June 11, 2025

கல்லறைகள் தரும் அமைதி - Brookwood - Tremenheere

கல்லறைகளுக்கு எப்போது சென்றாலும் அது தரும் அமைதி அலாதியானது. 

மரங்களும், மலர்களும், பறவைகளின் ரீங்காரமும் மயான அமைதி என்கிற சொல்லுக்கு பொருத்தமான அமைதியும் இன்னும் சற்று நேரம் இளைப்பாறிச் செல்லலாம் என தூண்டுவதில் வியப்பில்லை. 

அதிலும் நமக்கு பிரியமானவர்களது நினைவிடங்கள் இன்னும் பல நூறு நினைவுகளை மீள் பார்வைக்கு உள்ளாக்கி நமை இன்னும் ஆற்றுப்படுத்தும் என்பது அனுபவத்தால் நான் உணர்ந்த பேருண்மை. 

அப்படியாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக களத்தில் நின்று போராடி பல ஆயிரம் பக்கங்களை பதிவு செய்து 1912 இல் காலமாகிய டிரமென்ஹீர் என்கிற James Henry Apperley Tremenheere (30 October 1853 – 28 October 1912) அவர்களது எழுத்துகள் அவரது கல்லறையை பார்க்கத்  தூண்டியது. 

Brookwood எனும் இடத்தில் அவரது கல்லறை இருக்கிறது என்பது இணையவெளித் தேடலிலும், கல்லறை நிர்வாகத்தினருடனான உரையாடலின் வழியேயும் புலப்பட்டாலும், பல நூறு கல்லறைகளுக்கு இடையே ஒரு நூற்றாண்டு முன்னர் எழுப்பப்பட்ட அவரது கல்லறையை அடையாளம் காண செலவிட்ட மூன்று மணி நேர தேடல்கள் வெற்றி பெறாத வகையில் புதர் மண்டியும் கல்லறைகளில் கல்வெட்டுகளின் எழுத்துகள் உருக்குலைந்தும் காணப்பட்டது சற்றே நெருடல். 

கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கிறவர்களால் கூட தற்போது அடையாளம் காண இயலவில்லை என்றாலும் வருங்காலங்களில் அடையாளம் காண வழிவகை செய்வார்கள் என்கிற உறுதியுடன் கல்லறைத் தோடடத்திலிருந்து விடை பெற்றேன். 





அங்கிருந்தவாறே தொரசாமி அம்பேத்கரிய நாவலின் திறனாய்வு கூட்டத்தில் பங்கு பெற்றதும் நெகிழ்வான நிகழ்வு. 


கலெக்டர் / கிரிக்கெட்டர் / சமூக செயற்பாட்டாளர் / என்கிற பன்முகம் கொண்ட திரமென்ஹீர் அவர்களது பயணம் பூனா - Middlesex - Gloucestershire - செங்கல்பட்டு - நீலகிரி - Scotland - Surrey - Brookwood என்பதாக நிறைவுற்றாலும்  காலங்கள் கடந்தும் பேசப்படுவார் என்பதில் ஐயமில்லை.

பஞ்சமி நிலம் - பறையர் - அருட்தொண்டு சகோதரர்கள் - Wesleyan Concepts

‘நாம் எதைத் தேடுகிறோமோ அதுவே நமையும் தேடுகிறது’ என்கிற கூற்று ஒன்று உண்டு; அப்படியாக மார்ச் மாதத்தில் சென்னை எழும்பூர் ICSA புத்தக நிலையத்திற்கு அறம் வெளியீடான அம்பேத்கரிய தலித் நாவல் தொரசாமி குறித்து விசாரிக்கச் சென்ற போது தான் பஞ்சமி நில உரிமை என்கிற இந்த புத்தகத்தைப் பார்த்ததும், தேடி வந்த புத்தகம் தான் கிடைக்கவில்லை, சரி இதனை வாங்குவோம் என வாங்கி வைத்திருந்தேன்.

