May 01, 2022

ராஜ் கெளதமன் - நீலம் - பா. ரஞ்சித் - தலித் இலக்கியம்

சில மாதங்கள் முன்னர் தான் எழுத்தாளர், தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், தலித் சிந்தனையாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியர் ராஜ் கெளதமன் அவர்கள் குறித்து எழுத்தாளர் அன்பு ஜெய் அண்ணன் சிலாகித்தார். 

அவர் ஒரு வகையில் நமக்கும் உறவு என்பதும், நம் வீட்டு விழாக்களுக்கு திருமதி பரிமளம் ராஜ் கெளதமன் அவர்கள் பங்கேற்க வந்திருந்தையும் கூட கடந்த வாரம் அண்ணன் ஜெய் அன்புவை சந்தித்த போது தான் அறிந்து கொள்ள முடிந்தது. 

நம் மண்; அதன் பண்பாட்டு விழுமியங்கள்; மண் சார்ந்த படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் குறித்த குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பது மிகவும் வெட்கக் கேடான விடயம். 

நம் மண் சார்ந்த எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், கொண்டாடவும் இத்தனை ஆண்டு காலம் ஆகியிருக்கிறதே என்பதும் கூட வருத்தப்படக் கூடியது தான். 

இதனாலேயே தான் ' எங்கோ யூதேயாவிலும், எருசலேமிலும் நிகழ்ந்தவற்றை மட்டுமே திரும்பத் திரும்ப வாசிக்காமல் ', ' நம் மண் சார் படைப்புகளையும் வாசியுங்கள் ' என்பது. 

72 வயதில் அவரை அங்கீகரித்திருப்பது குறித்து ராஜ் கௌதமன் அவர்கள் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி தெரிவித்தாலும், அவர் இப்படியான பல நூறு அங்கீகாரங்களுக்குத் தகுதியானவர் என்பது திண்ணம். 

"சாகித்திய அகாடமி விருது எனக்கு தந்திருந்தா கூட, 'போங்கடா காலிப் பயலுகளா'  அப்படின்னுட்டு வந்திருப்பேன்" ; ஆனா, 'இந்த வானம் இலக்கிய விருதும், ஒங்க எல்லாருடைய அன்பும் நிச்சயமாகவே எனக்கு ஒசத்தி தான்' என்கிறார் ராஜ் கௌதமன். 

எந்த தேவமாதாவும் வந்து நம்மள காப்பாத்தாது. உடனிருக்கும், சக மனிதர்கள் மட்டுமே நமக்கு படிப்பினைகளையும், வாழ்வதற்கான நம்பிக்கைகளையும் எக்காலத்தும் விதைப்பர் எனும் ராஜ் கௌதமன் அவர்களின் கூற்று அப்பட்டமான உண்மை. 

இத சொல்லிட்டு, ரொம்ப சேட்டையாத்தான் இருக்கு! ஆனா அப்படி இருந்தா தான் படைப்பிலக்கியம் வரும்னு சொல்லி உரையை முடிக்கிறார்! 

இன்னும் அதிகம் புரிந்து கொள்ளப்பட வேண்டிய, வாசிக்கப்பட வேண்டிய, ஆளுமைகளுள் ராஜ். கௌதமன் அவர்களும் ஒருவர்.

https://youtu.be/Xh5-1XqR3Os

April 03, 2022

கிறிஸ்தவ பாடல்கள் – வெறுப்பு Vs அன்பு

வழக்கமாக காலையில் பயலுவள எழுப்ப கிறிஸ்தவ @ விவிலியம் சார்ந்த பாட்டுகள ஓட்டி விடுகது வழக்கம் . அப்படியான ஒரு காலைலஎன் தேவன் என் வெளிச்சம்பாடல்ல ஒரு வரி சட்டுன்னு கவனத்த ஈர்த்து, திரும்ப கேக்க சொல்லிச்சிஅந்த வரி இது தான்… 

 என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே

 அடடா! இத இவ்வளவு வன்மமாவா எழுதி வச்சிருக்காங்க!! இதத்தான் காலங்காலமா நாமளும் பாடிட்டு வரோமா!! அப்டின்னு சட்டுன்னு தோணிச்சி.

 இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்ததில் இது போன்ற வன்மங்களைத் தான் தொடர்ந்து பாடல்கள் வழியாகவும், பிரசங்கங்கள் வழியாகவும் கேட்டு வந்திருக்கிறோம் என்பதும் விளங்கிற்று.

 ஆனால் அவை வன்மம் எனவோ, பிறரை தாக்கும் உள்நோக்கம் கொண்டவை எனவோ. மற்றவர்களைக் காயப்படுத்தும் வரிகள் எனவோ இதுகாறும் புரிந்ததில்லை. 

 இரட்சணிய சேனையின் பாடல்களில் ஒன்றுஎல்லாருக்கும் மா உன்னதஅப்பாடலின் மூன்றாவது சரணம் 

பிசாசு, பாவம், உலகம்

           இச் சத்துருக்களை

           அழிந்து போக மிதியும்

           நீர் வாழ்க இயேசுவே!

விவரம் அறியா சிறுவயதில் இந்த பாடல ஆலயத்தில் பாடும் போதெல்லாம் இருக்கிற மொத்த எனர்ஜியயும்சத்துருக்களை அழிந்து போக மிதியும் ல இறக்கி வச்சிருக்கேன் :( ! (அக்காலத்து சத்துருக்கள் என்பவை என் விருப்பத்திற்கு மாறான நிகழ்வுகள் தான்)

இது போன்ற மேலும் சில பாடல்கள்… 

பெர்க்மன்ஸ் அவர்களின்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்

சாத்தானை மிதிப்போம்

மருந்து கண்டேனேபாடலின் இறுதி சரணத்தின் முதல் வரி 

            பிசாசின் தலையை நசுக்கும் மருந்து!

மிகப் பிரபலமான கிறிஸ்து பிறப்புப் பாடல்  ‘ பாலன் ஜெனனமானார் ன் இறுதி சரணத்தின் முதல் வரி

இயேசுநாதர் பிறப்பினால் பிசாசின் சிரசு நசுங்கவே

பட்டியல் இன்னும் நீளும்; அதோடு, பதிவும் நீண்டு சொல்ல வந்தது நீர்த்துப் போகும் என்பதால் இம்மட்டில் முடிக்கிறேன் 

இதன் தொடர்ச்சி தான்கிறிஸ்தவன டிஸ்டர்ப் பண்ணாதபாடல். அதன் சரணத்தில்கிறிஸ்தவன் பொறுமையானவன்என்கிற வரி வருகிறது; ஆனால் அதனை நிறுவுவதற்குகிறிஸ்தவன டிஸ்டர்ப் பண்ணாதஎன துவங்குகிறார்கள். 

கிறிஸ்தவம் அன்பைப் போதிக்கின்ற; மன்னிப்பை முன்னிறுத்துகின்ற ஒரு மதம்/ அமைப்பு/ மார்க்கம் என ஒரு பக்கம் உரைத்து விட்டு மறுபக்கம் பிசாசு, சாத்தான், தொல்லை குடுக்கிறவன், நம்மள விரும்பாதவன், நமக்கு எதிரா பேசுறவன் எல்லாவனும் அழியணும் அப்படிங்கிற தொனில வெளிப்படையாவே அறைகூவல் விடுறதெல்லாம் ஒரு செயலா என்கிற கேள்வி ஒருபுறமிருந்தாலும், விவிலியத்தை புரிந்து கொண்டவர்கள் பெரிய ஏமாற்றம் அடைவது இல்லை.

