August 06, 2015

'நயா' பைசாவும் - சில புரிதல்களும்



சில தினங்கள் முன்பு பழைய நாணயங்களைக் குறித்த எண்ண ஓட்டங்களில் திளைத்திருந்த போது அணா என்ற சொல்லை உபயோகித்து எத்தனை வருடங்கள் கடந்து போயிற்று என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன்.

அணா என்ற சொல் வழக்கு 2000 ஆண்டு வரை இருந்ததாகவும் ஞாபகம். ஒரு அணா என்பது ஒரு ரூபாயின் 16 ல் ஒரு பங்கு என கணக்கிடப்பட்டு வந்ததாக வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன.

அணா முறை நாணயப் புழக்கத்தை தொண்ணுறுகளிலேயே அரசு விலக்கி வைத்த பின்னரும் அந்த சொல் வழக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இது, தமிழக அரசு விரைவுப் பேருந்து என பெயர் மாற்றம் செய்த பின்னரும்  திருவள்ளுவர் பேருந்து என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டது போன்றதே!


'அணா' நாணயப் புழக்கத்தை அரசு நடைமுறையில் இருந்து மாற்றிய பின்னரும் நாலணா (25 பைசா), எட்டணா (50 பைசா) என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2011 ல் நாலணா (25 பைசா) புழக்கத்தில் இருந்து முழுவதுமாக எடுக்கப்படுவதாக  அரசு  அறிவித்திருந்தது. எனினும் 50 பைசா இன்றளவும் பலராலும் எட்டணா என தொடர்ந்து அழைக்கப்பட்டுவருகிறது; 50 காசுகள் தொடர்ந்து புழக்கத்திலும் இருந்து வருகிறது.

1947 வரை பிரித்தானிய - இந்திய நாணய முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்து வந்த இந்தியா 1950 ல் தான் குடியரசு இந்தியாவின் முதல் நாணயத்தை அச்சேற்றி வெளியிட்டிருக்கிறது. ஒரு ரூபாய் என்பது 64 Pice அல்லது 16 அணா என நடப்பில் வைத்திருந்த இந்திய அரசு 1957 ல் தசமபின்ன (Decimal) முறையைப் பின்பற்றி 100 பைசா என்பது ஒரு ரூபாய் என்ற முறையில் புதிய காசு/நாணயத்தை வெளியிட்டது

பழைய அணா/பைஸ் முறைக்கும் புதிய பைசா/ரூபாய் முறைக்குமான வித்தியாசத்தை மக்களிடத்தில் எடுத்துரைக்கும் முறையாக 1957 - 1966 வரை புதிய நாணயங்கள் வெளியிடுகையிலெல்லாம் நயா (புதிய) பைசா என்றே விளம்பரம் செய்து வந்திருக்கிறது அரசு.

நயா பைசா என்பதில் 'நயா' என்ற சொல் இந்தி சொல் வழக்கு என்பது இந்தி பேசாத மாநில மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.

நயா என்றால் புதிய என்று அர்த்தப்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறையும் அரசு புதிய நாணயம் வெளியிடுகையில் 'நயா'/புதிய பைசா என அறிக்கை விடுகிறது.

நயா என்கிற சொல் வழக்கு மிகச் சாதாரணமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றும் பேசப்பட்டு வருவது சற்றே வியப்பு தான்.

இன்றும் கிராமப்புறங்களில் ,  பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டோர் பலர், எங்கிட்ட 'அஞ்சு நயா பைசா இல்லன்னு' சரளமாக பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

பலரும் நயா என்பதன் அர்த்தம் புரிந்து தான் பேசுகிறார்களா என்பதை அறியேன். எனினும் ஒரு வேற்று மொழி சொல் நாமறியாமலே அல்லது நம்மால் விளங்கிக் கொள்ளப்படாமலே நமக்குள் வியாபித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூபாய், ரூபா என்ற சமஸ்கிருத சொல் (ரூபா=ரூபம்=வடிவம்) என்பதையும், பைசாவும் Padamsa என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து மருவியது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

 --------------

புகைப்படங்கள் நன்றி
14gaam.com
coinquest.com

July 29, 2015

கலாம், எம் எஸ் வி மரணமும் ஊடகங்களின் மறுபக்கமும்

ஊடகங்களின் வளர்ச்சி ஒரு விதத்தில் நல்லது என்றாலும் சில ஊடகங்கள் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்று அவைகளின் மறுமுகத்தை காட்டி விடுகின்றன. ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்கள் மூலம் முரணான, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பலர் பகிர்வதும் இணையம் வளர்ந்த அளவு எண்ணங்கள் வளரவில்லை என்பதையும் உறுதி செய்கின்றன.