இப்போது அதனை வாசித்து முடித்ததும், அடடா, இது நம் வாழ்வியலையும் வரலாற்றையும் அல்லவா அச்சு அசலாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. நாம் இதனை எப்படி இத்தனை ஆண்டு காலம் அறிய முற்படமால் இருந்து விட்டோம் என கருத வைத்து விட்டது. 

1892 இல் James Henry Apperley Tremenheere (திரமென்ஹீர்) அவர்களால் எழுதப்பட்டு அரசாணையாக வெளிவந்த ‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ தான் இந்த புத்தகம். இவற்றைத் தொகுத்து புத்தகமாக கொணர்ந்திருக்கும் வே. அலெக்ஸ் அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர். 

மிகைப்படுத்தல் இல்லாத, புனைவுகள் அற்ற புள்ளி விவரங்களின் தொகுப்பு இந்த ஆவணம். தாழ்த்தப்பட்டோரின் சமூக-பொருளாதார அவலங்களை, நிலங்களின் அரசியலை, அடிமைகளாக நடத்தப்பட்ட முறைமைகளை, மிராசுகளின் அப்பட்டமான அடக்குமுறைகளைக் குறித்து அறிந்துகொள்ள இந்த புத்தகம் எவர்க்கும் பெரும் உதவியாக இருக்கும்.. 

தாழ்த்தப்பட்டோரை சோற்றிற்காக மதம் மாறிய கும்பல் என்றும், தாழ்த்தப்பட்டோர் நலனிற்காக தொடர்ந்து போராடி அருட்தொண்டு புரிந்தவர்களை பாவாடை என்றும் பகடிக்கு உள்ளாக்கும் அறமற்றோர் இன்றும் தொடரத்தான் செய்கிறார்கள். 

நிலங்களை அபகரித்தும், ஆக்கிரமித்தும், பிறருக்கு கல்வியையும் மறுக்கும் இவர்களுக்கு, எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் நிலங்களை வழங்கி, கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் துவங்கி கிறிஸ்தவ அருட்தொண்டு புரிந்தவர்களை ஏற்றுக்கொள்வதென்பது சிரமமானது தான். 

அன்றைய மதராஸ் - திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஸ்காடலந்தைச் சார்ந்த ஆடம் ஆண்ட்ரூ, வில்லியம் கெளடி என்கிற இரு இறைப்பணியாளர்கள் செய்த அருட்பணிகள் கணக்கிலற்றவை. கூடவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரமென்ஹீர் அவர்களின் இந்த குறிப்புகள் பறையர் இன மக்களுக்கு நிலங்களை அளிக்கும் விதமாக சட்ட மாற்றங்களைக் கொண்டு வரவும், கல்வி வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அவ்விரு இறைப்பணியாளர்களும் பெரும்பங்கு வகித்திருக்கின்றனர். 

அவர்கள் இருவரும் வெஸ்லியன் திருச்சபையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Salvation Army என்று அறியப்படும் கிறிஸ்தவ நற்பணி அமைப்பை ஆரம்பித்த வில்லியம் பூத் அவர்களும் தனது ஆரம்ப காலங்களில் வெஸ்லியன் (ஜான் வெஸ்லி) கோட்பாடுகளுடன் உடன்பட்டவர் என்பதும் வரலாறு. தென் தமிழகத்தில் குறிப்பாக நாகர்கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக சல்வேசன் ஆர்மி பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. 

அன்றைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல்லாக ‘பறையர்’ இருந்திருக்கிறது. பறையர்கள் காலங்காலமாக நிலங்களோடு இருந்தவர்கள் என்றும், இம்மண்ணின் மைந்தர்கள் எனவும், அடிமைகளாக, தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்கள் எனவும் திரமென்ஹீர் பதிவு செய்கிறார். 

மேலும் பறையர்கள் பலம் பொருந்தியவர்கள், கடின உழைப்பாளிகள், அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் மனைவிகள் முதல் பிள்ளைகள் வரை களப்பணி ஆற்றக்கூடிய திறன் மிக்கவர்கள், தமது நிலை உயர்ந்தால் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் உயர்த்தும் நல்லெண்ணம் உடையவர்கள் என்பதாகவும், மாறாக மிராசுகள் நில ஆக்கிரமிப்பு செய்து கொண்டு எவ்வித உடல் உழைப்பையும் தராமல், நிலங்களை தரிசுகளாகச் செய்கின்றனர் என்கிறது இப்புத்தகம். 

1876 இல் வட ஆற்காடு மாவட்டத்தில் பணியைத் துவக்கிய திரமென்ஹீர் அவர்கள் 1878 இல் சிறிது காலம் செங்கல்பட்டில் பணியிலிருந்தாலும்  பறையரின மக்களைப் பற்றியதான இக் குறிப்புகளை முன்வைப்பது 1892 இல் தான். கிட்டத்தட்ட 16 ஆண்டு கால கள அனுபவங்களும், பறையர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களும் தான் அவரை இந்த ஆய்வறிக்கையைக் காத்திராமகப் பதிவு செய்ய உந்தியிருக்கின்றன. 

பூனாவில் பிறந்து ஸ்காட்லாந்தில் மறைந்த அவர் பணி செய்த இடங்கள் பின்வருமாறு 

வட ஆற்காடு | கோயம்புத்தூர் | பெல்லாரி | விசாகப்பட்டினம் | நீலகிரி | பெங்களூர் | செங்கல்பட்டு | கர்னூல் | திருநெல்வேலி | மதராஸ் | சேலம் | மலபார் | தஞ்சாவூர் | 

தாழ்த்தப்பட்டோர், தலித் வரலாறு குறித்து அறிந்து கொள்ள முற்படுவோர், தாழ்த்தப்பட்டவர்களின் நலன் பேசுவோர் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

| புத்தகம் - பஞ்சமி நில உரிமை -  ‘செங்கல்பட்டு மாவட்ட பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ | தொகுப்பாசிரியர் - வே. அலெக்ஸ் | பதிப்பகம் - நீலம் | பக்கங்கள் - 192 |



May 25, 2025

இன்று இப்படியே சற்று ஆசுவாசமாய் - Lag Jaa Gale

பெருந்துயர்களில் இருந்து மீள எழுத்தையும், கலையையும், இசையையும் விட சிறந்த துணை வேறு என்ன இருந்து விடப் போகிறது 

எதையும், எவரையும் எப்போது வேண்டுமானாலும் இழப்போம் என்பது நம் ஆழ்மனங்கள் அறிந்தவை தான். ஒருவேளை அப்படியான எண்ணங்கள் நம் ஆழ்மனங்களில் இருப்பதாலேயோ என்னமோ அதன் தாக்கம் இல்லாமல் நமது புறம் சார்ந்த விசயங்களிலும், கேளிக்கைகளிலும், அன்றாட நடவடிக்கைகளிலும் இயல்பாக நாம் தொடர்ந்து இயங்குகிறோம். 


வலி, துயரம், ஆற்றாமை என்றிவை நம் ஆழ்மனங்களில் தேங்கிக் கிடந்தாலும் இவற்றை மிஞ்சி நிற்கின்ற பசி, வளர்சிதை மாற்றங்கள், இயற்கை உபாதைகள், சார்ந்திருப்போரின் நலம் பேணல் என ஏதாவது ஒன்றினால் நாம் இன்னமும் பிழைத்துக் கிடக்கிறோம் அல்லது நம் முந்தைய அனுபவங்கள் நமை பக்குவப்படுத்தியிருப்பதால் மனச் சமநிலை பிறழாமல் தொடர்கிறோம். 


இப்படியாக மனச் சமநிலை பிறழாமல் தொடர்வது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. குறிப்பாக வலி, துயர், ஆற்றாமை என்றிவைகள் சூழ் வட்டத்தினின்று வெளிவர இயலாதோர் இன்னமும் சோர்வுற்று அவைகளிலேயே உழன்று தமை வருத்திக் கொள்வதும் நிகழும் என்பது தான் இப்பிரபஞ்சத்தின் இன்னொரு பக்கம்.


அதிலும் சிறு வயதில் ஏற்படுகின்ற மனச்சிதைவுகள் ஒரு வகையில் வருங்காலங்களின் துயர்களை எதிர்கொள்ள பெரும்பாடங்களாக அமையும் என்றாலும், மறுவகையில் இவ்வாழ்க்கையின் மீதும், உறவுகளின்  மீதுமான நம்பிக்கையின்மையையும், எவ்வித செயற்பாடுகள் மீதுமான பிடிமானமற்றத் தன்மையையும் ஏற்படுத்தும் என்பது தான் பெருஞ்சோகம். 


‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்கிற ஜெயகாந்தன் கூற்று ஒன்று உண்டு, அது தான் நிதர்சனமும் கூட. இங்கு நமை, நம் செயல்களைப் பிடிக்காத பலர் உண்டு, நமக்குப் பிடிக்காதவர்களும் ஏராளம் உண்டு. எவரும் எவரையும், எல்லோராலும் எல்லா நேரமும் எல்லோரையும் திருப்திப் படுத்தி விடமுடியாது. அது  தான் இப்பிரபஞ்சத்தின் சூட்சுமம்.    


உலகம் எதிர்மறை சிந்தனைகளுடன் இருந்தாலும் நாம் நேர்மறையாகச் சிந்தித்தலையும், நன்மையானவைகளைப் பாராட்டாமல் விட்டுவிடுதலும் நன்றன்று. நன்றி மறத்தலும், நம் தோளோடு தோள் நின்று நமை உயர்த்துகிற எவரையும் மறத்தலும் அத்தனை எளிதல்ல, அப்படி இருந்து விடுதலும் முறையல்ல. 


நாளை இருப்போமா என்பதறியாத உலகில், நாளை சந்திப்போமோ என்பது உறுதியில்லாத நிலையில் இன்றைய தினத்தை முழுமையாக வாழ்ந்து விட்டுப் போதல் சிறந்தது. 

அப்படியான கருத்தாழத்தில் Raja Mehdi Ali Khan அவர்களால் எழுதப்பட்டு மதன் மோகன் அவர்கள் இசையில் லதா மங்கேஷ்கர் பாடிய Lag Ja Gale பாடலை ஒர் தந்தையும் மகளும் நேற்று பாடக் கேட்டேன். இந்த நேரத்தின் ஆகச் சிறந்த ஆறுதல் அந்த இசையும் அப்படியான வரிகளும் தான். 


இதில் குறிப்பிடும்படியான இன்னொரு விசயம், ராஜா மெஹ்தி அலி கான் Wazirabad (அன்றைய பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இன்றைய பாகிஸ்தான்) பகுதியில் பிறந்தவர்.


கலையும் இசையும் மதங்களுக்கும், பிரிவினைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை விட நிம்மதி என்ன வேண்டும் நமக்கு. வாழ்வோம், வாழ விடுவோம். 


பாடலின் இணைப்புகள்


Lata Mangeshkar Version with English Translation https://www.youtube.com/watch?v=YJHs3Sa73NQ


Sanam Acoustic Version

https://www.youtube.com/watch?v=HnLtNrvfZTU 


Papon Version 

https://www.youtube.com/watch?v=R1A8AbYPCaM


March 16, 2025

வாசிப்பு - The Grapes of Wrath

இத்தனை ஆண்டு கால வாழ்க்கையின் ஊடே நிகழ்ந்தவைகளில் ஆகச்சிறந்ததாக நான் கருதுவது வாசிப்பைத்தான்; இசையிலும், விளையாட்டிலும் அதீத ஆர்வம் இருந்து வந்தாலும் அவைகள் தராத உணர்வையும், நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வாசிப்பு தந்திருக்கிறது என்பேன். 

