July 02, 2015

150 ஆவது ஆண்டில் - The Salvation Army - தொண்டு நிறுவனம்


1865 ல் கிழக்கு லண்டன் கிறிஸ்தவ பணி என்று ஆரம்பிக்கப்பட்டு இந்நாட்களில் இரட்சணிய சேனை (The Salvation Army) என்றறியப்படும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் 2/7/2015 ல் தனது 150 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

அந்த கொண்டாட்டங்களின் ஒருபாகமாக கிழக்கு லண்டனின் மிகப்பெரிய அரங்கான O2 Arena வில் 126 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடு இந்த மாதம் முதல் தேதி துவங்கி ஐந்தாம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

இரட்சணிய சேனை அமைப்பு இப்போது 126 நாடுகளில் தனது தன்னார்வ தொண்டுப் பணிகளையும், நலிந்தவர்களுக்கு கல்விச்சேவையையும், மருத்துவச் சேவைகளையும், பேரிடர் உதவிப்பணிகளையும்,  வழங்கிவருவதைக் குறித்து, இந்த அமைப்பைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவைப் பொருத்த வரையில் 1882 ல் பம்பாயில்  ஃப்ரெடரிக் பூத் டக்கர் என்ற ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட இதன் பணிகள் ஆரம்ப காலங்களில் பல நெருக்கடிகளையும், சவால்களையும் கடந்து வந்ததை மறுப்பதிற்கில்லை.

1853 ல் தமது தந்தை பீகாரில் துணை ஆணையாளராக இருந்த போது பிறந்த ஃப்ரெடரிக் பூத் டக்கர். 1881 ல் இங்கிலாந்தில் விடுமுறையில் இருந்த போது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தொண்டுப்பணிக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். அதுவரை அமிர்தசரஸ், சிம்லா ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளராகவும், உதவி நீதிபதியாகவும் பதவிகள் வகித்திருக்கிறார்.

உயர்பதவிகள் பல வகித்திருந்தும் தொண்டுப் பணிகளை செய்யும் படியாக தன்னை அர்ப்பணித்து தனது ஆங்கிலப் பெயரை ஃபக்கீர் சிங் எனவும் மாற்றி, பல தொலைவுகள் கடந்து, பசியிலிருப்போர், கைவிடப்பட்டோர், பிச்சைக்காரர்கள், மதுபான அடிமைகள் போன்றோர் மத்தியில் தொண்டு ஆற்றியிருக்கிறார்.

இவரைப் போன்றோரினாலும், தங்கள் வாழ்க்கையை நலிந்தவர்களுக்கென அர்ப்பணித்த ஆங்கிலேயர்களாலும், இந்தியர்களாலும் கட்டி எழுப்பப்பட்ட இரட்சணிய சேனை தொண்டு நிறுவனம் இன்று இந்தியாவில் நலிவடைந்து வருவதை கனத்த மனதுடன் பதிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.

குறிப்பாக தாயில்லா குழந்தைகள் பாதுகாப்பு மையம், ஊனமுற்றோருக்கான பட்டயப் படிப்பு பயிற்சி மையம், ஏழை எளியோருக்கான பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, இந்தியாவில் 133 ஆண்டு கால சரித்திரம் உடைய தொண்டு நிறுவனத்தை அதன் அழிவிற்கு நேராக வழிநடத்தி செல்லுகிறார்களோ என்ற அச்சம் எழாமலில்லை.

பூத் டக்கர் அவர்கள் 1891 ல் 'இருண்ட இந்தியா' என்ற புத்தகத்தில்  இந்தியா, பட்டினியினாலும், பஞ்சத்தினாலும், விபச்சாரத்தினாலும், குடி வெறியர்களாலும், சாதிப் பிரிவுகளினாலும் பெரும்பாடு படுகிறது என்று குறிப்பிட்டிருக்கும் நிலை 124 ஆண்டுகள் கழித்து இன்றும் தொடர்கிறது என்பது மிகவும் வருத்தப்படவும், கேவலப்படவும் வேண்டிய விஷயம்.

இத்தனை களேபரங்கள் மத்தியிலும் இந்த அமைப்பின் நற்பணிகளுக்கென்று தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி வரும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

150 ஆவது ஆண்டு  கொண்டாட்டங்களில் பங்கு பெற இந்தியாவில் இருந்து பிரயாணப்பட்டுச் சென்றிருப்பவர்கள், நாமும் லண்டன் சென்றோம், சில நினைவுகளைத் தேக்கினோம் என்ற மட்டில் நின்று விடாமல், புதிய உத்வேகத்தோடு தொண்டுப் பணிகளைத் தொடர்வார்களானால், 150 வருடங்கள் முன்னர் இந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்திய வில்லியம் பூத்தின் கனவு நனவாகும்.

May 04, 2015

பாமரனுக்கு பாதகமாகும் பந்த்/ முழு அடைப்பு போராட்டங்கள்

கடந்த மாதம் ஏப்ரலில் மட்டும் குறைந்தது மூன்று முறை (முழு அடைப்பு) போராட்டங்களை சந்திக்க நேரிட்டது; மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று. துறைக்கு ஒரு சங்கங்களை வைத்துக் கொண்டு போராட்டம் என கொடிகளை பிடித்து விடுகின்றனர். அல்லல் படுவதோ சாமானியன் தான்.

பாமரனின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்பதறிந்தும் வங்கி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முதலானவர்களும் இதர துறை ஊழியர்களும் போராட்டம் என எளிதாக அறிவித்துவிட்டு வீடுகளுக்குள் முடங்கி விடுகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி போக்குவரத்து சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை நேரில் பார்த்தவன் என்ற நிலையில் இதை பதிவு செய்வது அவசியமாகிறது. அதோடு கடந்த காலங்களில் இது போன்ற போராட்டங்களின் பாதிப்புகளையும் கடந்து வந்திருக்கிறேன்.

ஏப்ரல் 30 அன்று தமிழகத்தில் சில இடங்களில் பாதிப்பு இருந்தாலும், ஆளுங்கட்சியினர் சார்ந்த தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபடாததால் அத்தியாவசிய பேருந்துகள் இயக்கத்திலிருந்தது சற்று ஆறுதல் தான். இருப்பினும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தமிழக எல்லைக்கு சற்று அப்பால் கேரள எல்லைக்குள் பணிக்காகவும், வியாபரத்திற்காகவும், மருத்துவ வசதிக்காகவும், விமான பயணங்களுக்காகவும் பயணித்தவர்களின் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.


காரணம், தமிழக எல்லையான களியக்காவிளைக்கு அப்பால் பேருந்துகள் இயக்கப்படவில்லை, நான்கு சக்கர வாகனங்களும் கேரள எல்லைக்குள் நுழைய தயங்கிய நிலை தான் ஏப்ரல் 30 அன்று முழுவதும் இருந்து வந்தது. கேரள தமிழக எல்லைப் பகுதிகளைச் சார்ந்த சில வாகனங்கள் குறிப்பாக KL ல் துவங்கும் கேரள பதிவு எண்கள் கொண்டவையே அதிகம் இயக்கத்திலிருந்தன. அவையனைத்தும் மருத்துவமனை அவசரம்/திருமணம்/ஏர்போர்ட் அவசரம் என்று அச்சடிக்கப்பட்ட காகிதங்களை கண்ணாடிகளில் தாங்கிக்கொண்டே இயக்கப்பட்டன.

(கேரளம், 'ஹர்த்தால்' என்ற பெயரில் நடத்தும் முழு அடைப்புப் போராட்டங்களுக்கு பெயர் போனது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்)

ஏப்ரல் 30 ம் அன்று தேர்வு ஒன்றிற்காக திருவனந்தபுரம் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்தேன், குறிப்பிட்ட தியதியில் தான் வந்தாக வேண்டும் என முன்னரே அறிவுருத்தப்பட்டிருந்ததால் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம். பேருந்து நிலையம் சென்றால் களியக்காவிளை கடந்து கேரள எல்லைக்குள் பேருந்துகள் செல்லாது என்று அறிவித்து விட்டார்கள். நான்கு சக்கரவாகன ஓட்டுனரும் கைவிரிக்கவே வேறு வழியின்றி இரு சக்கர வாகனத்திலேயே சென்று வர வேண்டியதாகிப் போனது.


இவை போன்ற போக்குவரத்து முடக்கங்கள் பாமரனை பாதிப்பது ஒருபுறமென்றால் மருத்துவர்கள் போராட்டம் என்ற பெயரில் பாமரனின் உடல்நிலையை மேலும் கவலைக்கிடம் ஆக்குவதும், வங்கி ஊழியர்கள் போராட்டம் என்பதன் பெயரில் பண பரிவர்த்தனைகளை முடக்குவதும் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இவர்களின் நியாயமான கோரிக்கைகளை பணியிலிருக்கும் போது தான் அரசுக்கோ, அவர்கள் துறை சார்ந்த மேலிடங்களுக்கோ புரிய வைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பது தான் புரியவில்லை.


தங்களின் பணி நேரத்தில் தான் போராட்டங்கள் செய்ய வேண்டுமா? பணி நேரம் தவிர்த்த பிற நேரங்களில் ஏன் அரசாங்க பொது ஊழியர்கள் போராட்டம் செய்ய மறுக்கின்றனர்? இவர்களது கோரிக்கைகளை முறையாக அரசிடமும், பெருகியிருக்கும் ஊடகங்கள் மூலமும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தெரிவிக்கலாமே? 

April 21, 2015

குவைத் - நர்சிங்/ செவிலியர் பணியமர்த்தலில் கொள்ளை

இரு ஆண்டுகளாகவே குவைத்திற்கான செவிலியர் பணியமர்வில் நடைபெற்று வரும் பெருங்கொள்ளையை குறித்து எழுத வேண்டுமென மனதில் கருதி வந்திருந்தேன். செவிலியன் என்ற முறையிலும், குவைத்தில் ஐந்தரை ஆண்டு காலம் பணி செய்து வருகின்றதாலும் இந்த கொள்ளையைக் குறித்து நானறிந்தவற்றையும், பிற ஊடகங்கள் பிரசுரித்தவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக வலையேற்றுகிறேன்.

செவிலியப் பணி என்பது நமது மக்களால் இழிவான பணியாக கருதப்பட்ட காலம் போய் ஓரளவு அங்கீகரிக்கப்பட்ட பணியாக மாறி தற்போது பணம் கொழிக்கும் பணியாக மாறியிருக்கிறது (குறிப்பாக அயல்நாடுகளில்). எனினும், இன்றும் நம் குக்கிராமங்களில் செவிலியப்பணியை உயர்வாகப் பார்ப்பதும், குறிப்பாக பிரசவம் பார்க்கின்ற தாதிகளை பெரிதும் மதிப்பதும் தொடரத்தான் செய்கிறது.

தாதியர் பணிக்கு அயல்நாடுகளில் மிக அதிக வேலைவாய்ப்புகள் (குறிப்பாக வளைகுடா நாடுகளில்) தொடர்ந்து இருந்து வருகின்றன; இதற்கு முதல் காரணம் வளைகுடா நாடுகளில் அந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தாதியர் பணியை செய்ய தயங்குவதே! இந்த நிலைமை மெதுவாக மாறி வருகிறது என்றாலும், ஒரு மருத்துவமனையில் 2 சதவீதத்திற்கும் குறைவான அரேபியர்களே தாதியராக இருந்து வருகின்றனர்.

இதனால் அரபு நாட்டினர், தாதியர் பணிக்காக பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத்தான் சார்ந்திருக்கின்றனர். அதற்காக அவர்கள் இந்திய முகவர்களை (ஏஜென்ட்) நாட வேண்டிய கட்டாயம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முகவர்கள் பலர் பெரும் பணக் கொள்ளையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெர்ரி வர்கீஸ் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த முகவர்கள் ஒருபுறமிருந்தாலும், மற்ற பல முகவர்கள், அவர்களின் துணை முகவர்கள், அவர்களின் கீழ் முகவர்கள், விசா மற்றும் பயணக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளைகள் அடிக்கின்றனர்.

மற்ற வளைகுடா நாடுகளைக் காட்டிலும் பணமதிப்பு உயர்வாக இருப்பதாலும், வருமானமும் அதிகம் ஈட்டமுடியும் என்பதாலும் செவிலியர்கள் பலர் குவைத்திற்கு வருவதை முன்னுரிமையாகக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக குவைத் அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரிவதே அவர்களின் குறிக்கோள்; ஏனென்றால் அப்போது தான் 60 வயது வரை பணிக்கு பங்கம் வராது; வேலையும் நிரந்தரம்.

இத்தகைய (MOH-Ministry Of Health) அரசாங்க மருத்துவமனைகளுக்கு தாதியர்களை பணியிலமர்த்த 2004 ஆம் ஆண்டு, 2 லட்சம் ரூபாயில் ஆரம்பித்த இவர்களின் லஞ்சம் இன்று 22 லட்சமாக ஓங்கி நிற்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 10 லட்சம் என இருந்த (மு)க(ய)வர்களின் லஞ்சம் கடந்த ஏழு மாதங்களுக்குள் இரண்டு மடங்கு கூடி 20 லட்சம் என உயர்ந்திருப்பது பலரை அதிரச்செய்தது என்றாலும், அத்தனை லகரங்களை வாரியிறைத்து வேலையெடுக்கவும் தயங்காதவர்களைப் பார்க்கும் போது வியப்பாகத்தானிருக்கிறது.

கடந்த வருடத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 10 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணியிலமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான செவிலியர்கள் இந்தியாவிற்கு வெறுங்கையுடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முழுமையாக ஒரு வருடம் கூட அவர்கள் பணியிலமர்த்தப்படவில்லை. முகவர்களுக்கு வாரியிறைத்த 10 லட்சத்தைக் கூட மீண்டும் சம்பாதிக்க வழியில்லாமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றவர்களும் உண்டு.

இதனை பலரும் பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது, எனினும் முகவர்களுக்கிடையேயான போட்டி பொறாமையினால் தற்போது கேரளா, கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட 'அல் ஷராஃபா' நிறுவனம் சி.பி.ஐ யின் பிடியில் மாட்டியிருக்கிறது. இவர்கள் 300 கோடிக்கும் மேல் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
  
19,500 ரூபாய் மட்டுமே செவிலியர்களிடமிருந்து கட்டணமாக வாங்க வேண்டிய இம்முகவர்கள் 19.500 ஐ தொடர்ந்து மேலும் இரு பூஜ்யங்கள் சேர்த்து 19,50,000 ரூபாய் வசூலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்த தொகைக்கு சான்று ஏதும் அளிப்பதும் கிடையாது.

கிட்டத்தட்ட 1600 செவிலியர்களை இவ்விதம் குவைத்தில் பணியில் அமர்த்தியுமிருக்கிறார்கள். கணக்குப் பார்த்தால் எத்தனையோ கோடிகள் இவர்கள் விழுங்கியிருக்கிறார்கள். இந்த 'அல் ஷராஃபா' நிறுவனத்தின் நிர்வாகி வர்கீஸ் என்பவர், கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டிக்கு மிக நெருக்கமானவர் என கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்சமயம் இந்த ஊழல் சி.பி.ஐ ன் விசாரணையில் இருக்கவே, அடுத்த மாதம் முதல் குவைத்தில் தாதியர்கள் பணியமர்வு அரசாங்கத்தின் அனுமதி பெற்ற ODPEC/NORKA/OMC மூலம் மட்டுமே நடைபெற வேண்டுமேன அரசு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

இந்த ஊழலின் பின்புலத்தில் கேரளத்தைச் சார்ந்த முகர்வர்கள் மட்டுமல்லாது, கேரளத்தின் பிரபல அரசியல்வாதிகளுக்கும், குவைத் அரசு மருத்துவத்துறையைச் சார்ந்த சில பணியாளர்களுக்கும் பங்கு உண்டென்று சி,பி.ஐ ன் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

குவைத் அரசும் இந்த ஊழல் சம்மந்தமாக விசாரணை நடத்தப்படும் என கடந்த நவம்பர் மாதமே அறிக்கை வெளியிட்டிருந்தது. நேற்றைய தகவலின் படி இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட வர்கீஸ் குவைத்தில் தங்கியிருந்து விசாக்களை வழங்கி வருவதாக ஏசியாநெட் தொலைக்காட்சி தெரிவிக்கிறது. அவர் சரணடைய வேண்டி கேரள காவல்துறை விதித்த கெடு ஏப்ரல் 20 ஆம் தேதியோடு முடிந்த பின்னரும் அவர் சரணடையாததால் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ன் உதவியை கேரள காவல்துறை நாடியுள்ளது.

இத்தனைக்கும் நேற்று 20 ஆம் தேதி அவர் குவைத்தில் கைது செய்யப்பட்டு, ஷுவைக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் குவைத்தில் அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாகவும் ஏசியாநெட் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.

குவைத் தாதியர் பணியமர்வில் வளைகுடா நாடுகளில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இத்தனை கோடி அளவு ஊழல் நடைபெற முதல் காரணம் முகவர்களென்றாலும், எத்தனை லகரங்களானாலும் கொடுத்து பணியிலமரும் செவிலியர்களையும் குற்றம் சொல்ல வேண்டியது தான் இங்கு துரதிருஷ்டம்.

இதே 'அல் ஷராஃபா' நிறுவனத்தில் 2009 ஆம் ஆண்டில், குவைத்தில் தனியார் மருத்துவமனை பணி ஒன்றிற்காக கட்டணம் என நம்பி நான்கு லட்சம் ரூபாயை கொடுத்தவன் என்ற நிலையில் எனக்கும் வருத்தமுண்டு.

தகவல்கள் ஆதாரம் - ArabTimesOnline, KuwaitTimes, AsiaNet, MediaOneNews

February 19, 2015

விஜய் டிவி சூப்பர் சிங்கர் - சர்ச்சைகளும் புரிந்ததும்



பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட சூப்பர் சிங்கர் ஜூனியரின் நான்காவது சீசன் இறுதி சுற்று நாளை அதாவது பிப்ரவரி 20 ஆம் தியதி சென்னையில் அரங்கேறுவதாக இருக்கிறது.

இசையில் நாட்டம் இருப்பதாலும், தொடர்ந்து இந்த பாடல் நிகிழ்ச்சியை பார்த்து வருவதாலும் எனக்கு புரிந்த சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதால் தான் இந்த பதிவு.

சூப்பர் சிங்கர் 2006 ஆம் ஆண்டு துவங்கி கடந்த 8 ஆண்டுகளில் நான்கு சீனியர் போட்டிகள், நான்கு ஜூனியர் போட்டிகள் என எட்டு சீசனை நிறைவு செய்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் விளம்பரப்படுத்தலாலும், தொகுத்து வழங்கும் பாணியினாலும், நட்சத்திரங்களை அரங்கத்திற்குள் அழைத்து வருகிற திறமையினாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருப்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

பங்கு பெறும் போட்டியாளர்களை ஊக்குவிப்பதும், அனந்த் வைத்யநாதன் அவர்களைக் கொண்டு போட்டியாளர்கள் குரலை மென்மேலும் மெருகேற்றுவதும், சரிவர பாடமுடியாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் தருவாயிலிருக்கும் போட்டியாளர்களையும் அரவணைத்து செல்வதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தனித்துவம் என்று சொல்லலாம்.

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் எல்லா நிகழ்ச்சிகளைப் போன்றே சூப்பர் சிங்கராலும் சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை. நடுவர்கள் பாகுபாடு பார்க்கிறார்கள் எனவும், திறமைகளை இருட்டடிப்பு செய்து அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கே அதிக ஆதரவு தருகிறார்கள் என்பதும், பிற மாநிலத்தவர்களுக்கே (நடுவர்கள் உட்பட) அதிக வாய்ப்புகள் தருகிறார்கள் எனவும், அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் சூப்பர் சிங்கரின் அனைத்து சீசனிலும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

இந்த ஜூனியர் சீசன் 4 ல் அதிகமாக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது, 'தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என சொல்லிவிட்டு வேற்று மாநிலத்தவர்களின் குரலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.

ஆனால் இந்த சூப்பர் சிங்கரின் தாரக மந்திரமான 'தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்/ தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என்பது விஜய் தொலைக்காட்சியின் சாதாரண விளம்பரப்படுத்தல் தான்; கடந்த எட்டு வருடங்களாக தமிழகத்தில் இருந்து மட்டுமே போட்டியாளார்களை ஏற்றுக்கொள்வோம் என எங்கும் விளம்பரப்படுத்தி இருந்ததாக தெரியவில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து வரும் போட்டியாளர்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதென்பது விஜய் தொலைக்காட்சியின் வியாபார உக்தியாகத்தான் தெரிகிறது.

அதற்கான முதல் அச்சாரம் தான் முதல் சீசனில் வெற்றிபெற்றவரும், கேரள மாநிலம், கோட்டயத்தைச் சார்ந்தவருமான 'நிகில் மேத்யூ'. இதைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா, காஷ்மீர் என பிற மாநிலங்களில் இருந்தும் பலர் படையெடுக்கத் துவங்கினர்.

இந்த சீசனின் மற்றுமொரு சர்ச்சை நன்றாக பாடிக்கொண்டிருந்த அனுஷுயாவை போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்பது தான். இதற்கு வருத்தப்பட்டவர்கள், வசைபாடியவர்கள், தரம்தாழ்ந்து பேசியவர்கள் அனைவரும் அனுஷுயா தமிழ்நாட்டைச் சார்ந்தவர் இல்லை என்பதை மறந்து விட்டுத்தான் அவற்றை செய்திருக்க வேண்டும்!! ஒரு கட்டத்தில் நடுவர்களான சித்ரா, மனோ இருவர் மீதான தனிப்பட்ட தாக்குதல், கருத்து சுதந்திரம் என்பதன் பெயரில் எல்லை மீறிப் போகவே 'யூடியூப்' தளத்தில் இருந்து அந்த காணொளியையே நீக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது விஜய் தொலைக்காட்சி. 

தமிழக போட்டியாளர்களையே இந்த நிகழ்ச்சியில் வைக்க வேண்டும், மற்ற மாநிலத்தவர்களை எல்லாம் எதற்கு விஜய் தொலைக்காட்சி தூக்கி வைத்து கொண்டாடுகிறது என்று ஆதங்கப்பட்டவர்களே, அனுஷுயா பாண்டிச்சேரியைச் சார்ந்தவர் என்பதறியாமல் அவர் வெளியேற்றப்பட்ட போது அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொண்டார்கள்.

எனக்குப் புரிந்த வரை பிற மாநிலம் சார்ந்தவர்களை பங்குபெற செய்வது முழுக்க முழுக்க விஜய் தொலைக்காட்சியின் தாரக உரிமை மட்டுமல்லாது அது அவர்களின் வியாபார உக்தியும் கூ. அதோடு மொபைல் மற்றும் ஆன்லைன் ஓட்டு முறையும் அவர்களின் வியாபாரமே! (இல்லையென்றால் குறைவான வாக்குகளே வாங்கியிருந்த ஸ்ரீஷாவை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்து ஓட்டு போட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்களா!!) (ஸ்ரீஷா மிகச்சிறந்த குரல்வளமும், திறமையும் கொண்டவர் என்பதையும் ஒத்துக்கொண்டாக வேண்டும்) யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நிகழ்ச்சியை ரசிப்பதை விட்டுவிட்டு வசைபாடுவதும், வீண் தர்க்கங்களிலும் ஈடுபடுவதும் நேர விரயமே.

இறுதிப்போட்டியில் அனுஷுயா, ஹரிப்பிரியா அல்லது பரத் வெற்றி பெற அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது, நாளை இரவு தெரிந்து விடும்.


February 14, 2015

தில்லியின் காதல் நாயகன் - அரவிந்த் கெஜ்ரிவால்

பிப்ரவரி 14 - உலகம் இன்று, வேலன்டைன் தினம் - காதல் என உணர்வுப்பூர்வமாக அணுகிக்கொண்டிருக்க. தில்லியில் பாமரன் மீதான தன் காதலை ஆம் ஆத்மி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

46 வயதான அரவிந்த் கெஜ்ரிவால் எட்டாவது முதல்வராக தில்லியில் அமர்ந்திருக்கிறார் இன்று; அமர்ந்திருக்கிறார் என்று சொல்வதை விட பாமரனுக்காக தன் முதுகில் பாரத்தை ஏற்றியிருக்கிறார் என்று சொல்லலாம். 

வெகு விரைவாக ஒரு உயர்ந்த பதவியில் அவர் அமர்ந்து விட்டதாக தோன்றினாலும், இந்த உயரத்தை அடைய 14 வருடம் ஆகியிருக்கிறது என்றால் அது சற்று ஆச்சர்யமே! அவரது வெற்றிக்குப் பின் 14 ஆண்டு கால கனவும், கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், விடாத முயற்சிகளும், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத மன தைரியமும் இருந்திருக்கின்றன எனலாம்.

கூடவே, அனைத்து தருணங்களிலும் உறுதுணையாக இருந்த துணைவியும், மக்கள் நலனுக்காக களத்தில் நின்று தொடர்ந்து போராடி வரும் சக நண்பர்களும் அவரது பெரிய பலம். 

பதவியேற்பு விழாவின் போது அவர் பல விஷயங்களைக் குறித்து பேசியிருந்தாலும், என்னை அதிகம் கவர்ந்தது 'lal battis' குறித்த கருத்தே! அமைச்சர்களின் வாகனங்களில் உபயோகப்படுத்தும் சிவப்பு விளக்கை அதிகம் பயன்படுத்த மாட்டோம் என்பதே அது.

அதோடு ஆட்சி செய்கிறோம் என்ற பெயரில் தற்பெருமை கொள்வதோ, அமைச்சர் செல்கிறார் என்பதற்காக போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பதோ, பாமரனுக்கு இடையூறாக இருப்பதோ கூடாது எனவும் தெளிவாக பேசியிருக்கிறார். இது போன்ற அவர்களது எளிமையும், சாதாரண மனிதர்களையும் மதித்து நடக்கும் போக்கும் தான் அவர்களுக்கு வெற்றி பெற்று தந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

முன்னாள் கேரள முதல்வரான அச்சுதானந்தன் இது போன்றதொரு எளிமையான வாழ்க்கை முறையைத்தான் கடைபிடித்து வந்தார்; சாமானியர்களோடு கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார், காய்கறி சந்தைக்கு கூட அவரே சென்று வருவார். ஆனால் அங்கிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவரால் ஊழலை சமாளிக்க முடியவில்லை. 

அதே போன்றதொரு எளிமையை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பார்க்க முடிகிறது. ஊழலுக்கு எதிரான அவரது முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பதே பாமரனின் எதிர்பார்ப்பு. 

தில்லியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் பட்டதாரிகளும், இளைஞர்களுமே. இந்த படையினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சாமானியர்களுக்காக தற்போது நிர்ப்பந்தத்தால் அரசியலில் பிரவேசித்திருக்கும் கெஜ்ரிவால் அவர்கள் கல்கத்தாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படித்துக்கொண்டிருந்த சமயம் அங்கிருக்கும் அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்திலும், ராமகிருஷ்ணா மிஷனிலும் சிறிது காலம் ஆர்வலராக இருந்திருக்கிறார். 

பாமரனின் கஷ்டம் புரிந்த ஒருவரால் தான் இத்தனை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராட முடியும் என்பதற்கு இவைகளே சான்று.

பெரிய அரசு அலுவலகங்களிலிருந்து, சிறு அரசு பணிகள் நடக்கும் இடங்கள் வரை ஊழல் வியாபித்திருந்ததை சான்றிதழ்களில் அரசின் அங்கீகார முத்திரை வேண்டி தில்லி சென்றிருந்த போது கண்கூடாக காண நேர்ந்தது. இதற்கு முழுமுதற் காரணமே இடைத்தரகர்கள் தான். 

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதுமே இது போன்ற இடைத்தரகர்கள் பலர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் வருகின்றன; இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் தில்லி விரைவில் ஊழலற்ற மாநிலமாகும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

ஆம் ஆத்மியின் பாமரனனுடனான இந்த புதிய காதல் அத்தியாயம் சுபமாக முடிவுரை எழுதப்பட்டால் இன்னும் பல மாநில ஆட்சிமுறைகளுக்கு இது ஒரு முன்னுரையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பிரபல கருத்துச்சித்திர கலைஞர் ஆர். கே. லக்ஷ்மன் அவர்கள் இன்று இருந்திருந்து கெஜ்ரிவாலின் வெற்றியை பார்த்திருப்பாரானால் பெருமகிழ்ச்சியடைந்திருப்பார்.


January 31, 2015

இறை நம்பிக்கை எனும் இம்சை

எவரொருவர் தமது இறை நம்பிக்கையை
பிறரொருவர் மீது திணிக்க விழைகிறாரோ
பிறர் கேட்க வேண்டுமென
பட்டி தொட்டியெல்லாம் ஒலிபெருக்கி
வைத்து சாமானியர்களை சிரமத்திற்குள்ளாக்குகிறாரோ
அப்போதே அவரின் இறை நம்பிக்கை
கேள்விக்குறியதாகி விடுகிறது;

அவரது இறை கோட்பாடுகள் மேல்
அவருக்கு இருக்கிற நம்பிக்கையும்
குறைவுள்ளதாய் தோன்றச் செய்கிறது.

மெய்யான இறைநம்பிக்கை கொண்டவர்கள்
நல்லெண்ணம் கொண்டு பிறருக்கு
நல்லது செய்பவகளே ஒழிய
கூப்பாடும் கூத்தும் காண்பிப்பவர்கள் அல்லர்!

December 13, 2014

உண்மைகளற்ற கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டமும் - புரிதலும்


கிறிஸ்துமஸ் என்றதும் கிறிஸ்து என்ற மனிதர் நினைவிற்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் கொண்டாட்டங்களும், அலங்காரங்களும், விடுமுறைக்காலமும் நினைவில் வந்து செல்வதை மறுக்கவியலாது.

பிறப்பினால் கிறிஸ்தவன் என்பதால் சிறுவயதில் அந்த வயதிற்கான குதூகலமும், சந்தோஷமும், விடுமுறைக்கால மகிழ்ச்சியும் என்னையும் ஆக்கிரமித்திருந்தன. பதின்ம வயதின் பின்னாட்களில் கிறிஸ்துமஸும் அதனைச் சார்ந்த கொண்டாட்டங்களும் ஏன் என்ற வினா எழும்பத் தொடங்கியிருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை கொண்டாட்டங்களில் அதிக நாட்டம் கொண்டிருக்கவில்லை. பணமிருக்கிறவன் ஆடம்பரமாய் கொண்டாடுவதும், ஒன்றுமில்லாதவன் கையேந்துவதுமான காட்சிகள் என்னை யோசிக்க வைத்தன.

சிறுவயதில் டிசம்பர் மாத விடுமுறைக்காலமென்றால் புது ஆடை தைப்பதற்காக அவரவருக்கு விருப்பப்பட்ட துணி எடுக்க குடும்பமாக செல்வது வழக்கம். அந்த சமயங்களில் பல முறை நான் வருவதாயில்லை என தவிர்த்திருக்கிறேன். அம்மா எது எடுத்து வந்தாலும் அதனை தைத்துப் போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.

பதின்ம வயதில் பெற்றோர்களின் அறிவுரைப்படி விவிலியத்தை சற்று ஆழ்ந்து வாசிக்க நேரிட்டது. அது இன்றளவும் பல தெளிவுகளைப் பெற உதவுவதையும், பல விஷயங்களைக் கற்றுத் தந்திருப்பதையும் மறுப்பதிற்கில்லை.

டிசம்பர் மாத முதல் வாரத்திலேயே பலகாரங்கள், இனிப்பு பதார்த்தங்களை தயார் செய்யும் பணிகளை வீட்டில் ஆரம்பித்து விடுவார்கள். அவற்றில் காண்பித்த ஆர்வத்தை கூட கிறிஸ்துமஸ் குடில், மரம், நட்சத்திர விளக்கு போன்றவற்றில் காண்பித்ததில்லை.

வண்ண காகித கொடி கட்டுவதிலும், வாழ்த்து அட்டைகள் சேகரிப்பதிலும் ஆர்வமிருந்ததை மறுப்பதிற்கில்லை.  வீட்டில் மற்றவர்களுக்கு இருந்த கொண்டாட்ட மனோநிலையில் கால்பகுதி கூட எனக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

டிசம்பர் 25 ல் தான் கிறிஸ்து பிறந்தாரா என்பது உள்ளிட்ட பல காரணங்கள் தான் கொண்டாட்டங்களில் எனக்கு ஆர்வமில்லாமல் போக காரணம் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

சில வருடங்கள் முன்னர் வரை  அலங்காரத்திற்கென்று, கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம் என வீண் செலவுகளை நானும் செய்து வந்திருக்கிறேன் என்பதை மறுப்பதற்கில்லை.

கிறிஸ்துவில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், ஆடம்பர கிறிஸ்தவ கொண்டாட்டங்களில் எனக்கு இன்றுவரை நாட்டமில்லை. ஏழ்மையின் கோலமாய் பிறந்தார் என்று பிரசிங்கித்து விட்டு ஏழைகளைக் கண்டுகொள்ளாத கிறிஸ்தவ சமூகம் இன்றளவும் இருப்பதை மறுக்கவியலாது.

இயேசு கிறிஸ்து டிசம்பரில் தான் பிறந்தார் என்பதற்கு விவிலியத்தில் ஆதாரம் ஏதுமில்லை. அதோடு பனி பொழியும் குளிர் நிறைந்த இரவில் பிறந்தார் என்பதற்கும் விவிலியத்தில் ஆதாரம் இல்லை.

அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என லூக்கா 2:8 ல் எழுதியிருக்கிறபடி  வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் பார்த்தால் அது குளிர் நிறைந்த இரவாக இருக்கும் வாய்ப்புகள் இல்லை; காரணம் யூதேயாவில் பனிப்பொழிவு அதிகமாக  இருக்கும் டிசம்பர் மாதத்தில்  ஆடு மேய்க்கிறவர்கள் வயல்வெளிகளில் மந்தைகளைக் காக்கும் வழக்கம் கொண்டிருப்பதில்லை.

அதோடு இயேசு பிறந்த அந்த காலகட்டத்தில் குடிமதிப்பு என்ற கணக்கெடுப்பு எழுதப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படியான ஒரு கணக்கெடுப்பு கடுங்குளிர் காலத்தில் சாத்தியமில்லை என்கிறார்கள் வேத வல்லுனர்கள்.

இயேசு பிறந்த  தினத்தை கணக்கிடுகையில் லூக்கா முதல் அதிகாரத்தில் எழுதியிருக்கிற படி மரியாள் கர்ப்பந்தரித்த போது யோவானின் தாயாரான  எலிசபெத் ஆறு மாதம் கர்ப்பவதியாக இருந்திருக்கிறார், அந்த காலகட்டத்தை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகையில்  செப்டம்பர் இறுதி வாக்கில் இயேசு பிறந்திருக்கக்கக்கூடும் என்று கணிக்கிறார்கள்

இயேசுவின் பிறப்பு கடுங்குளிர் நேரத்திலோ, பனிப்பொழிவின்  போதோ இல்லை என்பது விவிலியத்தில் தெளிவாக இருக்க காலங்காலமாக கிறிஸ்து குளிரின் நடுவே பிறந்தார் எனவும், டிசம்பர் 25 தான் பனிப்பொழுவின் உச்சமாக இருப்பதால் அந்த தினத்தில் தான் அவர் பிறந்ந்திருக்கக்கூடும் எனவும் போதித்து வருபவர்களை என்னவென சொல்ல?