ஏனெனில் விசுவாசத்துடன் கேட்டால் கிடைக்கும் என்பதோடு \ கடவுளுடைய நேரத்தில் அதுவும் அவர் மனசு வச்சா (சித்தம் இருந்தா) மட்டும் தான் கிடைக்கும் என்பதும் அறிந்தவர்கள் அவர்கள்.

ஆதாம் காலத்து சாத்தானும், இரண்டாம் ஆதாம் (இயேசு) காலத்து சாத்தானும் என்னவென்றால் பாம்பு தான் (ஆதி 3:15). அந்த சாத்தானத்தான் நசுக்குவோம், மிதிப்போம்னு நெனச்சி பாட்டு எழுதுவதாக இருந்தாலும், இன்றைய தேதியில் அது மிகை தான்.

 சாத்தான், பிசாசு, அசுத்த ஆவி என போகிற பெரிய லிஸ்ட் லாம் யார்னு பாத்தா தெருச்சண்ட., வாய்க்கா தகராறு, தண்ணி தராதவன், உட்கார இடம் தராதவன், நம்ம கிட்ட வம்புக்கு வர்ர நம் வீட்டு, எதிர் வீட்டு, பக்கத்து வீட்டு ஆட்கள் தான்.

இந்த தாக்கத்தில தான் நாமளும் பாடல் எழுதியிருக்கோமா அப்டின்னு ‘என் புகலிடம்’ பாடல்களை அவசர கதியில் எட்டிப்பார்த்தேன்! அப்படி எந்த வரிகளுமில்லை என உறுதிப்படுத்தின பின்னர் தான் சற்று தணிந்தேன். கூடவே, வெறுப்பு சூழ் இவ்வுலகு என்னில் பெரிதாக தாக்கத்த்தை ஏற்படுத்தவில்லை என்கிற மட்டில் சிறு நிம்மதி.

ஜெபம்/ விண்ணப்பங்களின் போது சிலர், ‘நினைக்கிற காரியம் நடந்தேற தடையா இருக்கிற சாத்தானின் செயல்கள் எல்லாத்தயும் தவிடு பொடியாக்கும் ஆண்டவரே’ அப்டிம்பாங்க. 

குறிப்பிட்ட அந்த சாத்தான நான் இது வர பாத்ததில்ல. நமக்கு சாதகமில்லாத சூழ்நிலைகளும்; நம் விருப்பங்களுக்கு தடையா இருக்கிற; நமக்கு பிடிச்சத தராத எல்லோரையும், எல்லாவற்றையும் சாத்தான்களா உருவகப்படுத்திக்கிறோம் அவ்வளவு தான்!

அப்படியான சூழ்நிலைகளை/ அப்படியான மனிதர்களை திறந்த மனதோடு எதிர்கொள்வதோடு, ஏற்றுக்கொள்ளவும் பழகுதல் காலத்தின் தேவை; அவ்வாறாக சொற்களினால்/ அன்பினால் மாற்ற இயலாதவற்றை கடந்து வரவும் க்குவப்பட வேண்டும். 

இல்லையென்றால் ‘ கிறிஸ்தவம் அன்பை போதிக்கிறது’ ‘ கிறிஸ்தவம் மன்னிப்பை முன்னிறுத்துகிறது ’ என்பதெல்லாம் வெறும் சொற்களோடு நின்று போகும்.

மாறாக, பாடல்கள் வழியே, சொற்கள் வழியே வன்மங்களை விதைத்தல் எவ்வித சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது. 

January 15, 2022

1983



இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் மீது எனக்கு இருந்த அதீத பற்று இன்று இல்லை என்பது தான் நிதர்சனம். 


அசாருதீன், அஜய் ஜடேஜா காலகட்டங்களில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் Match Fixing க்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்த ஈடுபாடு குறைந்து போனது. எனினும், கால்பந்து, டென்னிஸ் போன்று கிரிக்கெட்டையும் ஒரு விளையாட்டாக  பின்தொடர்வது இன்றளவும் தொடர்கிறது. 


அணித் தேர்வுகளில் நடக்கும் பாரபட்சமும், அதீத காவிச்சாய பூசலும், கிரிக்கெட் குறித்து எவ்வித புரிதலும் இல்லாத அரசியல் பிரபலங்கள் கிரிக்கெட் வாரியங்களின் பதவிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருப்பதும் கிரிக்கெட் மீதான வெறுப்பை இன்னும் இறுகச் செய்கின்றன. 


எனினும் அண்மையில் பார்த்த '1983' திரைப்படம், பால்ய காலத்து நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் விதம்  அமைந்திருந்தது. அந்த உந்துதலில் தான் இதனைப் பதிவு செய்கிறேன். 


கடின உழைப்பும், தொடர் முயற்சிகளும், தன்னம்பிக்கையும் என்றேனும் வெற்றியை  ஈட்டித்தரும்  என்பது தான் 83 தரும் பாடம். 


அதைத்தான் கபில்தேவ் சாதித்துக் காட்டினார். அன்றைய நாட்களின் அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கு இந்தியத் தீவை அவர்கள் மண்ணிலேயே 1983 மார்ச் ல் வீழ்த்திய கபில்தேவ், தொடர்ந்து ஜூன் மாதத்தில் அவர்களுடன் ஆடிய மூன்று ஆட்டங்களில் (இறுதிப் போட்டி உட்பட) இரண்டில் வெற்றி பெற்று உலகக் கோப்பையையும் நமதாக்கினார். 


ஒருவேளை, இந்தியா - பாக் பிரிவினைக்குப் பின்னர். 'சஹிவால்' என தற்போது அறியப்படும் ' மோண்ட்கோமெரி ' மாவட்டத்தில் கபிலின் பெற்றோர் தொடர்ந்திருந்தால், கபிலின் சாதனைகள், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியின் பக்கங்களில் இன்று எழுதப்பட்டிருக்கக் கூடும். 


வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்களை கடந்து வர நாம் எடுக்கும் பெருமுயற்சிகள் கண்டுகொள்ளப்படாமலும், பதிவு செய்யப்படாமலும் போவது தான் எக்காலத்தும் டிசைன் போல!! 


அப்படியாகத் தான் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் சதமும், உலகச் சாதனையும், 17/5 என்கிற நிலைமையில் அணி இருந்த போது தனியொருவராக செய்த அதகளமுமான 175 ஓட்டங்கள் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படவில்லை; வீடியோ பதிவும் செய்யப்படவில்லை. (அதற்குக் காரணமாக BBC ன் பணி நிறுத்தம் கூறப்பட்டாலும், இந்தியா பெரிதாக என்ன சாதித்து விடப் போகிறது என கருதிய BBC ன் மேட்டிமைத்தனம் தான் உண்மையாக இருக்க முடியும்) 


1983, ஜூன் 18 அன்று சிம்பாப்வே அணிக்கெதிரான அந்த ஆட்டத்தில்  அச்சாதனை நிகழாமல் இருந்திருந்தால், இந்தியா அரை இறுதிக்குக் கூட தகுதி பெற்றிருக்காது. 


உயர்த்தப்பட்ட சமூகத்தினர் மட்டுமே கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்கிற கட்டுக்கதைகளை உடைத்தெறிந்த கபில்கள், தோனிகளின் சாதனைகள் காலத்துக்கும் பேசு பொருளாக வேண்டும். 


கபிலைக் குறித்து Cricinfo இப்படியாக பதிவு செய்கிறது //The inspirational captain of the World Cup-winning team, Kapil Dev, was neither college-educated nor Brahmin.// 


//Post Independence International players emerged from Najafgarh, Rae Bareilly, Bharuch, Palarivattom, Aligarh, Jalandhar and Ranchi.// 


1983 கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல, இந்திய விளையாட்டு உலகிற்கும் புத்தொளி பாய்ச்சியது என்பது தான் வரலாற்று உண்மை. 

August 11, 2021

மெஸ்ஸி எனும் கால்பந்து வைரம்

கால்பந்து உலகில் கடந்த ஒருவாரமாக அதிகம் பேசப்பட்டு வருவது பார்சிலோனா வில் இருந்து பாரிஸ் ற்கு இடம் பெயர்ந்திருக்கும் மெஸ்ஸி குறித்து தான். 


இடம் பெயர்ந்து வாழ்தல் எல்லோருக்கும் எளிமையாக அமைந்து விடுதல் இல்லை. 2000 ஆவது ஆண்டில் பதிமன்றே வயது இருக்கையில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டு சிகிச்சைக்கான வசதிக்காக பார்சிலோனா கால்பந்து அணியின் வாயிலாக அர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினில் தனது தந்தையுடன் குடி பெயர்கிறார் "லியோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸி" 


அன்று துவங்கி அடுத்த 20 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தவர் தற்போதைய கோவிட் காலத்து புதிய பொருளாதாரத் தடைகளால் பார்சிலோனாவில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது!


தனது வருமானத்தை பாதியாகக் குறைத்துக் கொள்கிறேன் என அறிவித்த பின்னரும் கூட தொடர்ந்து பார்சிலோனாவிற்காக விளையாடுவது மறுக்கப்பட்ட ஒன்றாகிப் போய்விட்டது. 


அதனை அவர் அறிவிக்கையில் உடைந்து அழுத போது மெஸ்ஸியைத் தொடர்கிற ஒவ்வொருவரும் அவரது வலியை உணர்ந்திருக்கக் கூடும். 



தற்போது மெஸ்ஸி, PSG - பாரிஸ் செயின்ட் ஜெர்மன் என்கிற பிரான்ஸ் நாட்டின் அணிக்காக இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 


அது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் விட்டது. அதே அணியில் அவரது சக அர்ஜென்டினா வீரர் டி மரியா, அவருடன் பார்சிலோனாவில் முன்னர் ஆடிய நெய்மர், கூடவே பிரான்சின் சிறந்த இளம் வீரர் ம்பாப்பே என பன்முகத் திறமைகளும் அடங்கியிருக்கிறது. 


பார்சிலோனாவில் மெஸ்ஸி விளையாட ஆரம்பித்த காலங்களில் அளிக்கப்பட்ட 30 ஆம் எண் பாரிஸ் அணியிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அணியிலிருக்கும் நெய்மர் எண் 10 உடன் ஆடுவதால் மெஸ்ஸிக்கு எண் 30 வழங்கப்பட்டிருக்கிறது. 


இதுவரை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (UCL) பட்டத்தைப் பெற்றிராத PSG யை அதை நோக்கி பயணிக்க வைப்பதே முதல் நோக்கம் என்றிருக்கிறார் மெஸ்ஸி. 


இதுவரை PSG அணி குறித்து பேசாதவர்களும் இனி பேசக்கூடும்; அந்த அணிக்கு வியாபார ரீதியான நன்மைகளும் நடந்தேறும்; இங்கிலாந்தில் அதிகம் கவனிக்கப்படாத பிரான்சின் Ligue1 இனி கவனம் பெறக் கூடும்; இவை எல்லாவற்றிற்கும் பின்புலம் "லியோனல் ஆன்ட்ரஸ் மெஸ்ஸி" எனும் ஒற்றைப் பெயரும் அவரது திறமையும் தான்! 


மெஸ்ஸி காலத்தால் அழியாத கால்பந்து வைரம் என்றால் அது மிகையல்ல. 




July 25, 2021

ரித்விக்/ குழந்தை நட்சத்திரங்கள்

ரித்விக்/ குழந்தை நட்சத்திரங்கள்


ரித்விக் போன்ற குழந்தைகள் நடிப்பிலோ, பிற கலைகளிலோ சிறந்து விளங்குவது குறித்து தொடர்ந்து பலதரப்பட்டக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

செய்தி வாசிப்பாளர்களை பகடி செய்த காணொளி நிச்சயம் வாய் விட்டு சிரிக்கக் கூடிய வகையறா தான்.

ஆனாலும் 'என்ன வெங்காயத்துக்கு' மாதிரியான அல்லது 'லிப்ஸ்டிக் நல்லாருக்கு' ; ட்ரெஸ் நல்லாருக்கு மாதிரியான வயதுக்கு ஒவ்வாத வசனங்கள் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

ஒருசாரார், ரித்விக்கின் பெற்றோர் அவன் மீது சுமையை ஏற்றுகிறார்கள் என்கின்றனர்; மறுசாரார் கல்வி, கலை, விளையாட்டு, மதம் சார்ந்த ஏதாவது ஒரு விடயத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் மீது வலிந்து திணிக்கத் தானே செய்கிறார்கள் என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர்; அதுவும் உண்மை தான்.

எதுவாயினும், சிறுவர்களின் புரிதலுக்கு அப்பாலான வசனங்களை, அவர்களைக் கொண்டு பேச வைப்பது பெரும் அபத்தம்.

மழலை மொழிகளும், சிறுவயது குறும்புகளும் எப்போதும் ரசிக்கக் கூடியவையே. ஆனால் அவற்றை நமது சுயப்பிடித்தங்களுக்குள் நிறுத்த முயற்சிப்பது முறையல்ல!

பேபி ஷாமிலிகளும், குற்றாலீஸ்வரன்களும் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதறிவோம் தானே!

போற்றபோட வேண்டியவை மழலை மொழிகள் தானேயல்லாமல் வலிந்து திணிக்கப்படுகின்ற மலிவான வசனங்கள் அல்ல!

June 26, 2021

எரிக்சன்/CPR/யூரோ2020/Faith

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளில் டென்மார்க் - ஃபின்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம், முதல் பாதியை நெருங்கிக் கொண்டிருந்த தருணம். 42 ஆவது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் சுயநினைவற்று கீழே விழுகிறார்.

அத பாத்ததும், பசங்க... "அப்பா... என்னாச்சி, என்னாச்சி!  ன்னு கேள்வி கேக்குறானுக; எனக்கும் அதிர்ச்சி! அவர் முகம் குப்புற விழுந்த விதமும் எவ்வித அசைவும் இல்லாத கண்களும் எரிக்சன் மரித்து விட்டார் என்பதைத் தான் உணர்த்தியது.

எரிக்சன் கீழே விழுந்ததும் டென்மார்க் அணியின் கேப்டன், எரிக்சன் உடைய நாக்கு அவரது தொண்டையை அடைக்காமல் இருப்பதற்கான முதலுதவி செய்கிறார்; அடுத்த சில வினாடிகளில் மருத்துவக் குழு களத்திற்குள் ஓடி வருகிறார்கள்.

இரு அணிகளைச் சார்ந்த வீரர்களும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்; சிலர் கண் கலங்குகின்றனர்; மைதானத்தில் பேரமைதி நிலவுகிறது.

CPR எனப்படும் அவசர கால முறைமையை மருத்துவக் குழு எரிக்சன் மீது செயல்படுத்துகிறது. அவரது நெஞ்சின் மேல் அழுத்துவதும், கூடவே Defibrillator கருவி மூலம் Electrical Shock அளிப்பதுமாக இருந்த அந்த காட்சியை மருத்துவத் துறை சாராத எவரும் காணுதல் நிச்சயம் இன்னும் பதட்டத்தையே ஏற்படுத்தும்.

இன்னும் சொல்லப்போனால் ஒருவரது தனிப்பட்ட சிகிச்சை முறைகளை நேரலையில் காண்பித்ததே அறமற்ற செயல். சிறுவர்கள் முதல் மனோதிடம் இல்லாதவர்கள் வரை இவற்றைக் காணும் வாய்ப்பு இருப்பதால் நேரலையை நிறுத்தியிருக்க வேண்டும்.