உலகைச் சரியாக அறிவதற்கும், முலாம் பூசிய போலியான வாழ்க்கை முறைகளை முன்னிறுத்தும் எவைகளின் (எவர்களின்) தாக்கமும் நமது யதார்த்தங்களைச் சிதைக்காமல் தொடர்வதற்கும் வாசிப்பு மிக மிக அவசியம். 

அப்படியான தொடர் வாசிப்பில் (கற்றலில்) John Steinbeck எழுதிய The Grapes of Wrath என்கிற ஆங்கில நாவலை சமீபத்தில் வாசித்து முடித்தேன்.

1939 ல் வெளியான இந்நாவலின் பக்கங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கடந்தும் அன்றைய அமெரிக்காவின் முகத்தை நம் கண் முன்னர் அப்படியே காட்சிகளாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அது தான் புத்தகங்களின் வல்லமை. 

முப்பதுகளில் அமெரிக்காவில் சம்பவித்த புழுதிப்புயல், புலம்பெயர்தல், வேலைவாய்ப்பின்மை, அதிகார வர்க்கத்தின் மூர்க்கம், மாநிலங்களுக்கு (மக்களுக்கு) இடையேயான சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை, பஞ்சம், பட்டினி, கிறிஸ்தவ மதத்தை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கைகள், இடது - வலது அரசியல், கம்யூனிசம், புரட்சி என இந்நாவல் தொடாத இடங்கள் இல்லை. 

குறிப்பாக ஜிம் கேசி (Jim Casey) என்கிற ஒரு கதாபாத்திரம் வருகிறது. கிறிஸ்தவப் போதகராக இருந்த அவர் வறட்சி, வறுமை, பட்டினியால் மக்கள் படுகிற அல்லல்களைப் பார்த்து அதனின்று வெளியேறி, வெறும் மதப்பிரச்சாரம் மக்களுக்கு விடுதலை தராது; பாவ - புண்ணியத்தைக் கடந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், சக மனிதனின் பசியைப் போக்குவதுமே உயர்ந்தது என இயங்குகிறார். அந்த பாத்திரம் அப்படியே Jesus Christ (JC = Jim Casey) பாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது என இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள். நாவலை தீவிரமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது அந்த கண்ணோட்டம் நமக்கு வராத அளவிற்கு நாவல் எழுதப்பட்டிருக்கிறது.  

ஆங்கிலத்தில் கதைகள், கட்டுரைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்திருந்தாலும் மனதிற்கு மிக மிக நெருக்கமாகிப் போகும் அளவிற்கு இப்படியான ஒரு நாவலை இப்போது தான் வாசித்திருக்கிறேன். 

அதற்குக் காரணம் என்னவாக இருக்குமென்றால் ஒடுக்குபவர்கள் Vs ஒடுக்கப்படுபவர்கள் தான்; கூடவே விவசாய வெளி, பயணம், புலம்பெயர்தல், வறுமை, கம்யூனிசம், Guitar, சாரோனின் ரோஜா எனப்படுகிற 'Rosasharn' கதாபாத்திரம் என நான் தொடர்பு படுத்திக் கொள்கிற பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

Grapes of Wrath குறித்து எழுத இன்னும் பல உண்டு. 

ஆங்கில இலக்கியப் படைப்புகளில் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் இது என பரிந்துரைத்த அண்ணன் அன்பு அவர்களுக்கு நன்றி. 

புத்தகம் - The Grapes of Wrath | எழுதியவர் - John Steinbeck | பக்கங்கள் - 528 | வெளியீடு - Penguin Books

March 09, 2025

இளையராஜாவும் சிம்பொனியும் பெருங்கனவுகளும்!




