June 24, 2020

சென்னை – சுயநலங்களுக்கு இரையாக்கப்பட்ட நகரம்!


‘சென்னைலயா இருக்கீங்க’?
‘சென்னை அழிஞ்சிருமாமே’?
‘சென்னைல தான் இன்னும் இருக்கீங்களா’?
‘சென்னைல உங்களுக்கு ஒண்ணுமில்லையே’ ?
‘சென்னைல கவனமா இருங்க’!

இவைகளில் ஏதாவது ஒன்று இல்லாமல் சென்னைவாசிகளின் சமீபத்திய தொலைபேசி உரையாடல்கள் துண்டிக்கப்பட்டிருக்காது என்பது திண்ணம்!

1997 ல் தான் முதன்முறையாக சென்னையில் காலடி வைத்தேன். ஐதராபாத்திற்குப் பள்ளிச் சுற்றுலா போகின்ற வழியில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் சில மணி நேரங்களும், திரும்பி வருகையில் மக்கள் நெருக்கடி நிறைந்த வணிகப் பகுதியான தி.நகரில் சில மணி நேரங்களுமாக முற்றுப் பெற்றது அந்த பயணம்.

அப்போதே சில கேள்விகள் மனதை ஆக்கிரமித்திருந்தன. அதிகம் பிறரிடம் பேசிப் பழக்கமில்லாதால், எழுகின்ற எண்ணங்கள் பெரும்பாலும் குரல்வளையைத் தாண்டியதில்லை; ஆசிரியர்களிடம் கூட சொல்ல  முற்பட்டதுமில்லை!

அவற்றில் சில…

‘சென்னை ஏன் இத்தனை நெருக்கடியாக இருக்கின்றது’
‘ஏன் தேநீர் கோப்பைகளையும், குப்பைகளையும் பொது இடங்களில் வீசுகிறார்கள்’
‘குப்பை தொட்டிகள் ஏன் நிரம்பி வழிகின்றன’

அதே எண்ணங்கள் 1998, 2000, 2002, 2003, 2006, 2008 என தொடர்ந்த பயணங்களிலும் மனதை ஆக்கிரமித்திருந்தன. பத்து வருட இடைவெளிக்கு பின்னர் 2018 ல் மீண்டும் சென்னைக்கு வந்த போது, பலர் கரங்களில் சரளமாக மொபைல் போன்கள் தவழ்ந்திருந்ததும்; உயர் கட்டிடங்களும், மெட்ரோ பாலங்களும் முளைத்திருந்ததுமான மாற்றங்களைத் தவிர்த்து நகரம் ஒரு நகரத்திற்கான அடையாளத்தைப் பெற்றிருந்ததா என்றால், அதற்கு பதிலில்லை!

கூடவே, முதல் சென்னைப் பயணத்தில் தோன்றிய கேள்விகள் மீண்டும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு, ’இதற்கு விடிவே இல்லையா’ என்ற புதியதொரு கேள்வியையும் விதைத்திருந்தது.

1997 ல் நான் பார்த்த சென்னையாகவே 2020 லும் சென்னை தொடர்கிறது.

வணிகத்திற்காக, பிழைப்பிற்காக, தங்களின் திறமைகளை எப்படியாவது உலகறியச் செய்து விட வேண்டுமென்பதற்காக புலம்பெயர்ந்த என் போன்ற மக்களால் அதிகரித்தச் சென்னைக் குடியேறல்கள் குளங்களையும், ஏரிகளையும், காடுகளையும், வயல்நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு இன்னும் தனது இருப்பை விரிவு படுத்திக் கொண்டிருக்கின்றது.

இதைப் பதிவு செய்வதும் ஏரியை ஆக்கிரமித்து (அரசு அனுமதியுடன்) கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் இருந்து தான். இதற்கு சொல்லப்படும் காரணங்கள்

1.    மக்கள் நெருக்கடியைச் சமாளிக்க வேறு வழியில்லை
2.    வறட்சியான பயனற்ற நீர்நிலைகள்

சரி, மக்கள் வாழ்வதற்காக இயற்கை வளங்களைக் ஆக்கிரமித்து குடியிருப்பாக மாற்றி இருக்கிறீர்கள், சுற்றுப்புறத்தை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்!! முக்கிய இடங்கள் தவிர்த்து பரவலான இடங்களில் சென்னையின் அடையாளம் இவைகள் தான் என்று சொல்லுமளவிற்கு குப்பைகளும், நெகிழிப் (Plastic) பைகளும், துர்நாற்றமும் ஆக்கிரமித்திருக்கின்றன.

போதுமான அளவு குப்பைத் தொட்டிகள் இல்லை, பெரும்பாலானோர் குப்பைகளை முறையாகக் களைவதில்லை; அப்படியே முறையான தொட்டிகளில் குப்பைகளைக் களைந்தாலும் அவற்றை  அகற்றுவதற்குப் போதுமான துப்புரவு தொழிலாளர்களும் இல்லை. பலர் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுகின்றனர்.

இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கையில், மக்கள் நெருக்கடி நிறைந்த, சுகாதாரம் குறித்தும், சுற்றுப்புறங்கள் குறித்தும் பெருமளவில் அக்கறையில்லாத மக்கள் கொண்ட  சென்னைப் போன்றதொரு நகரத்தில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துதல் என்பது மிகப்பெரும் சவால்.

இதில் இன்னும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால், மருத்துவப்பணிகளில் இருப்போர் கூட முறையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை; முகக்கவசங்கள் ஆங்காங்கே தெருக்களில்  சிதறிக் கிடக்கின்றன;

வீட்டுக்கழிவுகளே சரிவர அகற்றப்படாமலும், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாமலும் இருக்கும் நகரத்தில், மருத்துவக் கழிவுகளைக் குறித்து வாயைத் திறந்தால் இன்னும் குமட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலமே அதற்கு சாட்சி!

இப்படியான ஒரு நகரத்தில் தான் இன்னும் பிழைப்பிற்காக பலரும் ஒட்டிக் கொண்டுள்ளனர். இயற்கையின் சமநிலையை சீர்குலைத்து விட்டு, நாம் சீரும்  சிறப்புமாக இருந்து விட முடியுமா என்பதற்கு பதில், "முடியவே முடியாது" என்பது தான்!

  

June 16, 2020

வெளிநாடு வாழ் தமிழர்கள் - கொரோனா - துயரம்


அயல்நாடுகளில் பணிகளில் இருக்கும் தமிழர்கள் பலருக்கும் இருக்கின்ற ஆதங்கம் 'தமிழக அரசு பிற மாநில அரசுகளைப் போல், குறிப்பாக பக்கத்து மாநிலமான கேரளத்தைப் போல் தம் அயல்நாடு வாழ் மக்களை ஏன் கண்டுகொள்வதில்லை'? என்பது

அரசு மட்டுமல்ல, தமிழக ஊடகங்களும், அயல்நாடு வாழ் தமிழர்கள் நலன்களில் போதுமான அளவு அக்கறை காட்டுவதில்லை என்பது மிக மிக வருத்தம் தரும் விடயம். 

பல லட்சக்கணக்கான தமிழர்கள் வளைகுடா, ஐரோப்பா, ஆப்பிரிக்க, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் பணிபுரிந்து கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகிறார்கள், ஆனால் அவர்களது நலன் பெரும்பாலான நேரங்களில் கேள்விக்குறி மட்டுமே!

கேரள காட்சி ஊடகங்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது அயல்நாடுகளில் இருக்கும் அம்மாநில மக்களைக் குறித்த செய்திகள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ் ஊடகங்கள் கிஞ்சித்தும் அதைச் செய்வதில்லை. 

கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் கூட, அயல்நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியிலிருந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியிழந்தும், தங்குமிடத்திற்கும், உணவிற்கும், மருத்துவத் தேவைகளுக்கும் படுகின்ற அல்லல்களை அரசும், தமிழக ஊடகங்களும் கண்டுகொள்ளாதது பெருந்துயரம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தமிழரின் அவலங்கள் ஊடகங்களில் தலை காட்டுகிறதே ஒழிய, போதுமான அளவு பதிவு செய்யப்படுவதில்லை.

அரசும் ஊடகங்களும் மக்களைக் கண்டுகொள்ளாதது ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் தமிழர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் பல் இளிக்கிறது.

கேரளத்தினர் எங்கு சென்றாலும், அவர்கள் மண் சார்ந்த, மத நம்பிக்கைச் சார்ந்த, கலை சார்ந்த சிறு சிறு குழுக்களாக தொடர்ந்து இயங்குகின்றனர், புதிதாக வருகின்றோரையும் அரவணைத்து கொள்கிறார்கள். அப்படியான குழுக்கள் மூலம், இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்கிறார்கள். இந்தியத் தூதரகம் வரை செல்வாக்கு உடையோரிடம் தொடர்புகளையும் ஏற்படுத்தி ஆவனச் செய்கிறார்கள்.

கேரளத்தினரை மீட்க, கேரளத்தைச் சார்ந்த பெருமுதலாளிகள் தனி விமானங்களை அனுப்புகிறார்கள், மறுபுறம் கேரள அரசு மத்திய அரசிடம் பேசி போதுமான அரசு விமானங்களையும் ஏற்பாடு செய்கிறது.

மாறாகத் தமிழர்கள், அங்கங்கே குழுக்களாக இணைந்திருந்தாலும், ஒற்றுமையும், பொதுவான விடயங்களில் பரஸ்பர புரிந்து கொள்ளுதலும் இல்லாதிருப்பதாலும், எவர் உயர்ந்தவர் என்கிற போட்டியையும், பொறாமையையும் ஒருங்கே தமக்குள் கொண்டிருப்பதாலும் தொடர்ந்து தம்மைத்தாமே அழித்துக் கொண்டுள்ளனர்.

அண்மையில் அயல்நாட்டிலிருந்து திரும்பிய நண்பர்கள் சிலர் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் நெஞ்சை உலுக்கிப் போடுகின்றன!

வேலையின்மை, ஊதியமின்மை, கொரோனா அச்சம், வயிற்றிற்கேற்ற உணவின்மை, குடும்பத்தைக் குறித்த கவலை, சொந்த ஊர் போய்ச் சேருவோமா என்கிற பதட்டம் என பல விதங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு பெருந்துயரத்திலும் கூட தமிழக அரசு கண்டும் காணாமலும் இருப்பது விநோதம் தான். 

அமைப்பாய் திரள்வோம்னு குரல்கள் ஒலித்தாலும், பரஸ்பர அன்பும், ஒற்றுமையும் இல்லையேல் நாம் எதையும் சாதித்தல் என்பது நமக்கு சாத்தியமில்லை!

June 11, 2020

செவ்வணக்கம் தோழர் சஜித்! போய் வாருங்கள்!


இரு தினங்கள் முன்னர் சென்னையில் வசித்து வந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான சஜித் என்பவர் திடீரென சுய நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தியை இடதுசாரிகள் பலர் பகிர்ந்திருந்ததோடு அவரை வெகுவாக சிலாகித்தும் எழுதவே அவரைக் குறித்து அறிந்து கொள்வதில் முனைப்பானேன்.

அவரைக் குறித்து பரிச்சயமில்லாதவர்கள் கூட அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்கிறார்கள். ஆங்கிலப் புலமையும், தேர்ந்த அரசியல் அறிவும், அதனை சாமானிய மக்களும் கூட புரிந்து கொள்ளும் வகையில் முன்னெடுத்து வைக்கின்ற சிறந்த பேச்சாளருமாக திகழ்ந்திருக்கிறார் சஜித்.

தோழர் சஜித் Watford Socialist Party (UK) மற்றும் பொதுவுடமை இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமாய் இருந்திருக்கிறார். அதுவும் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சார்ந்த ஒருவர், லண்டனில் மேற்படிப்பு படித்தவர் இள வயதில் தனது மருத்துவப் பணியையும் துறந்து மக்களோடு மக்களாக நின்று களப்பணி ஆற்றுவதெல்லாம் எளிதானதல்ல. 

இன்னும் சொல்லப் போனால், தோழர் சஜித், பரவலாக அறியப்படாமலே ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காக, அதிகாரச் சுரண்டல்களுக்கு எதிராக களமாடியிருக்கிறார். கால்கள் கடுக்க துண்டுப் பிரசுரங்கள் வரை விநியோகித்திருக்கிறார். 

