December 31, 2020

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்!

 

கடந்த பத்து ஆண்டுகளில் அளப்பெரிய மாற்றங்களை அடைந்திருக்கிறோம்.

செய்தித்தாள்களை/ வானொலியை/ தொலைக்காட்சியை நாம் திருப்பினால் மட்டுமே நுகர முடிகின்ற செய்திகள் பிரேக்கிங் நியூஸ்களாய்; ஆப்களில் நோட்டிபிகேசன்களாய் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

இவை போதாதென்று மெசஞ்சர்/வாட்சப் என நீளும் செயலிகளின் டிங் டிங் சத்தங்கள் நமை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றன.

வேலைகளை முடித்து விட்டு அமருகையில் கூட அடுத்த கணம் கரங்கள் போனைத் துழாவத் துவங்கி விடுகின்றன.

அலுவல்கள், இ. மெயில், என ஆன்லைனிலேயே இருந்து விட்டு, நண்பர்கள், உறவுகளிடம் கணினி வழியே பேசி அமர்ந்தாலும் பல நேரங்களில் மனம் வெறுமையாய் உணர்வதைத் தவிர்க்க முடிவதில்லை.

வீடுகளில் கனிவான உரையாடல்கள் நிகழ்வது வெகுவாகக் குறைந்து வருவதாகவே படுகிறது. பெற்றோர் - குழந்தைகள்; கணவன் - மனைவி; அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை என நீளும் உறவுகள் இன்னும் உறுதிப்படுதல் அவசியம். இல்லையென்றால் உறவுகளில் அடுத்த தலைமுறை பெரிதாக நம்பிக்கைக் கொள்ளுதல் அரிது.

எந்தவொரு உறவிற்கும் அடிப்படை, அன்பும்; பகிர்ந்து கொள்ளுதலும்; வெளிப்படைத்தன்மையுமே!

இரு பத்தாண்டுகளுக்கு முன்னர் எனது நாட் குறிப்புகளின் முகப்பில் எல்லாம் 'Only Caring and Sharing would keep us all alive and peaceful' என எழுதி வைத்திருப்பேன்.

இன்று அன்பையும், பொருட்களையும் பகிர்ந்து கொள்ளுகிறோமோ இல்லையோ... டிஜிட்டல் தகவல்களை Share செய்து முடங்கிக் கிடக்கிறோம்.

அன்பு தணிதல் ஒன்று போதும் மனதின் சமநிலை மாறுவதற்கும்; உறவுகள் உடைந்து போவதற்கும்.

பெற்றோர் இருந்தும், பெயருக்கென உறவுகள் இருந்தும் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத ஒருவரது மனது, சமநிலையற்றதாக தொடர்ந்து பயணிக்கும்.

ஏமாற்றம், வெறுப்பு, தனிமை, என ஒன்றின் மேல் ஒன்றாக சுமையேற்றப்படும் சமநிலையற்ற அந்த மனது ஏதாவது ஓர் புள்ளியில் தனது ஆற்றாமையை/ உள்ளக்கிடக்கைகளை அழுகை வடிவிலோ, கூச்சலிட்டோ, தன்னைத் தானே/பிறரைக் காயப்படுத்திக் கொள்வதன் மூலமாகவோ வெளிப்படுத்துகின்றது. உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் கூட இது தான் அடிப்படை.

இவ்வுலகை நம்பிக்கையாய் எதிர்கொள்ள கொஞ்சம் கவனிப்பும், அரவணைப்பும் தான் அடிப்படை!

சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரிடமும் பேசுங்கள், அவர்கள் மனதும் இலகுவாகும். மொபைலிலும், கணினியிலும் வாசிப்புகள், உரையாடல்கள் தொடர்ந்தாலும் ஒன்றாய் அமர்ந்து பேசுதல் மனங்களை அமைதிப்படுத்தும்.

அடுத்த பத்தாண்டுகள் இன்னும் மேம்பட வெறுப்பு தவிர்த்த அன்பு நம்மிடையே நிலைக்க வேண்டும்.

உடன் பயணித்த, பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பும், நன்றிகளும்.

