April 09, 2009

தேர்தல்-பிரச்சார கத்தலும்,கருத்துகளும்,காமெடிகளும்

நடக்கவிருக்கும் 15ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான கட்சிகளின் பீரங்கி பிரச்சாரத்தையும்,கூப்பாட்டையும்,கத்தலையும் உலகமே வேடிக்கைப் பார்த்து வருகிறது.

பீரங்கியாவது உடலைத் தான் துளைக்கும்; இங்கோ சிலரின் பீரங்கி பிரச்சார கருத்துக்கள் பிறரின் மனதை துளைக்கும் வீரியம் நிறைந்ததாக இருப்பது வருத்தத்திற்குரியது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்து பேசும் எவரையும் ரோலரை ஏற்றி நசுக்குவேன் என மத்திய மந்திரி பதவியில் இருப்பவரும் மதச் சார்பற்றவன் என காட்டிக் கொண்டிருப்பவருமான லாலு பகிரங்கமாக கூச்சலிடுகிறார்.

வருணின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும்,லாலுவின் கருத்து,ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வருண் கூறிய கருத்துகளுக்கான எதிர் பதிலே என்பதும் மறுக்க முடியாத விஷயம்.

அக்கருத்துக்களினால் இருவருமே கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.(மற்றொரு வழக்கில் வருண் இன்னும் விடுவிக்கப்படவில்லை)இதில் காமெடி என்னவென்றால் தேர்தல் ஆணையத்திற்கு இவர்களை தண்டிக்கும் உரிமை இல்லையாம்;தண்டனைக்கான சட்டமும் இவர்கள் கைவசம் இல்லை.

பின்னே எதற்கய்யா அரசு சாரா அமைப்பு என்று பாவனா காட்டுகிறீர்கள்.வெறுமனே விதிமுறைகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்??

இலங்கையில் ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நேற்று வைகோ அய்யா அவர்கள் வீறு கொண்டு பேசியிருக்கிறார்.அவர்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அதே மேடையில் இருந்திருக்கிறார்கள்.இதனை தமிழகக் கட்சிகள் எவையும்(ஆளுங்கட்சி உட்பட) கண்டித்ததாக தெரியவில்லை.

இப்படியெல்லாம் பேசுவதினால் தமிழகத்திற்கு என்ன நன்மை பயக்க போகிறது!(அல்லலுறும் தமிழர்களுக்கு குரல் கொடுங்கள்! அதை விட்டு விட்டு...)

(தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அதிகமென்றால் ம.தி.மு.க விற்கு வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்கள் மட்டுமே தமிழகத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என ஆங்கில ஊடகங்கள் சில கேள்வி எழுப்புகின்றன)

சிறுபான்மையினருக்கு எதிராக விரல் நீட்டும் எவரின் விரல்களையும் வெட்டி வீசுவேன்;டெல்லியில் ஆந்திர காங்கிரஸ் காரிய குழு தலைவர் ஸ்ரீனிவாஸ் இரு தினங்களுக்கு முன்னர் கூறியது இது.

இப்படி வெறி பிடித்தவர்கள் தான் நாளைய மந்திரிகள்,நாடாளப் போகிறவர்கள்!!

பிரதமர் சிங் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தெரியாதவர்,நோஞ்சான் பிரதமர்,ஒன்றிற்கும் லாயக்கில்லாதவர் என பா.ஜ.க முழங்காத பிரச்சார மேடைகளே இல்லை.பதிலுக்கு காங்கிரஸ் பக்கமிருந்து,அத்வானி 1992 ல் என்ன செய்தார் என இந்தியாவிற்கே தெரியும் என்கிறார்கள்.

மேலும் காங்கிரஸ் 2002 கலவரத்தையும் அதற்கு பதிலாக பா.ஜ.க 1984 கலவரத்தையும் கூறி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதயே அனைத்து பிரச்சார மேடைகளும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி விட்டு கூட்டணி தாவுவதிற்கு எந்த கட்சியும் விதி விலக்கல்ல(இது குறித்த எனது முந்தைய பதிவு இங்கே) மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க இயலாத நிலைமை இந்தியாவில் ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணமோ?

தேர்தலில் போட்டியிட டைட்லருக்கு அனுமதியளித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் இருந்து சோனியாவிற்கு (உபயோகப்படுத்தப்பட்ட) ஷூக்கள் அடங்கிய பெட்டி ஒன்றை அனுப்பவிருப்பதாக அகாலிதளம் அறிவித்திருக்கிறது.

புஷ்ஷை நோக்கி எறியப்பட்ட ஷூ நிகழ்வு சீக் சமூகத்தைச் சார்ந்த நிருபர் ஒருவரை அது போன்று செய்யத் தூண்டியது என்றால் பிப்ரவரியில் பெண்கள் ராம் சேனாவிற்கு chaddi அனுப்பிய சம்பவம் இப்போது அகாலிதளத்தை ஷூ அனுப்ப தூண்டியிருப்பதாகவே படுகிறது!! (எப்பிடித் தான் யோசிக்கிறாங்களோ)

நேற்று (8.4.09) அத்வானி,முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவருமே மிகச் சரியாக 12.39 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.அந்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தால் வெற்றி நிச்சயம் என நம்புகிறார்களாம்.

ராமாயணத்தில் ராவணனை ராமன் 12.39 மணிக்கு வீழ்த்தினான் எனவே அந்த சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தால் நிச்சயம் வெற்றி அடைவோம் என்கிறது பா.ஜ.க.

(அப்போ எல்லா தொகுதியிலும் இந்த டைம்லயே வேட்புமனு தாக்கல் செய்தா ஆட்சிய பிடிச்சிரலாம்!!)

1 comment:

Post a Comment

Related Posts with Thumbnails