கடந்த இரு வார இடைவெளியில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் இயற்கை எய்தினர். இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் அவர்கள் இருவர் தொடர்பான செய்திகளை வெளியிட்டும், அவர்கள் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்டும் இருந்தன.

எம்.எஸ்.வி அவர்கள் இயற்கை எய்திய மறு தினம் தந்தி தொலைக்காட்சியில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களிடம், பெண் தொகுப்பாளர் ஒருவர், விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த 'காதோடு தான் நான் பாடுவேன்' பாடலைப் பாடுங்கன்னு கேக்கவும், பயங்கரமா கோபப்பட்டாங்க ஈஸ்வரி அவர்கள். அது குமார் இசையமைத்தது, இங்க தான் நீங்க தப்பு செய்றீங்க, இது கூட தெரியாம ஏன் கேள்வி கேக்குறீங்கன்னுட்டாங்க.

அத சமாளிச்சிட்டு அந்த பெண் தொகுப்பாளர், எம்.எஸ்,வி இசையில வேற எதாவது பாடல் பாடுங்கன்னு கேக்கப் போக, அதுக்கு ஈஸ்வரி அவர்கள் சொன்ன பதிலை அந்த தொகுப்பாளர் மறக்க பல நாட்கள் ஆகலாம். 'மனுசர் இறந்திட்டாருங்கிற துக்கத்தில இருக்கேன், இதில பாடல் பாட சொல்றீங்களேன்னு சொல்ல, சரி தொடர்ந்து பேசுவோம்னு எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் இணைப்பைத் துண்டித்து விட்டு தொடர்ந்து சங்கர் கணேஷ் அவர்களோடு உரையாடலைத் துவங்குகிறார்.

இது இப்படியெனில், கலாம் அவர்கள் மறைவிற்கு பின்னர் தேச, மத, இன, மொழி வேறுபாடின்றி மக்களும், ஊடகங்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த வேளையில், 24/7 செய்திகள் என விளம்பரம் செய்திருக்கின்ற சத்தியம் தொலைக்காட்சியில் நள்ளிரவு ஒரு மணி வரை கிறிஸ்தவ போதனைகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். காலை 6 மணி வரை அவரகளது ட்விட்டர் பக்கத்திலோ, இணையதளத்திலோ கலாம் அவர்களின் மறைவு குறித்த எந்த பதிவும் கிடையாது. இதிலிருந்தே இவர்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது.

மறுபுறம் சமூக வலைதளங்கள் வாயிலாக சில சுயநலம் பிடித்த பதிவர்கள், பழைய நிகழ்வுகளை, கலாம் அவர்களின் இறுதிப் புகைப்படம், அவர் பேசிய இறுதி காணொளி/லி எனவும்; அமெரிக்க அதிபர் ஒபாமா, கலாம் அவர்களின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க வருகிறார், கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதம் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருக்கிறது (திர்) என உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவு செய்து மக்களை ஏமாற்றினர்.



இது போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பதிவு செய்பவர்கள் தான் இப்படி என்றால், அதன் ஆழமும், உண்மையும் அறியாமல் பகிர்பவர்களும் ஆயிரக்கணக்கானோர் என்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இன்று பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பு இருக்கிறது. ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் பலரும் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. கூடவே, தகவல்களை உறுதிப்படுத்தாமல் பகிர்வதும் அதிகரித்திருக்கிறது. 2011 ஆம் வருடத்திலிருந்தே பலமுறை இந்த சமூக வலைதளங்கள் டாக்டர்.கலாம், ஆச்சி மனோரமா, இயக்குனர் பாலச்சந்தர் போன்ற பலரை  புரளிகளால் நோயாளிகளாக்கியிருக்கிறது, சாகடித்துமிருக்கிறது.

இது, 2014 ல் நான் நலமாய் இருக்கிறேன்  என மறைந்த அப்துல் கலாம் அவர்களே எழுதிய ட்வீட்.
  
