முதிர்ந்தவர்கள் ஈடுபாடு காட்டுவார்கள். கூடவே தங்களுக்கு பிறர் அனுப்புகிற வாழ்த்து அட்டைகளை வீடு முழுவதும் அலங்காரமாக தொங்க விட்டிருப்பர்.


வீட்டைச் சுத்தம் செய்வதில் துவங்கி, வீட்டிலேயே இனிப்பு, பலகாரங்களைச் செய்வதற்கானப் பணிகளில் பெண்கள் மும்முரமாக இருப்பர். 


இவையனைத்தும் எனைச் சூழ்ந்திருந்த போதிலும், வாழ்த்து அட்டைகள் அனுப்புவது தவிர்த்து மற்றவைகள் எதிலும் அதீத நாட்டமில்லாமலே இன்றளவும் கடந்து வந்திருக்கிறேன். 


புத்தாடை அணிவதில் கூட ஆர்வம் காட்டியதில்லை. (அது என்னாத்துக்குங்கிறேன் 😆) 


இன்றைய தேதியில் வீடுகளில் வெகு அரிதாகத் தான் இனிப்பு, பலகாரங்கள் செய்கிறார்கள்.


கைப்பட எழுதி அனுப்பும் வாழ்த்து அட்டைகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. 


அலங்காரப் பொருட்களையும் கடைகளிலேயே வாங்கி விடும் போக்கும் இருக்கின்றது. 


நமது நலனைக் குறித்து எண்ணுவதற்குக் கூட நேரமின்றி எதற்காகவோ ஓடிக்கொண்டு இருக்கிறோம். 


இப்படியானதொரு பொழுதில் தான்... வாழ்த்து அட்டைகளும்; கைப்பட எழுதி அனுப்பும் கடிதங்களின் முக்கியத்துவமும்; அவைகள் அளிக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடுத்த தலைமுறையினரையும் சென்றைடைய வேண்டும் என்கிற நோக்கில் மகர்களைக் கொண்டு எழுத வைத்தவை இவை. 


என்ன தான் கணினியிலும், கைபேசியிலும் பக்கம் பக்கமாய் எழுதினாலும், கையெழுத்துகள் தரும் மனநிறைவிற்கு அவை ஈடாகாது. 






No comments:

Post a Comment

Related Posts with Thumbnails