டென்மார்க் அணியின் மொத்த வீரர்களும் மருத்துவக் குழுவை சுற்றி நின்று எரிக்சனுக்கு கிடைக்க வேண்டிய தனிமையை உறுதிப்படுத்தியது நெகிழச் செய்த நிகழ்வு.

ஐந்து நிமிட அவசர முதலுதவிக்குப் பின்னர், எரிக்சனின் இதயம் மீண்டும் செயல்படத் துவங்கியிருக்கிறது! கேப்டன், நடுவர், மருத்துவக்குழு என அனைவரும் அதி வேகமாக செயல்பட்டதால் தான் இது சாத்தியப்பட்டது என்பதே நிதர்சனம்.

இத எல்லாம் பாத்த பசங்க, என்ன பண்ணாங்க, எப்டி இறந்து போன எரிக்சன் திரும்ப வந்தான்னு மேலும் கேள்விகள அடுக்கவே... CPR குறித்த தகவல்களை அவர்கள் காதிலும் போட்டு வைத்துவிட்டு இறுதியாக, கடவுளை நம்பி வேண்டினா மட்டும் இப்ப எரிக்சன் திரும்ப வந்திருப்பானான்னு ஒரு கேள்விய வச்சேன்!

அதுக்கு... ம்ம் ஹும், சான்சே இல்ல அப்டின்னானுக!

சற்று தெளிவாகத் தான் இருக்கானுக என்பதில் சிறிய ஆறுதல்!

எரிக்சனின் முழுப்பெயர் "கிறிஸ்டியன் டேனேமேன் எரிக்சன்" என்பது வெறும் தகவலுக்கு மட்டுமே! 🤭

CPR குறித்த விழிப்புணர்வை நம்மைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் ஏற்படுத்துவது நமது கடமை.

https://youtu.be/bEkrQzID8oc

May 29, 2021

இரு கொள்ளை நோய்கள் இடைவெளியில் தொலைக்கப்பட்ட பேரடையாளம் - CBH

பிறந்த சில மாதங்களில் தாயைப் பறிகொடுத்து விட்டு எங்கோ அனாதையாய் இருந்திருக்க வேண்டிய சிறுவன், தொண்டு நிறுவனம் ஒன்றினால் தத்து எடுக்கப்படுகிறான்; பின்னாளில் ஏழை எளிய மக்களுக்காக நாகர்கோவிலில் மருத்துவமனை ஒன்றைத் துவங்கிச் செல்கிறார்; துவங்கப்பட்ட போது  இந்தியா முழுவதும் காலரா எனும் கொள்ளைநோயினால் பீடிக்கப்பட்டிருந்திருக்கிறது.

அம்மருத்துவமனையின் மூலம் அப்பகுதியைச் சார்ந்த பெருந்திரளான மக்கள் பயனடைகின்றனர். சம காலத்தில் அங்கு சிகிச்சை பெற்றவர்கள்படித்தவர்கள்பணி செய்தவர்கள் என சில லட்சம் பேர் மிக உயர்ந்த நிலையில் உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கின்றனர்.

நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓரு கொள்ளை நோய் கொரோனா உருவில் அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் சனங்களை வெகுவாகப் பாதிக்கிறதுநாம் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனையாயிற்றே,

நாம் பயின்ற இடமாயிற்றேநாம் பணிபுரிந்த நிறுவனமாயிற்றேநம் உணர்வுகளோடு பிணைந்த மருத்துவமனையாயிற்றே என்பவற்றின்  பெயரில் மூச்சுத்திணறல்களோடும் நெஞ்சு வலிகளோடும் சாமானியர்கள் நம்பிக்கையோடு அம்மருத்துவமனையை நாடுகிறார்கள்போகின்ற வேகத்தில்அவர்கள் நம்பிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் விதம் "இங்கு சிகிச்சையளிக்க முடியாது" என்கிற பதிலுடன் திருப்பி அனுப்பும் மிக மிகப் பரிதாபமான நிலையில் இன்று இருக்கிறது அம்மருத்துவமனை!