சில like களுக்காகவும், share களுக்காகவும் சமூக வலைதளங்களில் இது போன்ற பொய் பிரச்சாரங்களை பதிவு செய்வது வாடிக்கையாகவே தொடர்கிறது. நாம் சுதாரிக்கவில்லையென்றால் நம்மையும் முட்டாளிக்கி விடும் இந்த இணைய சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

பி.கு: இதுவரை ஷில்லாங்கில், கலாம் அவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்ததோ, அவர் உரையாடிய இரு நிமிட உரையோ எங்கும் வலையேற்றப்படவில்லை.

July 28, 2015

அக்னிச்சிறகுகள் விரித்த அப்துல் கலாம் அவர்கள்

திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மறைந்து விட்டார் என்று இரவு 11 மணி அளவில் செய்தியறிந்ததும் முதலில் நம்பவில்லை. நல்ல உடல்திறனோடு இருந்தவருக்கு என்னவாயிற்று என்று யோசித்துக்கொண்டே தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக மாற்றி உறுதி செய்து கொண்டேன்.

அப்துல் கலாம் அவர்களைக் குறித்து நான் எழுதித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை எனினும் அவரது வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொண்ட சில பாடங்களை பதிவு செய்யவில்லையென்றால் அது எனது கடமையிலிருந்து மாறுவதாகப்படும்.

ராமேஸ்வரத்தில் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் எனினும் படிப்பில் அவரது கெட்டித்தனமும், கடின உழைப்பும், நேர்மையும், வைத்திருந்த உயர் பண்புகளும் தான் அவரை இந்த தேசத்தின் தலைவராகும் அளவிற்கு உயர்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டின் மூத்த விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் என்ற அகங்காரத்தையோ, தலைக்கனத்தையோ அவரது இறுதி மூச்சிருக்கும் வரை காண்பிக்கவில்லை என்பதை விட வேறு என்ன வேண்டும் அவரது எளிமையைப் பற்றிக் குறிப்பிட.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' கணியன் பூங்குன்றனார் பெருமையையும், தமிழின் பெருமையையும் உயர்த்திப் பேசியவர் என்பதையும், மரண தண்டனைக்கு எதிரான கொள்கையுடைவர் என்பதையும் மறந்து விட முடியாது. 



புத்தகங்கள் அதிகமாக வாசித்திராதவன் எனினும் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அக்னிச்சிறகுகள் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் முன் வாய்த்தது. ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட அந்த புத்தகம் சைனீஸ், ப்ரெஞ்ச் உட்பட பதிமூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றால் அவரது சுயசரிதை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பெரிது.



இன்றும் அவர் மறைவிற்கு நாடு, மொழி, இன, மத வேறுபாடின்றி இரங்கல் தெரிவிக்கிறார்கள் என்றால் அது அவரது எளிமைக்கும், திறமைக்கும், நற்பெயருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் மரியாதையே.

அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தாலும், இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவரைத் தனது குடும்பத்தில் ஒருவராக பாவிப்பதை அவரது மறைவிற்குப் பின் அறிந்து கொள்ள முடிகிறது.

அவர் மறைந்தாலும் அவரது புகழும், இந்திய விஞ்ஞானத்திற்கு அவர் அளித்த அறிவுக் கொடைகளும் என்றும் மறையாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

-----

பி.கு: ஜூலை 28 ஒரு தினம் மட்டும், வழக்கமாக Facebook பக்கத்தை தற்காலிகமாக செயலிழக்க செய்வது உண்டு, காரணம், அதில் கடமைக்கென வலையேற்றப்படும் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி எழுதுவதில் இருந்து தப்பிப்பதற்காக. அது போன்று Deactivate செய்து விட்டு மற்றுமொரு தலையங்கத்தில் எழுதலாம் என மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன், அதன் முன் தற்செயலாக தொலைக்காட்சியைக் கவனிக்கவே கலாம் அவர்களின் மறைவுச் செய்தி. அதனாலேயே இந்த பதிவு.

July 22, 2015

ஆன்மீகப் போலிகள்

மதம் கொண்டு, மதியின்றி. பிறரின் அமைதியான வாழ்க்கை முறைக்கு சில போலி ஆன்மீகவாதிகள் பங்கம் விளைவிப்பது சமீப காலமாக தொடர்வது வருத்தத்திற்குரியது. அப்படிப்பட்டவர்களை ஆன்மீகவாதிகள் என்று குறிப்பிடுவதை விட தீவிர(மத)வாதிகள் என்று குறிப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமதான் மாதம் கடந்த சில தினங்கள் முன்னர் தான் ஈத் நன்னாளுடன் முடிவிற்கு வந்தது. இஸ்லாமிய சகோதரர்களின் முதல் நோக்கமே சமாதானம் என்பது தான். எவரையும் சந்திக்கும் பொழுதும் முதலில் அவர்கள் சொல்வது உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் - 'அஸ் சலாம் அலைக்கும்' என்பதே.