 1970 லேயே தொலைதூர பயிற்சி வழியாக செவ்விசை (Classical) கிட்டார் இசைப்பதில் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் தங்கப்பதக்கம் பெற்ற இளையராஜா அவர்கள் அதன் பிறகு லண்டனுக்கு நேரடியாக வந்து பல கச்சரிகளை செய்திருந்தாலும் அவரது வேர்களான நாட்டுப்புற இசை, இந்திய செவ்விசை, கர்நாடக சங்கீதம் என  அவரது பின்னணிக்கு எவ்வித தொடர்புமில்லாத மேற்கத்திய இசையை சிம்பொனி வடிவில் இன்று (மார்ச் 8, 2025) Ilaiyaraaja Symphony No. 1 - (Valiant) என்ற பெயரில் Royal Philharmonic Orchestra வழியாக நிகழ்த்துவது தான் அவரது இசையின் உச்சம் எனலாம். 

இளையராஜா அவர்கள் மேலும் பல Symphony இசைக் கோர்வைகளைப் படைக்கக்கூடும். அதனாலேயே இந்த முறை Symphony No. 1 என பெயர் சூட்டியிருக்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.   

இளையராஜா அவர்கள் இந்த அளவு உயர்ந்து நிற்பதற்கு அவர் ஒருவரே காரணம். அவரைக் கேட்டால் இறைவனையும், ரசிகர்களாகிய நமையும் காரணம் சொல்வார். 

இசையின் மீதான அவரது தீரா காதலும், அர்ப்பணிப்பும், நேரம் தவறாமையும், இழப்புகளை இசையினாலே வென்றெடுத்த அற்புதத் திறமையும் எண்பத்தொரு வயதிலும் அவரை தொடர்ந்து இயங்க வைப்பதுமன்றி சாதனைகளையும் நாம் எண்ணுவதற்கும் அப்பாற்பட்ட இசைக் கோர்வைகளைப் படைக்கவும் செய்திருக்கின்றன என்பது தான் நிதர்சனம். 

இத்தனைச் சாதனைகளுக்குப் பின்னர் இன்றளவும் வெறுப்பை உமிழும் ஆதிக்க  மனோபாவம் உடையோரையும், வன்மமேறிய ஊடகங்களின் முட்டாள்தனமான கேள்விகளையும் அவர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை, கூடவே அவை அவரது இசை ராஜாங்கத்தை எவ்விதத்திலும் பாதிப்பதுமில்லை என்பது தான் ஆச்சர்யம். 

அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘முயன்றால் முடியாத கனவுகள் எதுவுமில்லை’. அதனை நானும் என் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன்; இப்போதும் அதனை நுகர்ந்து கொண்டே இசைஞானியின் இசைக்கோர்வைககளின் மாயாஜாலத்தின் ஊடே Eventim Apollo அரங்கிலிருந்து இதனைப் பதிவு செய்கிறேன்.

Royal Philharmonic Orchestra வலைத்தளம் இப்படியாக இசைஞானியை பதிவு செய்கிறது. 

The release of Symphony No. 1 – Valiant on 26th January 2025 marks a groundbreaking milestone in global music history as the first full Western classical symphony composed in the UK by an Indian artist. This momentous achievement highlights Ilaiyaraaja’s unparalleled artistry and cements his legacy as a trailblazer across cultures and genres.

பண்ணைபுரம் ஞானதேசிகன் இசைஞானி இளையராஜா அவர்கள் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரும் பேறு தான்.

January 28, 2025

தப்பரும்பு - கவிதைத் தொகுப்பு - ப்ரிம்யா கிராஸ்வின்


ப்ரிம்யா கிராஸ்வின் அவர்கள் பேஸ்புக் வழியாகத் தான் பரிச்சயம். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியாது எனினும் அவரின் நண்பர்கள் பகிரும் அவரது பதிவுகளை வாசிக்கும் போதெல்லாம் அன்றாட நிகழ்வுகளை அவர் சொற்களில் விவரிக்கிற முறைமையை,  சொல்லாடல்களை ரசித்திருக்கிறேன். பின்னர் அவரது பதிவுகளை பின் தொடரவும் செய்திருந்தேன். கடந்த விடுமுறையில் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையம் சென்றிருந்த போது எதேச்சையாக ‘தப்பரும்பு’ கண்ணில் படவும் வாங்கிக் கொண்டேன். 


தப்பரும்பு கவிதைத் தொகுப்பு -  பிரிவாற்றாமையை, துயரை, தனிமையை சன்னமாக பேசுகிறது; சமயங்களில் உரக்கச் சொல்கிறது. 


வெறும் புலம்பல்கள் அல்ல அவை; கவித்துவமான சொற்களின் வழியாக வாழ்வனுபவங்களை முன்வைக்கிற தன்முனைப்பு அவை. பிரிவாற்றமையோடு நின்று விடாமல் கூடவே பூக்குட்டியையும், அன்றாட வாழ்வியலையும் கவிதைகளாக்குகிறார். 


அதில் ஒன்று


பூக்குட்டியும் புடவைத் தலைப்பும்!


தாத்தா வெற்றிலை போட்டுக்கொள்வார்... ஆச்சிக்கு கால் நீட்டி அமர வேண்டும்... அப்பாவுக்குப் பல்குச்சி...

அக்காளுக்கு இளையராஜா…

அன்னையின் புடவைத் தலைப்பை

தேடி உண்ட வாய் துடைத்தால்தான்

சாப்பிட்டு முடித்ததாய்

அர்த்தம் கொள்கிறாள் பூக்குட்டி!


சமகாலத்தில் நேசமித்ரன், நர்சிம், வெய்யில் இவர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். எனினும் பெண் ஒருவரின் பார்வையில் வாழ்வனுபவங்கள் கவித்துவம் பெறுகிற போது வாழ்வின் இன்னொரு கோணம் நமக்கு புலப்படுகிறது. 


உடன் பிறந்த சகோதரிகள் இல்லாத நிலையில், கலையில், எழுத்துகளில் பரிணமிக்கும் பெண்டிரை எனக்குப் பிடித்துப் போவதில் அதிகம் வியப்பில்லை. 


ப்ரிம்யா அவர்கள் இதற்கும் ‘ எழுதும் பெண் ’ என கவிதை ஒன்றை வைத்திருக்கிறார். ‘ எழுதும் பெண்ணை விரும்பாதீர் ’ என முடிக்கிறார் அந்த கவிதையை 🤭


ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் (M Phil) பட்டமும் பெற்ற ப்ரிம்யா அவர்கள் தமிழில் எழுதுகிறார் என்பது அழகிய முரண்! 


ஒவ்வொரு கவிதைக்கும் தனி ஒரு பதிவே போடலாம் என்கிற அளவிற்கு ஒவ்வொன்றும் மனதிற்கு நெருக்கமானவை. 


அவைகளில் இருள் என்கிற தலைப்பில் எழுதப்பட்ட…


நான் இருளைத்தான் இறுக்கமாய்ப் பற்றியுள்ளேன்.

அது என்னைக் கடைத்தேற்றும்!

இருளே

நட்சத்திரங்களைப் புலப்படுத்தும்!


என்கிற பகுதியும் 


கோளாறு விழிகள் தலைப்பில் எழுதப்பட்ட…


கத்திரி வெயிலில்

தட்டோட்டில் விழுந்த

மழைத்துளி போல

அரை நொடியில் உன்னை

உறிஞ்சிக்கொள்ளும்

கோளாறு

விழிகளை என் செய்ய?


என்கிற பகுதியும் அட! என அதிகம் ரசிக்க வைத்தன.


கூடவே, நெல்லையின் தகிக்கும் வெயிலின் இடையில் அரிதாக விழும் சிறு தூறல்களை கண நேரத்தில் விழுங்கும் தட்டோடுகளைப் பார்த்து, தண்ணீரைத் தெளித்து விளையாடிய பொழுதுகள் நினைவிற்கு வந்தன. 


சகா என்கிற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில்


தனிக்குவளை நீட்டும் மதியிழந்த ஊரில்

எனக்கென பெருமழை பெய்ததல்லவா உன் வானம்! 


என நம் சமூகத்தின் அவலத்தையும் எழுதி கூடவே ‘மதியிழந்த’ என கொட்டும் வைக்கிறார் 🤭


தப்பரும்பு - தவற / தனித்து விடப்பட்ட அரும்பு அல்ல! அது மலர்ந்து கமழும் வாழ்வியல் அனுபவங்கள்🌹 


அன்பும் மகிழ்ச்சியும் ப்ரிம்யா அவர்களே 🥰


புத்தகம் - தப்பரும்பு | எழுதியவர் - ப்ரிம்யா கிராஸ்வின் | பதிப்பகம் - வாசகசாலை | பக்கங்கள் - 122









January 11, 2025

புத்தகம் - 1865 இரட்சணிய சேனை உருவான ஆண்டு


தந்தையை இளவயதில் இழந்து, பசி பட்டினியில் உழன்று, அடகுக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் வறுமையில், மது போதைகளில், களிப்பாட்டங்களில், விபச்சாரத்தில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டுருவாக்கம் செய்ய என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்; அதனால் என்னென்ன இழி சொற்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளானார் என்பது தான் இப்புத்தகத்தின் சுருக்கம் என்றாலும், கேத்தரின் பூத் எனும் பெண் இல்லாமல் போயிருந்தால் அவரால் இவ்வளவு செய்திருக்க முடியுமா என்கிற கேள்வியையும் நமக்குள் எழுப்புகிறது. 

இன்னும் சொல்லப் போனால், Salvation Army என்னும் உலகளாவிய அமைப்பு தோன்றுவதற்கு வில்லியம் பூத்தை விட கேத்தரின் பூத் தான் அதிக சிரமங்களை மேற்கொண்டிருக்கிறார் என்பது விளங்குகிறது. 



அப்படியான இணையரை மார்பகப் புற்று நோய்க்கு பலி கொடுத்த பின்னர், தனது வயோதிபத்தில் கண் பார்வையை இழந்த பின்னரும் மக்களுக்காக தொடர்ந்து பிரசிங்கித்து வந்த மனிதரின் இறுதிச் சொல் ஒன்று போதும் அவரது அர்ப்பணிப்பை நமக்கு உணர்த்த அல்லது நமக்கும் கடத்த. 

Albert Orsborn இடம் வில்லியம் பூத் இப்படியாகச் சொல்கிறார் ‘கடவுளை ஏற்றுக்கொண்டு ஒரு முறைமைகளில் வாழும் மக்களை என் கூட்டங்களுக்கு தயவு செய்து கூட்டாதே! இந்நகரத்தின் கொடும் துயரத்தில் உழலும், பாவச்செயல்களில் மூழ்கிக் கிடக்கும் மக்களை கூட்டுவாயானால் அதுவே சாலச்சிறந்தது’ 

கெடுபேறாக, இன்று அப்படித்தான் பெரும்பான்மையான கிறிஸ்தவச் சமூகம் சபை கூடுதலோடு நின்று விடுகிறது. ஏழ்மையில், வறுமையில், தேவைகளில் இருக்கும் மக்களைத் தேடிச் செல்வோர் வெகு அரிது! 

புத்தகம் - 1865 The Year that made The Salvation Army

எழுதியவர் - Peter Farthing 

வெளியீடு - Carpenter Media, Sydney, Australia 

பக்கங்கள் - 134

Related Posts with Thumbnails