 அம்மருத்துவமனை துவங்க காரணமாக இருந்தவர் 'Harry' Henry John Andrews [b.1873 d.1919]

 அவரது சிறு வரலாறு கீழே

1873 ல் லண்டன் கிழக்கு முனையில் அனாதையாக தன் வாழ்நாளைக் கழித்திருக்க வேண்டிய அவர் எம்மா பூத் என்கிற பெண்மணியால் தத்து எடுக்கப்பட்டு அவர் பணி புரியும் சிறுவர் இல்லத்தில் வளர்க்கப்படுகிறான்.

எம்மா 1888 ல் இந்தியாவிற்கு பயணப்படுகையில் அச்சிறுவனையும் உடன் அழைத்து வருகிறார். இந்தியாவில் காலரா நோய் அதி தீவிரமாக இருந்த நேரமது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தனது பதின் பருவத்திலேயே (1893) மருத்துவப் பணியில் ஈடுபாடு காட்டத் தொடங்குகிறான் அச்சிறுவன்.

நாகர்கோவிலில் அவர்களது அலுவலகக் குளியலறையை மருத்துவப்பணிக்காக பயன்படுத்துகிறார்.

பின்னர் சிக்காகோ சென்று மருத்துவம் பயின்று விட்டு நாகர்கோவில் திரும்பும் அவர் மருத்துவர் பெர்சி டர்னருடன் 1901 ல் மருத்துவமனையை துவக்குகிறார். அங்கிருந்து குஜராத் Emery மருத்துவமனையில் சில காலமும்பின்னர் உ.பி மொரதாபாத்தில் சில காலமும் பணியாற்றி விட்டு வஷிரிஸ்தான் (இன்றைய பாகிஸ்தானில் இருக்கிறது) பகுதியில் இருந்த இந்திய ராணுவ முகாமில் மருத்துவராகப் பணியில் இருந்த போது தோட்டாக்களால் காயமடைந்த ராணுவ வீரர்களைப் பாதுகாப்பான இடத்தில் மாற்றிக் கொண்டிருந்த தருணத்தில் தோட்டாக்களால் துளைக்கப்பட்டு உயிர் நீத்திருக்கிறார்!

தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டச் சிறுவன்அவனது காலம் முழுமையும் பிறர் நலனிற்காக உழைத்து இறக்கும் தருவாயிலும் பிறருக்காகவே மாண்ட பேராளுமை எங்கே! அவர் துவக்கி வைத்துப் போன மருத்துவமனையினால் மூன்று தலைமுறைகள் வரை நன்மைகளைப் பெற்று விட்டுஇன்று அவ்விடத்தையே மீச்சிறு அவசரச் சிகிச்சைக்கு கூட ஒவ்வாத ஒரு இடமாக பேணுகின்றவர்கள் எங்கே!!

அங்கு பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையிலும்அங்கு பணிபுரிந்தவன் என்கிற அடிப்படையிலும்இன்றளவும் ஒரு அங்கமாகத் தொடர்பவன் என்கிற ஆதங்கத்திலும் இதைப் பதிவு செய்கிறேன்! 

இன்றைய தேதியில் - சுயநலன்களால் தொலைக்கப்பட்ட ஆகப்பெரும் அடையாளமாகத் தான் அவ்விடத்தைப் பார்க்கிறேன். 

நான் அண்ணாந்துஅதிகம் வியந்து பார்த்தஎன் மனதிற்கினிய CBH குறித்து மன வருத்தத்துடன் எழுதுவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில்  கனத்த இதயத்துடன் முடிக்கிறேன்.




Related Posts with Thumbnails