ஆனால் அந்த சமாதானத்திற்கே உலை வைக்கும் படியான செயலை, அவர்களின் பிரார்த்தனை நேரத்தில், மசூதிக்குள்ளேயே வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த சம்பவம் குவைத் நாட்டில் சில வாரங்கள் முன்னர் நடந்தது; இது போன்றே பாகிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் என்று அறியப்படுபவர்களே!!! மதம் கொண்டு சமாதானத்திற்கு உலை வைக்கின்றனர்.

தமிழகத்திலும் ரமதான் மாதத்தில் இஸ்லாம் சகோதரர்களுக்குள்ளேயே அரிவாள் வெட்டுகளும், கொலைகளும் அரங்கேறியதை பத்திரிக்கைக்கள் வாயிலாக அறிய நேரிட்டது.

இந்த அனுபவங்களையும், சில பெயர் கிறிஸ்தவ, பெயர் இந்து நண்பர்களின் உபவாச, விரத காலங்களிலும் இருந்து பெற்ற அனுபவங்களையும் வைத்துப் பார்க்கையில் இம்மூன்று மதத்தினருமே நோன்பு, உபவாசம், விரதம் இருப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நன்றாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
  
பல கிறிஸ்தவர்கள் உபவாசம் என்பதன் பெயரில் ஒரு மாதம் முதல் நாற்பது நாட்கள் வரை புலால் உண்பதை நிறுத்துவார்கள், பிரார்த்தனையும் தவறாது செய்வார்கள், ஆனால் அவரகள் செயல்களில் எந்த வேறுபாடும் இருக்காது; தொடர்ந்து பொய் சொல்வதையும், பிறர்மேல் வீண் பழிகளை சுமத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். தேவையிலிருப்போருக்கு உதவி செய்யவும் மறுப்பார்கள். இவர்கள் போலிகளன்று வேறென்ன?

சில இந்து சகோதரர்கள், சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கிறேன், அதனால் மது அருந்துவதில்லை, புகை பிடிப்பதில்லை, பொய் சொல்லுவதில்லை என்று பக்தி மயமாக இருப்பார்கள். ஆனால் மாலையைக் கழற்றினால் மது அருந்தலாம், எந்த தீய பழக்கவழக்கங்களிலும் ஈடுபடலாம் தவறில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பலரது நோன்பும், உபவாசமும், விரதமும் இன்று இப்படித்தான் பெயரளவில் இருந்து வருகிறது. ஆன்மீகத்தை சரிவர புரிந்தவர்கள், வேதங்களை முறையாக பயின்றவர்கள் சமுதாயத்துடன் அமைதியை கடைபிடிக்கவே விரும்புவார்களன்றி சமுதாயத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

அனைத்து ஆன்மீக மார்க்கங்களும் சமாதானத்தையே பறைசாற்றி வருகின்றன, வேதங்களை சரியாக புரிந்து கொள்ளாத சில அரைவேக்காட்டு ஆன்மீக வாதிகள் தான் சமாதான குலைச்சலுக்கு காரணிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.

விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும், குறிப்பாக எளிதாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று ஓங்கியிருப்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவு திருட்டும், கொலைகளும், ஏமாற்றுதலும் நடந்து வருகிறது. கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் சாமியார்களும், போதகர்களும் இந்த வகையினரே.

மதவேறுபாடின்றி சக மனிதர்களை மனிதர்களாய் பாவிக்கும் நாள் வரும் வரை இங்கு மதத்தின் சாயலால் நடந்தேறும் வன்முறைகளுக்கு முடிவிருக்காது என்று தான் தோன்றுகிறது.