தன்னலம் மறந்து சக மக்களுக்காக களமாடியோர் மறைந்தாலும், காலமெல்லாம் மக்கள் மனதில் உயர்ந்து நிற்பர் என்பதற்கு தோழர் குறித்து வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மேன்மையான கருத்துகளே சாட்சி!

சமூகம் சார் பிரச்சனைகள் தொடர்ந்து விவாதிக்கப் பட வேண்டும்; மாற்றுக் கருத்துகளுக்கும் செவிகள் திறக்கப்படல் வேண்டும்; இளைய சமுதாயம் வாசிப்பில் ஈடுபாடு காட்ட வேண்டும்; அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல்கள் எழுப்புதல் வேண்டும்!

அதுவே தோழர் சஜித் போன்றோர் விதைத்துச் சென்றிருக்கும் விதைகள் துளிர்த்தெழ வழிவகை செய்யும்.

போய் வா தோழா! வீரன் மரணிப்பதில்லை

May 30, 2020

இளையராஜா – Father. Severios Thomas – மாப்பிளபாட்டு

கலைக்கு முன்னர் மதம் ஒன்றுமில்லை என்பதை கேரள மண் மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.

மார்ச் மாதத்திற்குப் பிறகு குஜராத் மாடலை கழுவி ஊற்றலும், கேரள மாடலை சிலாகித்துப் பேசுவதும் பரவலாகி நிற்கிறது.

இது போதாதென்று சமூக வலைதளங்களில் கேரளத்தைக் குறித்த தொடர்ச்சியான நேர்மறையான தகவல்களைக் கேட்டும், பார்த்தும் நானும் ஓரளவு கடுப்பில் தான் இருந்தேன்.

இதன் பின்னே, திட்டமிட்ட செயல்நோக்கம் ஏதும் இருக்குமோ என்கிற அளவிற்கு கேரள மண் சிலாகிப்பு தொடரத்தான் செய்கிறது, ஆனால், அதில் பெருமளவு உண்மையிருப்பதாலாயே தொடர்ந்து மக்களால் பாராட்டப்படுகிறது என்பது யதார்த்தம்.

Fr Severios Thomas என்பவர் பாடிய சில பாடல்களை கேரள நண்பர் ஒருவர் Facebook ல் பகிர்ந்திருந்ததை இன்று கேட்க நேரிட்டது.

Father பாடியவைகளில் ஒரு பாடல், இளையராஜா அவர்கள் இசையில் 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்நேகத்தின் பூஞ்சோல’ என்கிற மலையாளப் பாடல். அப்பாடலை அவர் பாடிய நேர்த்தியும், அவரது குரலும் மனதை கட்டிப் போடக்கூடியவை. (இளவலின் மெட்டும் கூட)


அவர் குறித்த மேலதிகத் தேடலில் கிடைத்த தகவல்கள் அலாதியானவை. Jacobite Syrian Orthodox Church ஐ சார்ந்தவர் Fr Severios.

கேரளத்தில், மாப்பிள பாட்டுகள் எனப்படுகிற மண்ணின் மணம், வாழ்வியல், மென் மனித உணர்வுகளை வெளிப்படுத்துகிற இஸ்லாமியப் பாடல்களை அதிகம் ரசித்துப் பாடுவதில் சிறந்தவர். மாப்பிள பாட்டுகள் அரேபிய, பெர்சிய, உருது, தமிழ், இந்துஸ்தானி சொற்களை உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

போதகர்களுக்குரிய அங்கியை அணிந்தே இப்படியான பாடல்களைப் பாடுகிறார் Fr Severios; இவரது பாடல்களைக் கேட்கிற இஸ்லாமியச் சமூகம் இவரை “ஞங்களுடே அச்சன்” என்று பெருமைப் படுகிறார்கள்; அதைக் கேட்டு இவர் பேரானந்தப்படுகிறார். கூடவே, பிற சமூகத்தினரும் இவரைச் சிலாகிப்பதில் வெளிப்படுகிறது மத நல்லிணக்கம்!

உங்களது சபையில் இதற்கு என்ன சொல்கிறார்கள் என்கிற கேள்விக்கு, அச்சன் அவர்களின் பதில் ‘என்னுடைய மூத்த போதகர் இதற்கு தடை போடாமல், என்னுடைய திறமையை மேலும் ஊக்குவிக்கிறார்; மனிதர்கள் ஒருவரிலொருவர் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென்கிற கொள்கையோடு இருப்பவர் அவர்; சிலர் இதற்கு எதிராக இருந்தாலும் மனிதம் போற்றுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் இதை நான் கருதுகிறேன் என்கிறார் Fr Severios Thomas.

மனம் நெகிழ்கிறது, மதங்கள் கடந்து அன்பு செய்வோம், கலைகளைப் போற்றுவோம்.

என்றும் அன்புடன்,
எட்வின்
30/5/2020
சென்னை

May 08, 2020

ஏன் வீழ்ந்து கிடக்கின்றோம்!

'மன்னன் எவ்வழியோ
மக்களும் அவ்வழி' என்றார்கள் மன்னராட்சிக் காலத்தில். அது தற்போது ஓரளவுப் பொருந்திப் போனாலும், தற்போதைய நம் வாழ்வியலுக்கு அரசை மட்டுமே குறை சொல்லி விட முடியாது.

சிந்திக்காத மக்கள் கூட்டம், எல்லாவற்றிற்கும் தலையாட்டினர் அன்று!

இன்றோ, தகவல்களைப் பெறுவதற்கும், கற்பதற்கும், அதிலிருந்து சுயமாக சிந்திப்பதற்குமான சூழல் நமக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? என்பது ஒருபுறம்!

மறுபுறம்...

எந்த தலைமுறையும், சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான எவ்வித செயலையும் சுயமாக கற்றுக் கொள்வதில்லை. அது நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தே நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

நம் வீட்டார், நண்பர்கள், அலுவல் சார்ந்தோர், ஊர்ப்பெரியோர் இப்படியானவர்களிடமிருந்து கற்பவையே பெரும்பாலும் நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது.

நமது குணங்களைத் தீர்மானிப்பதில் மேற்குறிப்பிட்டோருக்குப் பெரும்பங்கு உண்டு.

இப்போது சொல்லுங்கள், நம் வீட்டார், நண்பர்கள், அலுவல் சார்ந்தோர், ஊர்ப்பெரியோர் நமக்கு எவ்விதக் கருத்துகளை நமக்குக் கடத்தினர்? கடத்திக் கொண்டிருக்கின்றனர்? எவ்விதமான வாழும் சூழலை நமக்கு முன் வைத்தனர்? வைத்துக் கொண்டிருக்கின்றனர்?

இக்கேள்விகளுக்கான பதில்களில் அடங்கியிருக்கிறது நமது டாஸ்மாக் வேதனைகள் 😥

May 03, 2020

அரிதாரம் பூசிய நியோ வாழ்வியல்

(பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சிறுகதை)

.... என்னங்க! நல்லாச் சொல்லுங்க இந்த பையனுக்கு, 'எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேன்றான்! எப்பப்பாரு விளையாட்டுன்னு இருக்கான்' எப்ப தான் நல்ல புத்தி வருமோ தெரில!

'நீதிக் கதைகள், வேதாகமக் கதைகள், நீதிமொழிகள எடுத்துப் படிடா' அப்ப தான் நல்ல புத்தி வரும், கூடவே நல்லது செய்யத் தோணும் ஒனக்கு, அதிகாரம் அதிகம் பூசிய அக்கறையில் அப்பா!

...தொண்டைக்கு வலிக்காத அளவில் சரிப்பா என்றான் பையன்.

சரி... சரி... நான் இங்க வச்சிருந்த அந்த கவர் எங்கடி! கொஞ்ச நேரமா தேடுறேன், காணவே இல்ல!

அதுல, அப்டி என்னங்க இருக்கு? இப்டி பதட்டப்படுறீங்க!

என்ன இருக்காவா! அதுல தாண்டி நாளைக்கு நாம கட்டப் போற புது பில்டிங்கோட அப்ரூவ்ட் ப்ளான் இருக்கு.

என்னங்க சொல்றீங்க! அப்ரூவல் கிடைக்கலன்னீங்க!

அதெல்லாம் வாங்கியாச்சி, காச இறைச்சா இங்க என்ன வேணா நடக்கும்னு ஒனக்கு தெரியாதா! சரி, கவர் எங்க அதச் சொல்லு.

