பாட்டி காலமாகி இன்றோடு ஒரு ஆண்டு ஆகிறது. தந்தையாரின் பணியினிமித்தமும் எனது படிப்பினிமித்தமும் சொந்த ஊரில் அதிக நாட்களைக் கழிக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.
August 30, 2020
சுந்தரபாய் ஐயப்பன் @ அருளப்பன்
August 03, 2020
கோவிட் - 19 சில புரிதல்கள் – 5
‘இதுவரை இல்லாத அளவு’ அச்சுறுத்தல்!
ஒரு நாட்டின் தூண்கள் என சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய இந்நான்கை குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப காலங்களில் காட்சி ஊடகங்கள் என்றால் அரசே ஏற்று நடத்திய தூர்தர்சன் மட்டும் தான். 1991 ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் தாராளமயமாக்கக் கொள்கைகளினால் தனியாருக்கும் தொலைக்காட்சி உரிமங்கள் வழங்கப்பட்டன, தென் இந்தியாவின் முதல் தனியார்த் தொலைக்காட்சியாக 1992 ல் சன் குழுமத்தினர் அறிமுகமானார்கள்; இன்றைய தேதியில் அந்த எண்ணிக்கை பல நூறுகளைத் தொடும்.
அரசு ஏற்று நடத்துகின்ற தூர்தர்சனில் இன்றளவும் அரசு சம்பந்தமான நிகழ்வுகளும், செய்திகளும் தான் இடம் பெறும். அந்த தொனியில், தனியார் ஊடகங்களும் அதன் தலைமைக்குச் சாதகமான செய்திகளையே வெளிக்கொணர்ந்தாலும் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானக் கருத்துகள் இருப்பின் அவற்றையும் அவ்வப்போது எடுத்துரைப்பவையாக இருந்து வந்திருக்கின்றன.
ஆனால் இன்றைய தேதியில் தனியார் செய்தி ஊடகங்களில் கூட எப்படியான செய்திகளை முன்னிறுத்த வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டும் என்பதை ஆளும் ஒன்றிய அரசே தீர்மானம் செய்வதாகத்தான் படுகிறது. குணசேகரன்கள் தரம் தாழ்ந்து நடத்தப்படுவதற்கும் அதைத்தான் காரணம் என்கிறார்கள். இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்களும் அதனை உறுதி செய்திருக்கிறார்.
கோவிட்-19 குறித்தச் செய்திகள் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை ஊடகங்கள் ‘இன்று மட்டும்/ இன்று ஒரே நாளில்/ இதுவரை இல்லாத அளவு’ என்பவற்றைத் தான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லி வருகின்றன. ஆகஸ்ட் 3 மாலை நேரப் புள்ளிவிவரங்களின் படி தமிழகத்தில் 56,698 பேருக்கு தொற்று இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. இது வெறும் தொற்று இருப்பவர்களது எண்ணிக்கை தான். இவர்களில் எத்தனை பேர் நலமாய் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் மறைத்து விட்டு மொத்த எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டு ‘இதுவரை 2.63,222’ பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஆகஸ்ட் 3 நிலவரத்தின் படி, தொற்று ஏற்பட்டு நலமாகி வீட்டிற்கு போனவர்கள் 2,02,283 பேர். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை இவ்வளவு என்று லட்சக்கணக்கை காட்டுவதும், இன்று இத்தனை பேருக்கு என குறிப்பிடுவதை விடுத்து, ‘இன்று மட்டும் ஒரே நாளில் இது வரை இல்லாத அளவிற்கு’ எனவும் அழுத்தி சொல்வதும் மக்களை பயமுறுத்துவதற்கான ஒரு உக்தியாகத்தான் படுகிறது.
உள்ளிருப்பில் நான்கு மாதங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வாதாரத்திற்கு மக்கள் பெரும் அல்லல் படுகிறார்கள். இன்னமும் உள்ளிருப்புக் காலத்தைத் தொடர்வதன் மூலம் மக்களை அடைத்து விட்டு, தொடர் அச்சத்தில் வைத்துக் கொண்டு, உரிமைகளுக்கெதிரான அவர்களின் குரல்வளைகளையும் நெறித்து விட்டு என்ன சாதிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!
July 25, 2020
கோவிட் - 19 சில புரிதல்கள் - 4 (பசிப்பிணி/ வேலையிழப்பு/மன அழுத்தம்)
இந்த உள்ளிருப்பு காலங்கள் கோடிக்கணக்கான இந்திய சாமானியர்களின் இயல்பு வாழ்க்கையைத் திருப்பிப் போட்டிருக்கிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும் போது இங்கு இறப்பு விகிதம் குறைவு என்றாலும், கிராமங்களுக்கும் பரவி விட்ட தற்போதைய நிலையில் இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் ஆறு மாத காலம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அரசு பணியிலிருப்போரும், தனியார்ப் பணிகளில் மாத ஊதியம் பெறுபவர்களும் தவிர்த்து கூலித்தொழிலாளர்கள் துவங்கி வியாபாரம் செய்பவர்கள் வரை அனைத்துத் தர மக்களும் பெரும் அல்லல் படுகிறார்கள்.
சிலர், அறிந்தவர்களிடம் உதவிகளைக் கேட்டு விடுகிறார்கள்; பலர், கேட்கும் திராணியின்றி பசிக்கொடுமையில் மடிகிறார்கள். வேலைகளைப் பறிகொடுத்த மன அழுத்தத்தில் பலர் உயிரை மாய்த்திருக்கின்றனர்.
கடந்த நான்கு மாதங்களில் அரசு கொடுத்தது ரூ. 2,000 மட்டுமே. அரிசியும், பருப்பும் இலவசம் என அறிவித்து விட்டு, எரிபொருளிலும், மின்சாரத்திலும் கை வைத்து இருக்கிறார்கள்.
இப்படியான தருணத்தில் இன, மத, மொழி வேறுபாடு இன்றி பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்து வருகின்ற நிலையிலும் சுயபிடித்தங்களுடன் சிலர் தங்கள் கரங்களைக் குறுக்கிக் கொள்வதும் தொடர்கிறது.
மாத ஊதியம் பெறுகின்ற ஒருவரிடம் சிறு உதவி கேட்டு நண்பர் ஒருவர் முறையிடுகையில்... ' அய்யோ என் கிட்டவே பெருசா எதும் இல்ல ' என்றவர், தவறாமல் ஆன்லைனில் கோடிக்கணக்கில் புரளும் சாமியார்களுக்கு அனுப்புவது முரண்.
தனியார்ப் பள்ளி/ கல்லூரி ஆசிரியர்களும், ஊழியர்களும் போதுமான ஊதியமின்றி தவிக்கிறார்கள். மாத ஊதியம் தவறாமல் பெறுவோரேனும் நமது பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றும் கற்பிப்பவர்களுக்கு உதவியாய் இருத்தல் அவசியம்.
பெரிய அளவில் செய்யவில்லை எனினும், குறைந்த பட்சம், நமக்கு அருகில் இருப்பவரின் பசிப்பிணி போக்கினாலே போதுமானது. கூடவே தனிமையில் இருக்கின்ற உறவுகளை அடிக்கடி அழைத்து அவர்களின் மன உறுதியை உறுதி செய்து கொள்ளுங்கள். பேரன்பினால் எதையும் எதிர்கொள்ளவியலும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன்
எட்வின்
சென்னை
July 23, 2020
கோவிட் - 19 சில புரிதல்கள் – 3
July 19, 2020
கோவிட் - 19 சில புரிதல்கள் – 2
ஆரம்பத்தில் 'குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின்' டெல்லி மாநாட்டைக் காரணம் சொல்லிக் கொண்டும், பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றானக் கோயம்பேடு சந்தையை காரணம் சொல்லிக்கொண்டும் இருந்தார்களே தவிர, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ/ சுகாதார நடவடிக்கைகளையோ போதுமான அளவு திட்டமிடவில்லை.
பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூடுகின்ற சந்தைகளிலேனும் போதுமான கண்காணிப்பு நடவடிக்கைகளை செய்திருத்தல் அவசியம். அதை விடுத்து டாஸ்மாக் கடைளைக் கண்காணிப்புச் செய்த பெருமையெல்லாம், காலத்திற்கும் பல்லிளிக்குமாறு வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன.
இதற்கடுத்து கையைக் காண்பித்தது வடசென்னையின் சேரிப் பகுதகளைத் தான். சாலையோரங்களிலும், தெரு ஓரங்களிலும், குடிசைகளிலும், வாழ்க்கை நடத்தும் மக்கள் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் என்ன பங்களிப்பைச் செய்து விட முடியும்!?
ராயபுரம், மண்ணடி, தண்டையார்பேட்டை முதலான இடங்களில், சுகாதாரமில்லாத பகுதிகளில் வாழும் மக்களைப் பள்ளிக்கூடங்களிலோ, கல்லூரிகளிலோ ஆரம்பத்திலேயே தனிமைப் படுத்தியிருந்தால் வடசென்னையின் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
உள் ஊரடங்கு அறிவித்த அன்று ராயபுரம் சந்தையில் கூடிய பெருந்திரளான மக்களையும் கூடக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தான் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் களுக்கு டோக்கன் விநியோகம் சிறப்பான கண்காணிப்புகளோடு நடைபெற்றது.
இன்றளவும், மண்ணடி, தண்டையார்பேட்டைப் பகுதிகளைக் கடந்து போகின்ற போது, சாலையோரங்களில் குடியிருக்கும் மக்களைக் காண முடியும்.
இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு தொற்றிற்கு அவர் காரணம், இவர் காரணம் என்கிற பழி போடல்கள் இன்றளவும் தொடர்கிறது… இன்னும் உண்டு
July 18, 2020
கோவிட் – 19 சில புரிதல்கள்
July 01, 2020
எட்வின் எனும் நான்...
சாதியம், தீவிர அடிப்படைவாதம், மதவாதம் குறித்து பேசுவோர் பலரையும், தனி மனித தாக்குதல் செய்வோரையும் விலக்கி வைத்திருக்கிறேன்; அது கிட்னிக்கு நல்லது என்பதாலும்!
இன்றைய தேதியில் இதனாலேயே எனது கருத்துகள் மனிதம் மறுக்கும் மத அடிப்படைவாதங்களுக்கு எதிராக இருக்கிறது; ஈயம் பூசின மாதிரியும்/ பூசாத மாதிரியுமான போலி அன்பை வெளிப்படுத்துவோரையும் எதிர்க்கிறது.
நம்பிக்கை என்பது அவரவர் மனது சார்ந்த விடயம். அதை மற்றவர் மீது திணிப்பதில் எள்ளளவும் நியாயம் இல்லை.
நம்பிக்கைகள் - மூடநம்பிக்கைகள் ஆகி விட்டால் பேரன்பிற்கு அங்கு இடமில்லை; பேரழிவே நிச்சயம்.
பேரன்பிற்கு மனிதம் போதும், மதங்கள் தேவையில்லை. அன்பு செய்வோம் ❤
எட்வின்
1/7/2020
சென்னை