July 02, 2015

150 ஆவது ஆண்டில் - The Salvation Army - தொண்டு நிறுவனம்


1865 ல் கிழக்கு லண்டன் கிறிஸ்தவ பணி என்று ஆரம்பிக்கப்பட்டு இந்நாட்களில் இரட்சணிய சேனை (The Salvation Army) என்றறியப்படும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் 2/7/2015 ல் தனது 150 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

அந்த கொண்டாட்டங்களின் ஒருபாகமாக கிழக்கு லண்டனின் மிகப்பெரிய அரங்கான O2 Arena வில் 126 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடு இந்த மாதம் முதல் தேதி துவங்கி ஐந்தாம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

இரட்சணிய சேனை அமைப்பு இப்போது 126 நாடுகளில் தனது தன்னார்வ தொண்டுப் பணிகளையும், நலிந்தவர்களுக்கு கல்விச்சேவையையும், மருத்துவச் சேவைகளையும், பேரிடர் உதவிப்பணிகளையும்,  வழங்கிவருவதைக் குறித்து, இந்த அமைப்பைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவைப் பொருத்த வரையில் 1882 ல் பம்பாயில்  ஃப்ரெடரிக் பூத் டக்கர் என்ற ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட இதன் பணிகள் ஆரம்ப காலங்களில் பல நெருக்கடிகளையும், சவால்களையும் கடந்து வந்ததை மறுப்பதிற்கில்லை.

1853 ல் தமது தந்தை பீகாரில் துணை ஆணையாளராக இருந்த போது பிறந்த ஃப்ரெடரிக் பூத் டக்கர். 1881 ல் இங்கிலாந்தில் விடுமுறையில் இருந்த போது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தொண்டுப்பணிக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். அதுவரை அமிர்தசரஸ், சிம்லா ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளராகவும், உதவி நீதிபதியாகவும் பதவிகள் வகித்திருக்கிறார்.

உயர்பதவிகள் பல வகித்திருந்தும் தொண்டுப் பணிகளை செய்யும் படியாக தன்னை அர்ப்பணித்து தனது ஆங்கிலப் பெயரை ஃபக்கீர் சிங் எனவும் மாற்றி, பல தொலைவுகள் கடந்து, பசியிலிருப்போர், கைவிடப்பட்டோர், பிச்சைக்காரர்கள், மதுபான அடிமைகள் போன்றோர் மத்தியில் தொண்டு ஆற்றியிருக்கிறார்.

இவரைப் போன்றோரினாலும், தங்கள் வாழ்க்கையை நலிந்தவர்களுக்கென அர்ப்பணித்த ஆங்கிலேயர்களாலும், இந்தியர்களாலும் கட்டி எழுப்பப்பட்ட இரட்சணிய சேனை தொண்டு நிறுவனம் இன்று இந்தியாவில் நலிவடைந்து வருவதை கனத்த மனதுடன் பதிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.

குறிப்பாக தாயில்லா குழந்தைகள் பாதுகாப்பு மையம், ஊனமுற்றோருக்கான பட்டயப் படிப்பு பயிற்சி மையம், ஏழை எளியோருக்கான பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, இந்தியாவில் 133 ஆண்டு கால சரித்திரம் உடைய தொண்டு நிறுவனத்தை அதன் அழிவிற்கு நேராக வழிநடத்தி செல்லுகிறார்களோ என்ற அச்சம் எழாமலில்லை.

பூத் டக்கர் அவர்கள் 1891 ல் 'இருண்ட இந்தியா' என்ற புத்தகத்தில்  இந்தியா, பட்டினியினாலும், பஞ்சத்தினாலும், விபச்சாரத்தினாலும், குடி வெறியர்களாலும், சாதிப் பிரிவுகளினாலும் பெரும்பாடு படுகிறது என்று குறிப்பிட்டிருக்கும் நிலை 124 ஆண்டுகள் கழித்து இன்றும் தொடர்கிறது என்பது மிகவும் வருத்தப்படவும், கேவலப்படவும் வேண்டிய விஷயம்.

இத்தனை களேபரங்கள் மத்தியிலும் இந்த அமைப்பின் நற்பணிகளுக்கென்று தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி வரும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

150 ஆவது ஆண்டு  கொண்டாட்டங்களில் பங்கு பெற இந்தியாவில் இருந்து பிரயாணப்பட்டுச் சென்றிருப்பவர்கள், நாமும் லண்டன் சென்றோம், சில நினைவுகளைத் தேக்கினோம் என்ற மட்டில் நின்று விடாமல், புதிய உத்வேகத்தோடு தொண்டுப் பணிகளைத் தொடர்வார்களானால், 150 வருடங்கள் முன்னர் இந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்திய வில்லியம் பூத்தின் கனவு நனவாகும்.

May 04, 2015

பாமரனுக்கு பாதகமாகும் பந்த்/ முழு அடைப்பு போராட்டங்கள்

கடந்த மாதம் ஏப்ரலில் மட்டும் குறைந்தது மூன்று முறை (முழு அடைப்பு) போராட்டங்களை சந்திக்க நேரிட்டது; மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று. துறைக்கு ஒரு சங்கங்களை வைத்துக் கொண்டு போராட்டம் என கொடிகளை பிடித்து விடுகின்றனர். அல்லல் படுவதோ சாமானியன் தான்.

பாமரனின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்பதறிந்தும் வங்கி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முதலானவர்களும் இதர துறை ஊழியர்களும் போராட்டம் என எளிதாக அறிவித்துவிட்டு வீடுகளுக்குள் முடங்கி விடுகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி போக்குவரத்து சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை நேரில் பார்த்தவன் என்ற நிலையில் இதை பதிவு செய்வது அவசியமாகிறது. அதோடு கடந்த காலங்களில் இது போன்ற போராட்டங்களின் பாதிப்புகளையும் கடந்து வந்திருக்கிறேன்.

ஏப்ரல் 30 அன்று தமிழகத்தில் சில இடங்களில் பாதிப்பு இருந்தாலும், ஆளுங்கட்சியினர் சார்ந்த தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபடாததால் அத்தியாவசிய பேருந்துகள் இயக்கத்திலிருந்தது சற்று ஆறுதல் தான். இருப்பினும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தமிழக எல்லைக்கு சற்று அப்பால் கேரள எல்லைக்குள் பணிக்காகவும், வியாபரத்திற்காகவும், மருத்துவ வசதிக்காகவும், விமான பயணங்களுக்காகவும் பயணித்தவர்களின் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.


காரணம், தமிழக எல்லையான களியக்காவிளைக்கு அப்பால் பேருந்துகள் இயக்கப்படவில்லை, நான்கு சக்கர வாகனங்களும் கேரள எல்லைக்குள் நுழைய தயங்கிய நிலை தான் ஏப்ரல் 30 அன்று முழுவதும் இருந்து வந்தது. கேரள தமிழக எல்லைப் பகுதிகளைச் சார்ந்த சில வாகனங்கள் குறிப்பாக KL ல் துவங்கும் கேரள பதிவு எண்கள் கொண்டவையே அதிகம் இயக்கத்திலிருந்தன. அவையனைத்தும் மருத்துவமனை அவசரம்/திருமணம்/ஏர்போர்ட் அவசரம் என்று அச்சடிக்கப்பட்ட காகிதங்களை கண்ணாடிகளில் தாங்கிக்கொண்டே இயக்கப்பட்டன.

(கேரளம், 'ஹர்த்தால்' என்ற பெயரில் நடத்தும் முழு அடைப்புப் போராட்டங்களுக்கு பெயர் போனது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்)

ஏப்ரல் 30 ம் அன்று தேர்வு ஒன்றிற்காக திருவனந்தபுரம் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்தேன், குறிப்பிட்ட தியதியில் தான் வந்தாக வேண்டும் என முன்னரே அறிவுருத்தப்பட்டிருந்ததால் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம். பேருந்து நிலையம் சென்றால் களியக்காவிளை கடந்து கேரள எல்லைக்குள் பேருந்துகள் செல்லாது என்று அறிவித்து விட்டார்கள். நான்கு சக்கரவாகன ஓட்டுனரும் கைவிரிக்கவே வேறு வழியின்றி இரு சக்கர வாகனத்திலேயே சென்று வர வேண்டியதாகிப் போனது.


இவை போன்ற போக்குவரத்து முடக்கங்கள் பாமரனை பாதிப்பது ஒருபுறமென்றால் மருத்துவர்கள் போராட்டம் என்ற பெயரில் பாமரனின் உடல்நிலையை மேலும் கவலைக்கிடம் ஆக்குவதும், வங்கி ஊழியர்கள் போராட்டம் என்பதன் பெயரில் பண பரிவர்த்தனைகளை முடக்குவதும் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இவர்களின் நியாயமான கோரிக்கைகளை பணியிலிருக்கும் போது தான் அரசுக்கோ, அவர்கள் துறை சார்ந்த மேலிடங்களுக்கோ புரிய வைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பது தான் புரியவில்லை.


தங்களின் பணி நேரத்தில் தான் போராட்டங்கள் செய்ய வேண்டுமா? பணி நேரம் தவிர்த்த பிற நேரங்களில் ஏன் அரசாங்க பொது ஊழியர்கள் போராட்டம் செய்ய மறுக்கின்றனர்? இவர்களது கோரிக்கைகளை முறையாக அரசிடமும், பெருகியிருக்கும் ஊடகங்கள் மூலமும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தெரிவிக்கலாமே? 

April 21, 2015

குவைத் - நர்சிங்/ செவிலியர் பணியமர்த்தலில் கொள்ளை

இரு ஆண்டுகளாகவே குவைத்திற்கான செவிலியர் பணியமர்வில் நடைபெற்று வரும் பெருங்கொள்ளையை குறித்து எழுத வேண்டுமென மனதில் கருதி வந்திருந்தேன். செவிலியன் என்ற முறையிலும், குவைத்தில் ஐந்தரை ஆண்டு காலம் பணி செய்து வருகின்றதாலும் இந்த கொள்ளையைக் குறித்து நானறிந்தவற்றையும், பிற ஊடகங்கள் பிரசுரித்தவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக வலையேற்றுகிறேன்.

செவிலியப் பணி என்பது நமது மக்களால் இழிவான பணியாக கருதப்பட்ட காலம் போய் ஓரளவு அங்கீகரிக்கப்பட்ட பணியாக மாறி தற்போது பணம் கொழிக்கும் பணியாக மாறியிருக்கிறது (குறிப்பாக அயல்நாடுகளில்). எனினும், இன்றும் நம் குக்கிராமங்களில் செவிலியப்பணியை உயர்வாகப் பார்ப்பதும், குறிப்பாக பிரசவம் பார்க்கின்ற தாதிகளை பெரிதும் மதிப்பதும் தொடரத்தான் செய்கிறது.

தாதியர் பணிக்கு அயல்நாடுகளில் மிக அதிக வேலைவாய்ப்புகள் (குறிப்பாக வளைகுடா நாடுகளில்) தொடர்ந்து இருந்து வருகின்றன; இதற்கு முதல் காரணம் வளைகுடா நாடுகளில் அந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தாதியர் பணியை செய்ய தயங்குவதே! இந்த நிலைமை மெதுவாக மாறி வருகிறது என்றாலும், ஒரு மருத்துவமனையில் 2 சதவீதத்திற்கும் குறைவான அரேபியர்களே தாதியராக இருந்து வருகின்றனர்.

இதனால் அரபு நாட்டினர், தாதியர் பணிக்காக பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத்தான் சார்ந்திருக்கின்றனர். அதற்காக அவர்கள் இந்திய முகவர்களை (ஏஜென்ட்) நாட வேண்டிய கட்டாயம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முகவர்கள் பலர் பெரும் பணக் கொள்ளையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெர்ரி வர்கீஸ் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த முகவர்கள் ஒருபுறமிருந்தாலும், மற்ற பல முகவர்கள், அவர்களின் துணை முகவர்கள், அவர்களின் கீழ் முகவர்கள், விசா மற்றும் பயணக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளைகள் அடிக்கின்றனர்.

மற்ற வளைகுடா நாடுகளைக் காட்டிலும் பணமதிப்பு உயர்வாக இருப்பதாலும், வருமானமும் அதிகம் ஈட்டமுடியும் என்பதாலும் செவிலியர்கள் பலர் குவைத்திற்கு வருவதை முன்னுரிமையாகக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக குவைத் அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரிவதே அவர்களின் குறிக்கோள்; ஏனென்றால் அப்போது தான் 60 வயது வரை பணிக்கு பங்கம் வராது; வேலையும் நிரந்தரம்.

இத்தகைய (MOH-Ministry Of Health) அரசாங்க மருத்துவமனைகளுக்கு தாதியர்களை பணியிலமர்த்த 2004 ஆம் ஆண்டு, 2 லட்சம் ரூபாயில் ஆரம்பித்த இவர்களின் லஞ்சம் இன்று 22 லட்சமாக ஓங்கி நிற்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 10 லட்சம் என இருந்த (மு)க(ய)வர்களின் லஞ்சம் கடந்த ஏழு மாதங்களுக்குள் இரண்டு மடங்கு கூடி 20 லட்சம் என உயர்ந்திருப்பது பலரை அதிரச்செய்தது என்றாலும், அத்தனை லகரங்களை வாரியிறைத்து வேலையெடுக்கவும் தயங்காதவர்களைப் பார்க்கும் போது வியப்பாகத்தானிருக்கிறது.

கடந்த வருடத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 10 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணியிலமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான செவிலியர்கள் இந்தியாவிற்கு வெறுங்கையுடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முழுமையாக ஒரு வருடம் கூட அவர்கள் பணியிலமர்த்தப்படவில்லை. முகவர்களுக்கு வாரியிறைத்த 10 லட்சத்தைக் கூட மீண்டும் சம்பாதிக்க வழியில்லாமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றவர்களும் உண்டு.

இதனை பலரும் பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது, எனினும் முகவர்களுக்கிடையேயான போட்டி பொறாமையினால் தற்போது கேரளா, கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட 'அல் ஷராஃபா' நிறுவனம் சி.பி.ஐ யின் பிடியில் மாட்டியிருக்கிறது. இவர்கள் 300 கோடிக்கும் மேல் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
  
19,500 ரூபாய் மட்டுமே செவிலியர்களிடமிருந்து கட்டணமாக வாங்க வேண்டிய இம்முகவர்கள் 19.500 ஐ தொடர்ந்து மேலும் இரு பூஜ்யங்கள் சேர்த்து 19,50,000 ரூபாய் வசூலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்த தொகைக்கு சான்று ஏதும் அளிப்பதும் கிடையாது.

கிட்டத்தட்ட 1600 செவிலியர்களை இவ்விதம் குவைத்தில் பணியில் அமர்த்தியுமிருக்கிறார்கள். கணக்குப் பார்த்தால் எத்தனையோ கோடிகள் இவர்கள் விழுங்கியிருக்கிறார்கள். இந்த 'அல் ஷராஃபா' நிறுவனத்தின் நிர்வாகி வர்கீஸ் என்பவர், கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டிக்கு மிக நெருக்கமானவர் என கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்சமயம் இந்த ஊழல் சி.பி.ஐ ன் விசாரணையில் இருக்கவே, அடுத்த மாதம் முதல் குவைத்தில் தாதியர்கள் பணியமர்வு அரசாங்கத்தின் அனுமதி பெற்ற ODPEC/NORKA/OMC மூலம் மட்டுமே நடைபெற வேண்டுமேன அரசு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

இந்த ஊழலின் பின்புலத்தில் கேரளத்தைச் சார்ந்த முகர்வர்கள் மட்டுமல்லாது, கேரளத்தின் பிரபல அரசியல்வாதிகளுக்கும், குவைத் அரசு மருத்துவத்துறையைச் சார்ந்த சில பணியாளர்களுக்கும் பங்கு உண்டென்று சி,பி.ஐ ன் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

குவைத் அரசும் இந்த ஊழல் சம்மந்தமாக விசாரணை நடத்தப்படும் என கடந்த நவம்பர் மாதமே அறிக்கை வெளியிட்டிருந்தது. நேற்றைய தகவலின் படி இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட வர்கீஸ் குவைத்தில் தங்கியிருந்து விசாக்களை வழங்கி வருவதாக ஏசியாநெட் தொலைக்காட்சி தெரிவிக்கிறது. அவர் சரணடைய வேண்டி கேரள காவல்துறை விதித்த கெடு ஏப்ரல் 20 ஆம் தேதியோடு முடிந்த பின்னரும் அவர் சரணடையாததால் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ன் உதவியை கேரள காவல்துறை நாடியுள்ளது.

இத்தனைக்கும் நேற்று 20 ஆம் தேதி அவர் குவைத்தில் கைது செய்யப்பட்டு, ஷுவைக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் குவைத்தில் அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாகவும் ஏசியாநெட் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.

குவைத் தாதியர் பணியமர்வில் வளைகுடா நாடுகளில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இத்தனை கோடி அளவு ஊழல் நடைபெற முதல் காரணம் முகவர்களென்றாலும், எத்தனை லகரங்களானாலும் கொடுத்து பணியிலமரும் செவிலியர்களையும் குற்றம் சொல்ல வேண்டியது தான் இங்கு துரதிருஷ்டம்.

இதே 'அல் ஷராஃபா' நிறுவனத்தில் 2009 ஆம் ஆண்டில், குவைத்தில் தனியார் மருத்துவமனை பணி ஒன்றிற்காக கட்டணம் என நம்பி நான்கு லட்சம் ரூபாயை கொடுத்தவன் என்ற நிலையில் எனக்கும் வருத்தமுண்டு.

தகவல்கள் ஆதாரம் - ArabTimesOnline, KuwaitTimes, AsiaNet, MediaOneNews
Related Posts with Thumbnails