நான் தான் பீரோல எடுத்து வச்சிருக்கேங்க, இந்தாங்க.

அ..ப்..பா..டா... இப்ப தான் நிம்மதி! சரி சரி, நான் இந்த ப்ளானோட ரெண்டு காப்பி எடுத்துட்டு இப்ப வந்துர்ரேன்.

'... என்ன இவ போன் எடுக்க இவ்ளோ நேரம்'

...ம்ம்ம்... ஹலோ, எடி ஜெனிபரு, நேத்தைக்கு, ஒன்னயும் காணோம் ஒன் குடத்தயும் காணோம்!

... ஊர்ல தான இருக்கீங்க!!

ஆமாக்கா, ஊர்ல தான் இருக்கோம், அது ஒண்ணுமில்லக்கா, நீங்க போட்ட மாதிரியே நாங்களும் மண்ணுக்கடில பைப்ப போட்டு மெயின் லைன்ல மாட்டிட்டோம், இப்ப தண்ணிக்கு வெளிய வர வேணாம்ல.

... ஓ, அப்டியா கத, பரவாயில்லயே!! உங்களுக்கும் நல்ல யோசனை லாம் வந்திருக்கே!!

... சரி சரி, அவர் வர நேரமாச்சி, சர்ச்சுக்கு கிளம்பணும்... அப்புறம் பேசுறேன், பா...ய்!

... அப்பா சொன்ன நீதிமொழிகளை படித்துக் கொண்டிருக்கிற மகன்,

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்: பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன் (நீதிமொழிகள் 8:13)

என்பதில் நிறுத்துகிறான்.




August 21, 2018

கிரியைகள் இல்லாத விசுவாசமும் பகட்டான கிறிஸ்தவமும்


கிறிஸ்தவம்கிறிஸ்தவர்கள் என்கிற பெயர்களில் இன்றைய தேதியில்இந்த மணிப்பொழுதில் நடந்து வருகின்றவையும்அதன் ஆளுமைகளும்அதிகாரங்களும்மனித நேயத்தின் மீதும்மக்களின் மீதும்நீதி நியாயங்களின் மீதும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நாம் உணர்தல் அவசியம்.

ஆராதனை என்கிற பெயர்களில் போடுகிற சத்தமும்கூச்சலும் எம்மனிதரையும் முகம் சுளிக்க வைக்கிற ஒன்று. 2015 டிசம்பர் காலங்களில் இதே போன்றதொரு சந்தர்ப்பத்தில் தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரிந்து வரும் நண்பர் ஒருவர் பகிர்ந்த சில கருத்துகளை குறிப்பிட்டாக வேண்டும்.

பஜனை என்கிற பெயர்களிலும்கேரல் என்கிற பெயர்களிலும்பிரார்த்தனை என்கிற பெயர்களிலும் ஒலிபெருக்கிகளை வைத்துக் கொண்டு ஆன்மீக வாதிகள் என்றழைக்கப்படும் சில கோமாளிகளால் பாதிக்கப்படுவது முதியவர்களும்குழந்தைகளும்படிப்பில் ஆழ்ந்திருக்கும் மாணவ மாணவிகளும்வியாதியில்மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும்கர்ப்பிணிப் பெண்களும் தான்” என்று கருத்துப் பரிமாறியிருந்தார் அவர்.

மத் 6:5 அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும்வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.

ஒபாமா அவர்களின் ஓய்விற்கு முந்தைய உரையை சமீபத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் முன்னிறுத்திப் பேசியதும்அதைத்தான்மனித மனங்கள் மாறாமல்மனிதருடைய இருதயங்கல் மாறாமல்சட்டங்கள் மாறுவதினாலோஅமைப்புகள் மாறுவதினாலோ சமுதாயத்தில் அமைதியையும்ஒழுக்கத்தையும் கொண்டு வருதல் இயலாது என்றார்.

மத் 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

Salvation Army தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆன்ட்ரே காக்ஸ்  The Whole World Mobilising என்கிற நோக்கத்தில் அதைத்தான் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

By being clean in our heart and to reach out people and to stand for what is right.

மத் 6:7 அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்அவர்கள் அதிக வசனிப்பினாலே தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள் 

வேதாகம வசனங்களை படிக்கும் போது அது எதற்கு சொல்லப்பட்டதுயாருக்கு சொல்லப்பட்டதுஏன் சொல்லப்பட்டது என்பது குறித்த தெளிவு மிக அவசியம். The 7 Ws are very important Why? When? What? Where? Who? Which? HoW?

இதுவறியாமல் வேதாகமத்தை வாசிப்பது குழப்பத்தையே உருவாக்கும். ஒருமுறை ஷார்ஜா AG சபையில் ஆராதனைக்காய் சென்றிருந்த போதுசங்கீதங்களில் இருந்து ஒரு பகுதியை வாசித்த பல பட்டங்களைப் பெற்ற ஒருவர் “சேலா” என்பதையும் சேர்த்தே வாசித்தார்.

சேலா என்பது என்னவென்ற புரிதல் இல்லாமல் வாசித்தவர் போலத்தான் இன்று நம் நிலைமையும். `சேலாஎன்பது இசையில் வரும் Interlude.

சங் 3: 2, 4, 8

யாத் 20:8 ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

ஓய்வு நாளை ஓய்ந்திருந்து ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும்இல்லையென்றால் தேவ கோபாக்கினை வரும் என்று அதன் சாராம்சம் புரியாமல்வெறுமனே குற்றம் சாட்டுவதில் இங்கு எதும் மாறி விடப் போவதில்லை.

அப்படியென்றால் ஓய்வு நாட்களில், Emergency Room களிலும், Critical Care களிலும்மருத்துவமனைகளிலும்முதியோர் இல்லங்களிலும் பணிவிடை செய்பவர்கள் எல்லாரும் சாபத்தையே பெறுவார்களா?!!

மத் 12:5 அன்றியும் ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாயலத்தில் ஓய்ந்திராமல்ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும்குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

மத் 12:11 உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து அது ஓய்வு நாளில் குழியிலே விழுந்தால்அதைப் பிடித்து தூக்கிவிடமாட்டானோ?

மத் 12:12 ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயந்தான் எனறு சொன்னார்.

இவ்விதம் நியாயத்தைப் பேசினவருக்கும்பேசுபவர்களுக்கும் பொதுவாக என்ன சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...

மத் 12:14 அவரைக் கொலைசெய்யும் படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைப் பண்ணினார்கள்.

இன்று வேதாகமம் வாசிக்கப்படுகிறதுகாலை 5 மணிக்கு ஜெபம்மீண்டும் 7 மணிக்கும் 8 மணிக்குமாக பணியிடங்களிலும்ஆலயத்திலும் ஜெபம்ஆலயத்தை கடந்து போகையிலெல்லாம் உள்ளே சென்று ஜெபித்து கடந்து செல்வது... என ஜெபமும்வேதாகம வாசிப்பும் முற்றிப் போனதின் விளைவு என்ன?

கீழ்ப்படியாமையும்,நேரந்தவறுதலும்உண்மைக்குப் புறம்பானவைகளைப் பேசுவதும்தொடர்கிறதென்றால்நாம் ஆலயத்திற்கு செல்வதும்ஒரு நாளைக்கு 5 முறை ஜெபம் பண்ணுவதாலும் என்ன ஆகி விடப் போகிறது.

நீதி 19:1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப் பார்க்கிலும்உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.

எனவே இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்பதை மனதில் கொண்டுஎண்ணங்களில் ஆகாயத்தில் பறக்க ஆசைப்படாமல்நம் சுய கால்களில் நிற்க பழகுதல் அவசியம்.

கொரி 7:31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும். இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே.

யோவான் 3:18 என் பிள்ளைகளேவசனத்தினாலும் நாவினாலுமல்லகிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்

யாக் 2:24-26 ‘ஆதலால்மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்லகிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே’ ‘அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக் கொண்டு வேறு வழியாய் அனுப்பி விட்ட போதுகிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?’

அப்படியேஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது போலகிரியைகளிலில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.  

தேவையிலிருப்போருக்கு உதவுவோம், நம் செயல்களினால் மனிதம் போற்றுவோம். 

Related Posts with Thumbnails