இது போன்ற வழிபாடுகளையும், கொண்டாட்டங்களையும் பாகன் வழிபாடு அல்லது பேய் வழிபாடு என்கிறார்கள். இது போன்ற கற்பனை வழிபாடுகள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்னரும் இருந்து வந்திருக்கிறது என விவிலியம் தெளிவாக கூறுகிறது.

இயேசு கிறிஸ்துவே இது போன்ற கற்பனைக் கதைகளை சாடியிருப்பதாகவும் வேதாகமத்தில் சான்றுகள் உண்டு. மத்தேயு 15:9 ல் மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என இயேசு ஆலயத்தின் மூப்பர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறுகிறார்.

புதிய ஏற்பாட்டில் இவ்விதம் எழுதியிருக்கிறதென்றால், பழைய ஏற்பாட்டில் பாகன் வழிபாடுகளையும் கற்களையும், மண்ணையும், மரங்களையும் வழிபடுவதை எதிர்த்து பல இடங்களில் எழுதியிருப்பதைக் காணலாம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எரேமியா 10:2-4 வரையான வசனங்கள் மிகத் தெளிவாக பாகன் மார்க்கத்தை சாடுகிறது. மரத்தை வெட்டி அதை பொன்னினாலும், வெள்ளியினாலும் அலங்கரிக்கிறார்கள் என்றும், அது வீணென்றும், அத்தகைய ஜனங்களின் வழிபாடு வீணாயிருக்கிறது எனவும் எழுதப்பட்டிருக்கிறது.

பசுமையான மரத்தை வெட்டி அதை அலங்கரித்து அது கீழே விழாமலிருக்கும் படி அதை கட்டி வைப்பது பாகன் சமூகத்தில் வழக்கம். குளிர்காலங்களில் இப்படி வைப்பதனால் அந்த மரம் அதிக நாட்கள் வாடாமலும் இருக்கும். இதையே கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரில் இன்றளவும் கிறிஸ்தவர்கள் சம்பிரதாயமாக செய்து வருகிறார்கள்.

இப்படி செய்வதெல்லாம் தவறென்று கிறிஸ்தவர்களுக்கு இப்போதோ இனிமேலோ எவரும் சொல்லத் தேவையில்லை; இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்னரே எரேமியா தீர்க்கத்தரிசி எப்போதோ சொல்லியிருப்பதாக வேதாகமம் குறிப்பிடுகிறது. (எரேமியா 10:2-4)

இவற்றினிடையில் பரிசுப்பொருள் பரிமாற்றம் என்பது வெறொருமாதிரியான வியாபாரமாக்கல். பணமிருக்கிறவர்கள் தங்களுக்கிடையே பரிசுப்பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்வதும், வாழ்த்து அட்டைகள் பரிமாறுவதும், கிறிஸ்துமஸ் மரங்கள் வாங்குவதும், பட்டாசு விற்பனையும், சான்டா கிளாஸ் ஆடை என்ற பெயரில் அதை வாங்குவதும் வியாபாரிகளுக்கு கொண்ட்டாட்டம்.

இவற்றினிடையில் ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகி வருவதும் தொடர்கிறது. 

கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட வேண்டுமென விவிலியம் உரைக்கவில்லை; அலங்காரம் செய்து ஆடம்பரமாக புசித்தும் குடித்தும் மகிழ்ந்திருங்கள் எனவும் விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. கிறிஸ்துமஸ் மரம் வைத்து, சான்டா கிளாசை வரவேற்று போஜனம் வழங்குங்கள் எனவும் வசனங்கள் இல்லை.

இப்படியாக வேதாகமம் உரைக்காதவற்றை பாகன் வழிபாடுகளின் வழியில் தொடர்ந்து பின்பற்றி வரும் கிறிஸ்தவர்களிடம் இவற்றையெல்லாம் சொன்னால் ‘போடா போக்கிரிப்பயலே’ உனக்கு  வேறு வேலையில்லை, என கேலியும் கிண்டலும் தான் செய்யப்போகிறார்களெனினும் இவற்றை/உண்மையை/ சத்தியத்தை பதிவு செய்ய வேண்டியது எனது கடமையாயிருக்கிறது.

கிறிஸ்து பிறந்ததில் உண்மையாகவே மகிழ்ச்சி கொண்டிருப்பவர்கள் பணமிருக்கிறவனுக்கு பரிசுப்பொருட்கள் வாங்கித்தருவதை விட்டு விட்டு, அன்றாடம் ஒருவேளை ஆகாரத்திற்கு பிரயாசப்படுகிறவனின்  தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

புத்தாடை வாங்குபவர்கள், பல்லாண்டுகளாக பழையவற்றையே அணிந்து வரும் பரம ஏழைக்கு புதிய ஆடை வாங்கித்தந்து மகிழுவார்கள்.இதைத்தான் விவிலியமும் உரைக்கிறது, ஆனால் கிறிஸ்தவர்கள் இன்றும் செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகத்தானிருக்கிறார்கள் என்பது தான் எனது வருத்தம்.

கிறிஸ்துமஸ் குறித்த தவறான புரிதல்களையும், கொண்டாட்டங்களையும் பார்க்கையில் “What is popular is not always right and what is right is not always popular“ என்ற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது.
Related Posts with Thumbnails