March 25, 2026

தேர்தலும் நம் கீழ்மைகளும்!


தேர்தலும், அரசியலும் மக்கள் நலனிற்கானவை என்பது தானே உண்மை! சாதிய அடிப்படையில் / மதப் பின்னணியில் இயங்குகிற எந்த கட்சியும் எங்கள் சாதியினர் மட்டும் வாக்களியுங்கள் அல்லது எங்கள் மதத்தினர் மட்டும் வாக்களியுங்கள் என்று கேட்பதில்லை தானே! 


அரசியல் அமைப்பு சட்டப்படி எல்லாரும் சமம் என்பதும் உண்மை தானே! அப்படித்தானே அனைவரும் இயங்க வேண்டும்!! 


ஆனால் களம் அப்படியா இருக்கிறது!! 2026 ல் கூட எவரையும் சமமாக நடத்த மறுக்கிற, சாதி / மத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிற, கூட்டணி ஆட்சியை அமைக்க மறுக்கிற கட்சிகளாகத் தான் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான  திமுக, அதிமுக இரண்டும் இருக்கின்றன. 


சாமானியர்களுக்கு ஒன்று என்றால் உடனடியாக களத்தில் வந்து நிற்பது கம்யூனிஸ்ட் தோழர்களும், இடதுசாரி கொள்கையையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்கிற திருமாவளவன் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே தான். 


ஆனால் அவர்களும் கூட, தொகுதிப் பங்கீடு வரை சாதியத்தை வெளிப்படையாக ஆதரிக்கிற திராவிட கட்சிகள் உடன் சேர்ந்தே நிற்கிறார்கள். காலங்காலமாக தொடரும் இது போன்ற கொடுமை வேறில்லை. 


இப்படியாக இவர்கள் சில சட்டமன்ற தொகுதிகளுக்காக, பாராளுமன்ற தொகுதிகளுக்காக  தங்கள் கொள்கைகளை அடகு வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் அதிகாரம், பணம், பதவி மேல் இருக்கும் ஆசைகளின்றி வேறில்லை. 


கம்யூனிஸ்ட் / விசிக திமுக கூட்டணியில் இருந்ததால் இவற்றை சாதித்தோம் என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன இருக்கிறது! 


சாதிய பாகுபாடு / வன்முறை குறைந்திருக்கிறதா!!

நீட் தேர்வு இல்லை என்று ஆகி விட்டதா!!

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டதா!!

செவிலியர்கள் / துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விட்டதா!!


இன்னும் சொல்லப்போனால், சனாதனம் / பாஜக உள்ளே வந்து விடக்கூடாது, அதனால் தான் திமுக உடன் இருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் சனாதனத்தை, சாதியத்தை மறைமுகமாக ஆதரிப்பதே திமுக தான். பாஜக தமிழகத்தில் வளர காரணமும் திமுக தான் என்பது வரலாற்று உண்மை. 


கட்சியினர் துவங்கி பொதுமக்கள் வரை அனைவரையும் பணப்பேய் பிடித்து ஆட்டுவிக்கிறது; சுயநலன்கள், சாதியப் பெருமைகள், மத மேட்டிமைகள் அகலாமல் நிம்மதியான தமிழகம் எக்காலத்தும் சாத்தியமில்லை. 


இந்த தேர்தல்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல! அவை சாமானியனுக்கு எவ்விதத்திலும் நன்மை தருவதில்லை. 


நாம் நம் கீழ்மைகளால் தான் மடிகிறோம்!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!!! 


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails