December 31, 2020

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்!

 

கடந்த பத்து ஆண்டுகளில் அளப்பெரிய மாற்றங்களை அடைந்திருக்கிறோம்.

செய்தித்தாள்களை/ வானொலியை/ தொலைக்காட்சியை நாம் திருப்பினால் மட்டுமே நுகர முடிகின்ற செய்திகள் பிரேக்கிங் நியூஸ்களாய்; ஆப்களில் நோட்டிபிகேசன்களாய் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

இவை போதாதென்று மெசஞ்சர்/வாட்சப் என நீளும் செயலிகளின் டிங் டிங் சத்தங்கள் நமை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றன.

வேலைகளை முடித்து விட்டு அமருகையில் கூட அடுத்த கணம் கரங்கள் போனைத் துழாவத் துவங்கி விடுகின்றன.

அலுவல்கள், இ. மெயில், என ஆன்லைனிலேயே இருந்து விட்டு, நண்பர்கள், உறவுகளிடம் கணினி வழியே பேசி அமர்ந்தாலும் பல நேரங்களில் மனம் வெறுமையாய் உணர்வதைத் தவிர்க்க முடிவதில்லை.

வீடுகளில் கனிவான உரையாடல்கள் நிகழ்வது வெகுவாகக் குறைந்து வருவதாகவே படுகிறது. பெற்றோர் - குழந்தைகள்; கணவன் - மனைவி; அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை என நீளும் உறவுகள் இன்னும் உறுதிப்படுதல் அவசியம். இல்லையென்றால் உறவுகளில் அடுத்த தலைமுறை பெரிதாக நம்பிக்கைக் கொள்ளுதல் அரிது.

எந்தவொரு உறவிற்கும் அடிப்படை, அன்பும்; பகிர்ந்து கொள்ளுதலும்; வெளிப்படைத்தன்மையுமே!

இரு பத்தாண்டுகளுக்கு முன்னர் எனது நாட் குறிப்புகளின் முகப்பில் எல்லாம் 'Only Caring and Sharing would keep us all alive and peaceful' என எழுதி வைத்திருப்பேன்.

இன்று அன்பையும், பொருட்களையும் பகிர்ந்து கொள்ளுகிறோமோ இல்லையோ... டிஜிட்டல் தகவல்களை Share செய்து முடங்கிக் கிடக்கிறோம்.

அன்பு தணிதல் ஒன்று போதும் மனதின் சமநிலை மாறுவதற்கும்; உறவுகள் உடைந்து போவதற்கும்.

பெற்றோர் இருந்தும், பெயருக்கென உறவுகள் இருந்தும் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத ஒருவரது மனது, சமநிலையற்றதாக தொடர்ந்து பயணிக்கும்.

ஏமாற்றம், வெறுப்பு, தனிமை, என ஒன்றின் மேல் ஒன்றாக சுமையேற்றப்படும் சமநிலையற்ற அந்த மனது ஏதாவது ஓர் புள்ளியில் தனது ஆற்றாமையை/ உள்ளக்கிடக்கைகளை அழுகை வடிவிலோ, கூச்சலிட்டோ, தன்னைத் தானே/பிறரைக் காயப்படுத்திக் கொள்வதன் மூலமாகவோ வெளிப்படுத்துகின்றது. உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் கூட இது தான் அடிப்படை.

இவ்வுலகை நம்பிக்கையாய் எதிர்கொள்ள கொஞ்சம் கவனிப்பும், அரவணைப்பும் தான் அடிப்படை!

சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரிடமும் பேசுங்கள், அவர்கள் மனதும் இலகுவாகும். மொபைலிலும், கணினியிலும் வாசிப்புகள், உரையாடல்கள் தொடர்ந்தாலும் ஒன்றாய் அமர்ந்து பேசுதல் மனங்களை அமைதிப்படுத்தும்.

அடுத்த பத்தாண்டுகள் இன்னும் மேம்பட வெறுப்பு தவிர்த்த அன்பு நம்மிடையே நிலைக்க வேண்டும்.

உடன் பயணித்த, பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பும், நன்றிகளும்.

31/12/2020
சென்னை

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails