November 21, 2013

பதிவுலகம் - விக்கிபீடியா - தினகரன் - நான் - Plagiarism

பலரும் கருதுவது போன்று எழுதுவது அத்தனை எளிதல்ல. எழுதுவதற்கேற்ற சூழ்நிலையும், மனோநிலையும் எளிதாக அமைந்து விடுவதில்லை. எனினும் ஒருவர் எழுதுவதை அதற்குரிய அங்கீகாரமில்லாமல் மற்றொருவர் அப்படியே நகலெடுத்து அவர்களே எழுதியதைப் போன்ற ஒரு ,மாயபிம்பத்தை ஏற்படுத்துவதில் என்ன தான் சிறப்பிருக்கிறதோ தெரியவில்லை. இதனை ஆங்கிலத்தில் Plagiarism என்கிறார்கள்.

சில தினங்கள் முன்பு எதேச்சையாக தினகரன் இணையதளத்தில் சச்சினைக் குறித்த கட்டுரை ஒன்றை "சச்சின் பற்றி சில சுவாரசிய தகவல்" என்ற தலைப்பில் வாசிக்க நேரிட்டது, ஆரம்பத்திலேயே அந்த எழுத்தின் நடை, ஐந்து வருடங்கள் முன்னர் இந்த வலைப்பூவில் நான்  எழுதியது தான் எனப் புரிந்தது. கடைசி முற்றுப்புள்ளி வரை படித்து விட்டு உறுதியும் செய்து கொண்டேன்.

இத்தனைக்கும் அது நான் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ஒரு கட்டுரை. இதே கட்டுரையை தமிழ் விக்கிபீடியாவும் வெளியிட்டிருக்கிறார்கள் எனது மொழிபெயர்ப்புக்கு அளிக்க வேண்டிய தக்க மரியாதையை அளித்து. ஆனால் தினகரனோ எனது வலைப்பூவின் சுட்டியையோ அல்லது தமிழ் விக்கிப்பீடியாவின் சுட்டியையோ குறிப்பிடாமல் அவர்கள் எழுதியது போன்றொரு கானல்நீரை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

எழுத்திற்குரிய ஊக்குவிப்பும், அங்கீகாரமும் இருந்தால் அது எழுதுபவரை இன்னும் மெருகேறச் செய்யும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அது இல்லாமல் போகும் போது எழுதுபவர் மனமுடைந்து போவது சகஜமே.

சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எழுதுவதில் சிக்கல்கள் இருந்ததை மறுப்பதிற்கில்லை. எழுத்தாளன் என்று சொல்வதற்கில்லை. இத்தனை காலமும் முடிந்ததை எழுதி வந்திருக்கிறேன், மனதில் பட்ட விஷயங்களை எழுதியிருக்கிறேன், சில மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறேன், பிற இணையதள தகவல்களை பகிர்ந்திருக்கிறேன்..

இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் ஆவல். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எழுத்துக்களுக்கும் எழுத்துகளுக்கும் என்றும் மதிப்பிருக்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகளினூடே உணரமுடிகிறது.

எழுத்துக்கள் மும்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எழுத்துகளை முகர்வோர் மத்தியில். ஒரே எழுத்தை சிலர் சாதகமாகப் பார்க்கின்றனர், சிலர் பாதகமாக பார்க்கின்றனர் சிலர் நடுநிலையாகப் பார்க்கின்றனர்.

இம்மூன்று விதமான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது மனோபாவம் தான் ஒரு எழுத்தாளனுக்கு அழகு. எழுதுகிற அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

November 16, 2013

சச்சின் எனும் ஒரு எளிமையான மனிதருக்கு நன்றி

24 வருடங்கள் முன்பு கராச்சியில் நவம்பர் 15 அன்று தனது 16 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பித்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கரின் பயணம் அதே நவம்பர் 16 அன்று முடிவுக்கு வந்தது அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் முடிவிற்கு கனக்கச்சிதமாக எழுதப்பட்ட வரலாறு எனலாம். சச்சினின் சகாப்தம் அவரது சொந்த மண்ணிலேயே முடிவுக்கு வருவது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கின்ற மரியாதை என கூற முடியும். இது போலொரு மரியாதை சவுரவ், டிராவிட், லக்ஷ்மண் இவர்களுக்குக் கூட அளிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் இங்கு. 


ஏப்ரல் 24 ல் பிறந்த சச்சின், 24 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் 200 டெஸ்ட் ஆட்டங்கள், 463 ஒரு நாள் ஆட்டங்கள், 34347 சர்வதேச ஓட்டங்கள், 100 சதங்கள், 164 அரை சதங்கள், 200 விக்கெட்கள் என அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு அளித்த பங்கினை இந்த தலைமுறையை சார்ந்த எவராலும் மறக்கவியலாது. அவரது சாதனைகளை பட்டியலிட இந்த ஒரு பக்கம் போதாது.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்ட தர வரிசையில் முதலிடம், உலகக் கோப்பை வெற்றி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் அதிக ஓட்டங்களை எடுத்தவர், அதிக சதங்களை குவித்தவர், உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ஓட்டங்களை அடித்தவர், எந்த அணியினரும் பின்வாங்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிக அதிக சதங்களை எடுத்தவர், ரஞ்சி, துலீப், இரானி ஆட்டங்களில் முதல் ஆட்டங்களிலேயே சதங்களை அடித்தவர். பதினைந்தாவது வயதில் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை செய்தவர்.

டிராவிட் உடன் சேர்ந்து 1999 ல் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 331 ஓட்டங்கள் குவித்தவர், சவுரவ் கங்குலியுடன் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 22 சதங்களை எடுத்தவர். தொடர்ந்து 185 ஒரு தின ஆட்டங்களில் ஆடியவர் என எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின்.

இன்னும் எழுதி செல்லலாம் சச்சினின் பெருமைகளை. இத்தனை சாதனைகளை செய்திருந்தாலும் சச்சின் இன்னும் நம் உள்ளத்தில் உயர்ந்து நிற்பது அவரது சாதனைகளால் அல்ல அவரது எளிமையாலும், தன்னடக்கத்தாலுமே.


எத்தனையோ சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரகள் இந்தியாவிலும் பிற அணிகளிலும் இருந்திருக்கிறார்கள், எனினும் அனைவராலும் மதிக்கப்பட்ட, மரியாதை அளிக்கப்பட்ட, கவுரவப்படுத்தப்பட்ட ஒரே வீரர் சச்சினாகத்தான் இருக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டு பிராட்மேன், லாரா, ஷேன்வார்ன், வாசிம் அக்ரம் போன்றோர் சச்சினுக்கு செய்த மரியாதையும் அவருடன் ஆடிய சவுரவ் கங்குலி, டிராவிட் போன்றோர் நேரிலேயே வந்து மரியாதை செய்வதும். பிற விளையாட்டு நட்சத்திரங்களான லூயிஸ் ஹாமில்டன், ரோஜர் ஃபெடரர், மைக்கேல் ஷுமாக்கர் போன்றோர் இணையதளங்கள் மூலமாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதுமே.

கிரிக்கெட் இல்லாத ஒரு வாழ்வை சச்சினால் நினைத்துப் பார்ப்பது கடினம் தான் எனினும் இந்திய கிரிக்கெட்டிற்கு தொடர்ந்து சச்சின் பங்களிப்பார் என எதிர்பார்க்கலாம்.

சச்சின் இல்லாத கிரிக்கெட்டை பார்ப்பது எளிது ஆனால் கிரிக்கெட் இல்லாத சச்சினைப் பார்ப்பது கடினமே என கூறிய சச்சினின் மனைவி அஞ்சலியின் ஆதங்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சச்சினின் வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது விருப்பத்தோடு எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் நாம் வெற்றி பெற முடியும் என்பது தான்.

சச்சினை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணித்த, ஊக்குவித்த அவரது பெற்றோர்கள், சகோதரர் அஜித் டெண்டுல்கர், பயிற்சியாளர் அச்ரேக்கர், ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியை ராகினி தேசாய் இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சிறுவர்களை அவர்களுக்கு விருப்பமான கலைகளில் அல்லது விளையாட்டுகளில் அவர்களுக்கான முழு சுதந்திரத்தை அளித்து அவர்களை ஊக்குவித்தால் அவர்களும் நாளைய சச்சின்களே.

October 18, 2013

தாயும் நானே தங்க இளமானே Vs தேவனே நான் உமதண்டையில்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 16/10/2013 தேதி ஒளிபரப்பில் தற்செயலாக மதுமிதா பாடிய "தாயும் நானே தங்க இளமானே" என்ற பாடலை கேட்க நேர்ந்தது. பாடலின் ஆரம்பத்திலேயே இந்த மெட்டு "தேவனே நான் உமதண்டையில்" என்ற கிறிஸ்தவ பாடலின் மெட்டைப் போலல்லவா இருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டது.

எனினும் முழுப்பாடலையும் கேட்டு விட்டு ஒரு தீர்மானத்திற்கு வருவோம் என காத்திருந்தேன்; முழுப்பாடலும் முடிந்தது... சந்தேகமேயில்லாமல் 'தேவனே நான்' பாடலின் மெட்டும் 'தாயும் நானே' பாடலின் மெட்டும் ஒன்றே என தெளிவாகியிருந்தது..

பின்னர் கூகுளில் "தாயும் நானே" பாடலின் முழு விவரங்களை தேடினேன். 1982 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் ஜானகி அம்மையார் அவர்கள் ரஜினி காந்த் நடித்த "எங்கேயோ கேட்ட குரல்" என்ற திரைப்படத்திற்காக பாடிய பாடல் என்ற விவரம் கிடைத்தது. இதே மெட்டில் பி. சுசீலா அம்மையார் அவர்கள் குரலில் "இந்த மங்களம் செழிக்கவே" என்ற கிறிஸ்தவ திருமணப்பாடலும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவனே நான் உமதண்டையில் பாடல் மதுரை ஜில்லா பகுதிகளில் ஊழியம் செய்து வந்த போதகர். சந்தியாகு என்பவரால், Nearer, my God, To Thee என்ற ஆங்கிலப்பாடலைத் தழுவி எழுதப்பட்டது. எழுதப்பட்ட ஆண்டின் விவரம் தெரியவில்லை.

இவ்விதமாக கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த காலகட்டங்களில் பாடல்கள் நமது பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு தான் மெட்டமைக்கப்பட்டன. தஞ்சையை சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரி என்பவரும், பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ண பிள்ளை என்பவரும்  பல கிறிஸ்தவ கீர்த்தனைகளை  எழுதி இருக்கிறார்கள்.  அவற்றை பெரும்பாலும் இசைத்தட்டில் பாடியவர்கள் நடராஜ முதலியார் மற்றும்  ஜிக்கி அவர்கள். சில பாடல்களை பி.சுசீலா அவர்களும் பாடியிருக்கிறார்கள்.

கிறிஸ்தவரான எல்.ஆர்.ஈஸ்வரி (லூர்து மேரி ராஜேஸ்வரி ஈஸ்வரி) பாடிய அம்மன் பக்தி பாடல்கள் மிக பிரபலம். இந்துவான ஜிக்கி பாடிய கிறிஸ்தவ பாடல்கள் மிக பிரபலம்.  (சுசீலா அவர்கள் பாடிய எல்லா ஹிந்து, கிறிஸ்தவ,   பக்தி பாடல்களும் பிரபலம்.).

ஆனால் இன்று மதத்தின் பெயரால் அடித்துக்கொண்டு சாவதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது, மனிதன் என்று மதத்தை விட்டு மனிதத்தை தழுவுகிறானோ அன்று தான் இம்மண்ணுலகம் மகிழும்.

தேவனே நான் உமதண்டையில் பாடலும், தாயும் நானே பாடலும் "துஜாவந்தி" ராகத்தில் மெட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவையிரண்டில் எந்த பாடல் முதலில் மெட்டமைக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி: விஜய் தொலைக்காட்சி
விக்கிப்பீடியா


October 13, 2013

அகங்காரம் அநாகரீகம்

அமெரிக்கால செத்தாலும்
ஆப்பிரிக்கால செத்தாலும்

அண்டார்டிக்கால செத்தாலும்
ஆய்(ஐ)ரோப்பால செத்தாலும்

பாலைவனத்திலயே செத்தா கூட
பொணம் பொணம் தான

அமெரிக்கால செத்தாலும் பொணம் தான
அமிஞ்சக்கரைல செத்தாலும் பொணம் தான
அமெரிக்கா பொணம்னு சொல்லுவாங்களா - இல்ல
அமிஞ்சக்கரை பொணம்னு தான் சொல்லுவாங்களா

அப்புறமென்ன - நான்
அமெரிக்கால இருக்கேன் - நான்
ஆய்(ஐ)ரோப்பால இருக்கேன்னு
அசிங்கம் பிடிச்ச போல பேச்சு;
அவசியமா இதெல்லாம்!

அகங்காரத்த நான் எனும்
அகங்காரத்த என்னைக்கு
அழிக்கிறியோ அன்னைக்கு தான்
அகம் மகிழும்
அண்டமும் மகிழும்
ஆண்டவனும் மகிழுவான்

September 21, 2013

காகித கிடக்கைகள்

உணரப்படாத விசும்பல்கள்
கண்கள் காணாத கிறுக்கல்கள்
காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன
கடற்கரையில் சுண்டலுக்குப் பின்னர்
எவரோ எவருக்கோ எழுதிய கடிதம்

September 10, 2013

பெண்ணியம்? ஒரு கேள்விக்குறி

மின்னும் வளையலும்
ஜொலிக்கும் சங்கிலியும்
முகவுரை முடியுமுன்
முடிவுரை ஆகிப் போகின்றன
கடன் கொடுத்தவள் வரவே
முகூர்த்த வீட்டில்;

தாலியேறியதும் மூளியாகிறாள்
தான் பெற்ற இரவலுக்காக!
திருமணத்திற்கு வந்தவள்!!

July 15, 2013

தந்தி சேவைகள் - வரலாறு ஆகியது

ஜூலைத்திங்கள் பதினான்காம் தேதியோடு தந்தி சேவைகள் நிறுத்தப்படும் என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. மழையென்றும், வெயிலென்றும் பாராமல் தங்களது பணியை ஒரு சேவையாக செய்த ஒவ்வொரு தபால்துறை ஊழியனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.








Related Posts with Thumbnails