February 11, 2011

11022011 மீண்டும் வருவேன்



11/02/2011 - 11022011

இன்றைய தேதி... நிச்சயம் பலரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். வலமிருந்து இடமாக பார்த்தாலும்; இடமிருந்து வலமாக பார்த்தாலும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

அதோடு எகிப்தில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இனி அமைக்கப்படும் அரசாங்கம் மக்களுக்கு நன்மையானதாக அமைந்தால் அதுவே இந்த புரட்சியின் வெற்றியாகும். எகிப்தின் இந்த பயணம் இனிமையானதாக தொடரட்டும்.

தமிழகத்திலும் இது போன்ற மாற்றம் வரவேண்டும்; வருமா?!!


லைப்பக்கம் வந்தே இரு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எழுதுவதற்கு பல எண்ணங்கள் மனதில் இருந்தாலும் அதற்கான நேரம் வாய்க்காமையால் எழுதவியலவில்லை.

புதிய வீட்டில் குடியேறுவதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதால் நேரம் அதிகமாக வாய்க்கவில்லை. ஓரிரு தினங்களில் மீண்டும் எழுதலாம் என்றிருக்கிறேன்.

அனைவருக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும். 


January 28, 2011

Life in a Day நேரலையாக Youtube ல்



சாத்தியமற்றவை என பல ஆண்டு காலமாக பறைசாற்றப்பட்டு வந்த பல விஷயங்கள், உலகம் கணினி மயமும் டிஜிட்டல் மயமும்  ஆனதில் இருந்து சாத்தியப்பட்டு விட்டது என சொல்லலாம்.

இணையம் நிச்சயமாகவே உலகில் பல இடைவெளிகளை இணைக்கும் பாலமாகவே மாறிவிட்டது. நொடிப்பொழுதில் உலகின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் பலருடன் இன்று மிக எளிதாக தொடர்பு கொள்ளமுடிகிறது என்றால் அதற்கு இணையம் மிக முக்கிய காரணம்.

இணையம் இல்லாமல் இன்று வாழ்க்கை இல்லை என்ற நிலைமை ஆகி விட்டது. தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாமல். இசை, காணொளி, புகைப்படங்கள், கோப்புகள் என பலவற்றை பரிமாற்றம் செய்யும் தளமாக இன்று இணையம் மாறியிருக்கிறது.

உலகின் பல்வேறு மூலைகளில் ஒரே நாளில் என்னென்ன நடைபெறும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும் வாய்ப்புள்ளது; பலர் எப்போதாவது அதனைக் குறித்து சிந்தித்திருக்கவும் கூடும்.

காணொளிகளைப் பகிர்ந்து கொள்ளும் தளமான http://www.youtube.com/ அதற்கு வழிவகை செய்துள்ளது. ஒரு நாளில் அதாவது 2010 ஜூலை 24 ல் மட்டும் உங்களையும் என்னையும் போன்ற சாதாரணவர்களால் உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அடங்கிய காணொளிகளை இணைத்து திரைப்படமாக்கும் முயற்சியில் யூடியூப் தளம் இறங்கியிருந்தது.

அந்த வகையில் ஜூலை 24, 2010 ல் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காணொளிகளை யூடியூப் தளம் பலரிடம் இருந்து பெற்றிருந்தது. அவைகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட காணொளிகளைக் கொண்டு 90 நிமிடங்கள் ஓடும் "LIFE IN A DAY" என்ற திரைப்படமாக ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் கெவின்  இயக்கியிருக்கிறார். 

இன்னும் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாக (27.01.2011 )அமெரிக்க நேரப்படி இரவு 8 மணிக்கு Sundance திரைப்பட விழாவில் வெளியிட இருக்கிறார்கள். யூடியூப் தளம் அதனை நேரடியாக அவர்களது தளத்தில் ஒளிபரப்பு செய்யவிருக்கிறார்கள். மேலும் தகவல்கள் http://www.youtube.com/lifeinaday தளத்தில்

ஏற்கெனவே இணையம் நம்மை ஆச்சரியப்படுத்துகையில் youtube போன்ற தளங்கள் நம்மை மேலும், மேலும் ஆச்சரியப்படுத்தத்தான் செய்கின்றன.  

January 15, 2011

டிஜிட்டல் க(கா)லிகாலம்

ஹாய் என்பதில் துவங்கி பாயில்(Bye) முடியும்
ஹார்ட்வேர் காலம்;
ஹாப்பி நியூ இயர்,
ஹாப்பி போங்கள்(பொங்கல்) என
ஹாஸ்யமாய் மேலும் தொடர்கிறது  

ட்டிலில் கிடந்தவாறே - சோம்பலாய்
நெட்டில் துவங்குகிற தினத்திற்கு

ஆர்க்குட்டின் ஆர்ப்பாட்டமும் - ஐஃபோன்
கேட்ஜட்டின் அதிரடியும் - மொபைல் ஃபோன்

விட்ஜெட்டின் அமர்க்களமும்
வேகம் சேர்க்கின்றன - இவை

ஒருவரின் பட்ஜெட்டை
பதம் பார்க்கும் விஷயங்கள் என்பது
பாதி தூரம் பயணித்த பின்னரே
பலருக்கும் புரிகிறது

இவை போதாதென்று
இன்றைய இளைய தலைமுறையால் ஏற்றப்படும்
குறுந்தகவல்களுக்கும் - குழப்படிகளுக்கும்

மச்சான்களை மட்டையாக்கும்
மல்டி மீடியா மெசேஜ்களுக்கும்

பல்லை விளக்க மறந்தாலும்
நீலப்பல் என்ற ப்ளூடூத்தை மறக்காத
"நீல வானம் நீயும் நானும்" என
நிலவு பாடல் பாடும்
நிலவுப் பிரியர்களுக்கும் குறைவில்லை.


கர்த்தரை மறந்து
கர்சரையும்

கடவுளை மறந்து
கடவுச் சொல்லையும்

ரிசனையை மறந்து
ணினியையும்

நம்பும் காலமிது

இவற்றிற்கு பின்னணியாக
இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம்
இருக்கும் வரை
இவர்களின் இம்சையும்
இருக்கத்தான் செய்யும் போல

January 07, 2011

எழுதுகிறேன் ஏனோ எழுதுகிறேன்


எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன்
எவர்க்கோ எழுதுகிறேன்

எல்லைகள் கடந்து
எவர் கண்ணிலேனும் படும்
என்ற கனவில்
எழுதுகிறேன்

எதேச்சையாக
எவர் பார்த்தாலும் - கருத்து
எதுவும் உரைக்காமல்
எகிறிச் செல்கின்றனர்

எடுப்பான புகைப்படங்களுக்கும்
எவரோ எழுதியதை
எடுத்து வெட்டி ஒட்டுதலுக்கும் - முகநூலில்
எழுதப்படாத கருத்துக்கள் இல்லை

எதுவுமில்லா வேடிக்கைகளுக்கு - ஆர்குட்டில்
எழும் ஆரவாரங்களுக்கு குறைவில்லை

எதார்த்தத்திற்கு விலையில்லை - நல்
எண்ணங்களுக்கு மதிப்பில்லை

எனினும் எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன்

எவர்க்கேனும் உதவியாய் இருக்கும்
என்ற நம்பிக்கையில் - நாளும்
எட்வின் எழுதுகிறேன்
ஏனோ எழுதுகிறேன். 

January 06, 2011

மறந்தாலும் மறுக்கப்பட முடியாத உதவிகள்

இன்றைய காலகட்டத்தில் பெற்றவர்களையும், உறவுகளையுமே நினைவில் வைக்க பெரும்பாலானவர்களுக்கு சிரமமாக இருக்கையில் நலம் விரும்பிகளையும், நன்மை செய்தவர்களையும் நினைவு கூறுவது பலருக்கு வேடிக்கையானது சிலருக்கு வீணானது.

ஏறுகிற வரைக்கும் தேவைப்படுகிற ஏணி ஏறிய பின் தேவையற்றதாக கருதப்படுவதைப் போன்றே உதவிகளைப் பெற்று முன்னேறிய பலர் இன்று அவர்களை ஏற்றி விட்டவர்களை மறந்து விடுவது சகஜமாகி வருகிறது. நன்றி மறவாமல் இருப்பவர்கள் வெகு சிலரே.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் எவரேனும் உதவி செய்திருப்பர். பண வடிவிலோ, பொருள் வடிவிலோ, அறிவுரை வடிவிலோ, பகிர்ந்து கொள்ளுதல் மூலமாகவோ உதவிகளைப் பெற்றிருப்பர். உதவிகள் பெறாதவர்கள் உலகில் எவரேனும் இருக்கின்றனரா என ஒரு கேள்வி எழும் பட்சத்தில், அதற்கு இல்லை என்பது தான் பதிலாக வந்து சேரும்.

சிறுவயதில் பெற்றவர்கள் மூலமாக பெறும் உதவிகள் பிற்காலத்தில் உறவுகள் மூலமாகவும் சமூகத்தில் உள்ள மற்றவர்கள் மூலமாகவும் நாம் கிடைக்கப் பெறுகிறோம்.  இப்படியாக வாழ்வின் பல நிலைகளில் நாம் அடைந்த உதவிகளை எத்தகைய சூழ்நிலையிலும் நாம் மறவாதிருப்பதே மனிதத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவை.

உதவிகள் செய்தவர்களுக்கு கைமாறாக உதவிகள் செய்ய இயலவில்லை என்றாலும் கூட அவர்கள் செய்த உதவியை மறந்து போகாமல் குறைந்தபட்சம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தால் அதுவே பெரிய விஷயம் தான். (உயிருக்கு உயிராக பழகிய ஒருவரிடம் அப்படி ஒருமுறை உதவி கேட்கப்போய் அசிங்கப்பட்டும் இருக்கிறேன்.  உதவி கேட்ட போது செய்கிறேன் என வாக்களித்தவர்கள் மீண்டும் தொலைபேசியில் அழைக்கையில் தொலபேசியை எடுக்கவில்லை. மிகவும் நொந்து போனேன். முடியாது என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தால் இந்த வேதனை இருந்திருக்க வாய்ப்பில்லை)

உதவிகள் செய்தவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு, நன்றி தெரிவிப்பதோடு அந்த உதவியை மறக்காமலிருப்பதும் தான். அடைந்த உதவியை மறந்துவிடுதல் போன்ற நன்றி கெட்டச் செயல் வேறு எதும் இருக்க முடியாது. அதனை வள்ளுவன் "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என வெகு அருமையாக இரண்டே வரிகளில்  அழுத்தமாகச் சொல்லிச் சென்று விட்டார்.

நாம் உதவி செய்த ஒருவர் நம்மை நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கையில் எழுகின்ற உவகைக்கு அளவே இல்லை. அத்தகைய நன்றியை இந்த வருடம் நீங்கள் உதவி பெற்ற எவருடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர்கள் உள்ளத்தை மகிழ்வித்த நல்ல எண்ணத்துடன் இந்த வருடத்தை தொடர்ந்து தொடருங்கள்.

January 03, 2011

2011 - மிக மோசமானது இன்னும் வரவில்லை!

எங்கோ என்றோ படித்த ஒரு ஆங்கில வாசகம் தான் புத்தாண்டு பிறந்த இரு தினங்களாக மீண்டும் மீண்டும் எனது எண்ணங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. "The WORST is yet to come" என்பது தான் அந்த வாசகம். 

புதிய வருடமானால் மட்டும் மனதின் ஆதங்கங்களும், மனிதனின் தேவைகளும், வித்தியாசப்பட்டு விடுமா என்ன? புது வருட கொண்டாட்டங்களில் பங்கு பெற்று விட்டால் அந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்குமென்பதோ இல்லை நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பிரார்த்தனை செய்தால் வருங்காலம் பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்பது அர்த்தமாகி விடாது.

இரவு பகல் என்பது போன்றே இன்பம் துன்பம் என்பதும் மனித வாழ்க்கையின் இரு பக்கங்களாகவே கொள்ளலாம்.வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு விதத்தில் ஆபத்து காத்திருக்கத் தான் செய்கிறது. அது எந்த அளவிற்கு தீவிரமானது என்பதும் எவரும் அறியாதது. 

நாளை என்ன நடக்கும் என எவராலும் முன்குறிக்க முடியாமல் இருக்கையில் கவலைப்படுவதால் எந்தவித நன்மையும் எவர்க்கும் ஏற்படப்போவதில்லை. அதையே தான் விவிலியமும் "கவலைப்படுவதினால் தனது சரீரத்தில் ஒரு முழத்தை யார் கூட்டுவான்" என்கிறது. 

முடிந்த வரையில் உலகில் இருக்கின்ற காலம் மட்டும் சுற்றி இருப்பவர்களையும், நண்பர்களையும், குடும்பத்தினரையும் சந்தோஷமாக வைத்திருப்பதால் கிடைக்கின்ற நற்பெயர் மட்டுமே மனிதத்தை இன்னும் நாம் வாழ வைக்கும் மிகச்சிறந்த வழியாக இருக்கும். 

பிரச்சினை என்று வரும் போது என்ன பிரச்சினை என கவலை கொள்ளாமல் பிரச்சினைகளில் இருந்து வெளிவருகிற வழிமுறைகளை நோக்குவதோடு The Worst is yet to come என்ற மனப்பான்மையும் கொண்டிருப்போமானால் இந்த வருடம் மட்டுமல்ல எந்த வருடமும் சிறந்த வருடம் தான். 

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும், பூங்கொத்தும், பிரார்த்தனைகளும்.

Photo Courtesy: http://vi.sualize.us/

December 31, 2010

2010 ல் எதிர்பார்த்ததும் நிகழ்ந்ததும்

2010 ல் எதிர்பார்க்கும் பத்து விடயங்கள் என்ற தலையங்கத்தில் ஜனவரி ஆறாம் தியதி பதிவிட்டிருந்தேன்.அதனை திரும்பிப் பார்க்கும் ஒரு பதிவு இது, அனைவருக்கும் என் கனிவான ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்.

1. ரஹ்மான் - கிராமி விருது

2009 ற்கான கிராமி விருதிற்காக ரஹ்மான் இரு பிரிவுகளில் ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்கான இசைக்காகவும், ஜெய்கோ பாடலுக்ககவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இரு பிரிவுகளிலும் அவருக்கு விருது கிடைத்தது. இவை போதாதென்று 2010 ல் நோபல் பரிசளிப்பு விழாவில் ரஹ்மானின் இசைநிகழ்ச்சி அரங்கேறியது, மீண்டும் 2010 ற்கான கோல்டன் க்ளோப் விருதிற்காக (டேனி போயலின் 127 Hours திரைப்படத்திற்காக) பரிந்துரை செய்யப்பட்டும் இருக்கிறார்.

 

2. உலகக்கோப்பை ஹாக்கி

டெல்லியில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி போட்டிகளில் வழக்கம் போலவே இந்திய அணியினர் சொதப்பினர். ஆடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றனர், ஆஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றது.

3. உலகக்கோப்பை கால்பந்து

 
முதன் முறையாக ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் Vuvuzela ன் இரைச்சல் சத்தத்தின் இடையிலும் சிறப்பாகவே நடந்து முடிந்தன. 2008 முதல் தோல்வியையே சந்திக்காத நெதர்லாந்தும், ஆடிய முதல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்த ஸ்பெயின் அணியும் இறுதிப் போட்டியில் ஆடியது எவரும் எதிர்பார்க்காதது. ஆக்டோபஸ் 'பால்' கணித்தபடியே ஸ்பெயின் வெற்றி பெற்றது. (மரித்தும் போனது ஆக்டோபஸ்)

 

4. இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த இலங்கை தேர்தல் மாற்றம் எதையும் தரவில்லை. முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவின் சிறைபிடிப்பைத் தவிர.

5. எந்திரன்

ரோபோட் - எந்திரன் எதிர்பார்த்ததற்கும் அதிகமான வசூலைக் கொட்டி இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. 20 ரூபாய் டிக்கெட்டுகள் இருநூறு ரூபாய்க்கு விலை போனதென்றால் வசூலாகாமல் இருக்குமா என்ன?! இத்தனை வயதில் சூப்பர் ஸ்டாருக்கு உலக அழகியுடன் நடனம் தேவையா என்பது கேள்வி எழுப்பப்பட வேண்டிய ஒன்று.

இரண்டாவது பாதி காட்சிகள் சில கார்ட்டூனை நினைவுபடுத்தியது மறுக்கமுடியாத ஒன்று. உலகம் முழுவதையும் ஷங்கர் திரும்பிப் பார்க்க வைத்தார் என்பதற்காக பாராட்டப்பட வேண்டிய சினிமா. மறைந்த "சுஜாதா" அவர்களின் பங்களிப்பையும் மறந்து விடமுடியாது.


6. வேட்டைக்காரன் - விஜய்

மீண்டும் ஒரு மசாலா படத்தை அளித்த திருப்தி ‘சுறா’வினால் இளையதளபதிக்கு உண்டாயிருக்கக்கூடும். ஆனால் பணத்தை போட்ட தயாரிப்பாளர்களுக்கு நிச்சயம் இல்லை. ஆனால் இளையதளபதி ஒன்றோடு நிறுத்திக்கொண்டது ஏனோ?

7. இந்தியா - உலக அரங்கில்

 

உலக அரங்கில் இந்தியாவின் ஊழல் கொடிகட்டி பறந்ததைத்தவிர வேறு ஒன்றும் விஷேசமாக இந்தியா செய்ததாகத் தெரியவில்லை. ஐ.பி.எல், காமன்வெல்த் விளையாட்டுக்கள், ஸ்பெக்ட்ரம் என தொடரும் ஊழல்கள் இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய செய்தன. G-20 மாநாடு உள்ளிட்ட பன்னாட்டு மாநாடுகளில் இந்தியாவின் பங்கு குறைவு தான்.

8. டைகர் உட்ஸ்

 

இருபது வார இடைவெளிக்கு பின்னர் ஏப்ரல் 2010 ல் மீண்டும் களத்தில் இறங்கிய கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் குறிப்பிடும்படியான வெற்றிகளை இதுவரை பெறவில்லை. உலகத்தில் மிக அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக ஜூலையில் அறிவிக்கப்பட்டாலும் கோல்பில் தனது முதலிடத்தை அக்டோபரில் இங்கிலாந்தின் Lee Westwood இடம் பறிகொடுத்தார்.

 

9. ஃபெடரர் Vs நடால்

 

ஃபெடரருக்கும் நடாலுக்கும் இடையே இதுவரை மொத்தமாக நடைபெற்றுள்ள 22 ஆட்டங்களில் நடால் 14-8 என முன்னிலை பெறுகிறார். காயங்கள் காரணமாக 2009 ன் இறுதி கட்டத்தில் தரவரிசையில் தனது முதலிடத்தை ஃபெடரரிடம் இழந்த நடால், ஜூன் 2010 ல் பெற்ற பிரெஞ்ச் ஓபன் வெற்றியுடன் மீண்டும் முதலிடம் பெற்றார். நடாலின் ஒன்பது வருட காத்திருப்பு இந்த வருடம் யு.எஸ் ஓபனில் நனவானது. முதன்முறையாக நடால் யு.எஸ்.ஓபன் சாம்பியன் ஆனார். முதன்முறையாக நடால் மூன்று கிராண்ட்ஸ்லாம்களை வென்றதும் இந்த வருடம் தான்.


10. இந்தியா - பிரிவினை

முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் குண்டு வெடிப்புகளும், மதக்கலவரங்களும் குறைந்திருந்தது கொஞ்சம் ஆறுதலான விஷயம். ஆனாலும் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண இன்னும் பல வருடங்கள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அனைவருக்கும் புதிய ஆங்கில வருடம் பொன்னானதாக அமைய வாழ்த்துக்கள்.
Related Posts with Thumbnails