31/12/2020
சென்னை

December 30, 2020

விழாக்காலப் பேறுகள்

 

நான் சார்ந்திருந்த சமூகத்தில் டிசம்பர் துவங்கி விட்டாலே விழாக்கால உணர்வு மேலிடுவது பலர்க்கும் பொதுவானது. 


வீடுகளில் குடில்கள், வண்ணக் காகிதங்கள், நட்சத்திரங்கள், கொடிகள் வடிவமைப்பதில் இளைஞர்கள் தீவிரம் காட்டுவார்கள். 


வாழ்த்து அட்டைகள் அனுப்புவதில் முதிர்ந்தவர்கள் ஈடுபாடு காட்டுவார்கள். கூடவே தங்களுக்கு பிறர் அனுப்புகிற வாழ்த்து அட்டைகளை வீடு முழுவதும் அலங்காரமாக தொங்க விட்டிருப்பர்.


வீட்டைச் சுத்தம் செய்வதில் துவங்கி, வீட்டிலேயே இனிப்பு, பலகாரங்களைச் செய்வதற்கானப் பணிகளில் பெண்கள் மும்முரமாக இருப்பர். 


இவையனைத்தும் எனைச் சூழ்ந்திருந்த போதிலும், வாழ்த்து அட்டைகள் அனுப்புவது தவிர்த்து மற்றவைகள் எதிலும் அதீத நாட்டமில்லாமலே இன்றளவும் கடந்து வந்திருக்கிறேன். 


புத்தாடை அணிவதில் கூட ஆர்வம் காட்டியதில்லை. (அது என்னாத்துக்குங்கிறேன் 😆) 


இன்றைய தேதியில் வீடுகளில் வெகு அரிதாகத் தான் இனிப்பு, பலகாரங்கள் செய்கிறார்கள்.


கைப்பட எழுதி அனுப்பும் வாழ்த்து அட்டைகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. 


அலங்காரப் பொருட்களையும் கடைகளிலேயே வாங்கி விடும் போக்கும் இருக்கின்றது. 


நமது நலனைக் குறித்து எண்ணுவதற்குக் கூட நேரமின்றி எதற்காகவோ ஓடிக்கொண்டு இருக்கிறோம். 


இப்படியானதொரு பொழுதில் தான்... வாழ்த்து அட்டைகளும்; கைப்பட எழுதி அனுப்பும் கடிதங்களின் முக்கியத்துவமும்; அவைகள் அளிக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடுத்த தலைமுறையினரையும் சென்றைடைய வேண்டும் என்கிற நோக்கில் மகர்களைக் கொண்டு எழுத வைத்தவை இவை. 


என்ன தான் கணினியிலும், கைபேசியிலும் பக்கம் பக்கமாய் எழுதினாலும், கையெழுத்துகள் தரும் மனநிறைவிற்கு அவை ஈடாகாது. 






December 24, 2020

வலிந்து திணிக்கப்பட்ட மரணங்கள்!

 காஞ்சிபுரம் சரண்யா வில் துவங்கி, மதுரவாயல் பிரிசில்லா - இவாலின்; விழுப்புரம் ரெமி; திருச்சி யஸ்வந்த் என தொடரும் மரணங்கள் நமது உள்ளாட்சி கட்டமைப்புகளின் செயலற்ற தன்மையைப் பறைசாற்றுகின்றன.


இவை எல்லாம் கடந்த இருபது நாட்களுக்குள் நிகழ்ந்த சோகங்கள்.

இந்த ஐந்து இழப்புகளும் மூடப்படாத கழிவு நீர் தொட்டிகளால் ஏற்பட்டவை.

நிர்வாக அலட்சியங்கள் மக்களைப் படுகொலைகள் செய்திருக்கின்றன. இதில் டிஜிட்டல் இந்தியாவிற்கு ஒன்றும் குறைவில்லை!

ஆறு, குளங்களில் குளிக்கையில் எதேச்சையாக மூச்சுக் குழாயில் நீர் சென்று விடும் போதே நாம் பெரும் அவதிக்குள்ளாகி விடுகிறோம்.

நல்ல நீர், மூச்சுக் குழாயில் செல்வதற்கே அந்த நிலை என்றால், நெடி வீசும் கழிவு நீர் மூச்சை அடைக்கையில் என்ன பாடு பட்டிருக்கும் அந்த உயிர்கள். சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

திருச்சியில் நேற்று காலமான யஸ்வந்த் ற்கு ஐந்தே வயது! 😥

சொச் பாரத் என்கிற வெற்று வாக்கு அரசியல் ஒருபுறம்; அந்த வெற்று வாக்கு அரசியலுக்கு ஒத்து ஊதி அண்டிப் பிழைக்கும் அடிமைக் கூட்டம் மறுபுறம்!

இவர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டதற்கு நாம் தான் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது! 

December 23, 2020

ஆதாமும் - ஏவாளும் - கொசுவும் பின்னே IQ வும்

 


கொஞ்ச நாளாவே இத பதிவு செய்யணும்னு நினைவு வரும்; அப்புறம்... அப்புறம்னு... தள்ளிப்போட்டு நேத்திக்கு கொசு கொடுத்த தொல்லையால 'இப்ப இல்லன்னா எப்ப'ன்னு தான் இது...


ரெண்டு மாசம் முன்னால ஒரு சண்டே காலைல பயலுக கூட பேசிட்டிருந்தேன். 


Me: இப்ப நாம கோயிலுக்குப் போகல சரி, ஆனா அங்க பேசுற, சொல்லிக் குடுக்குற கதைகள் உங்களுக்கும் தெரியணும்.


A2: சரிப்பா, ஆனா ஒரு டென் மினிட்ஸ் ல முடிச்சிருங்க! 🤭


Me: அடேய்... ஒரு 30 நிமிசமாவது கேக்கப்பிடாதா?!


A1: சரி பாப்போம், சொல்லுங்க


Me: ஏழு நாள் ல கடவுள் உலகத்த உண்டாக்கின கத தெரியுமா?!


A2: அதான் சண்டே கிளாஸ் ல 'செவன் டேஸ் ஆப் கிரியேசன்' ன்னு' சொல்லிக் குடுத்திருக்காங்களே!! 


Me: அப்போ, அந்த 6 + 1 நாட்கள் ல 'கடவுள் எத எத உண்டாக்கினார்' அப்டின்றத மட்டும் வாசிச்சி காட்டுங்க போதும்!


A2: வாசிக்கணுமா? தமிழ்ல யா!! 


Me: சரி அப்ப யூடியூப் ல வீடியோ பாத்து வாசிங்க. 


வாசிச்சி முடியிற நேரம் A1 ஒரு கேள்விய கேட்டான்...


A1: Genesis 1:28 ல "Humans can rule over every living thing on the earth" அப்டின்னு சொன்ன God சர்ப்பத்துக்கு மட்டும் Extra IQ வச்சிட்டாரோ? எப்டி ஆதாமும் ஏவாளும் ஏமாந்தாங்க!! 


Me: இப்பிடி கேள்விலாம் கேக்கப்பிடாது கேட்டியா!! அதையும் மீறி கேட்டன்னா... என் வரிசைல ஒன்னயயும் சேத்திருவாங்க 🤭


"அன்னைக்கு ஏவாள் பழத்த கடிக்காம இருந்திருந்தா இன்னைக்கு கொசு கடிக்காம இருந்திருக்கும்" ப்ச்ச்ச்ச் ... 😂



December 05, 2020

மழை - மிதப்பு - மெத்தனம்

 சென்னை மாதிரியான பெருநகரங்கள் என்றில்லை, முறையான நீர் வடிகால் அமைப்புகள் இல்லாத எந்த நகரமும்/ கிராமமும் சிறு மழைக்கே வெள்ளத்தில் மிதக்கத்தான் செய்யும். 

சென்னையில் சில இடங்களில் வடிகால் அமைப்புகள் இருந்தும் நீர் வடியாமல் இருப்பதற்குக் காரணம், பிளாஸ்டிக் (நெகிழி) பைகளையும், குவளைகளையும் வீசும் மக்களின் முட்டாள்த்தனமும் அலட்சியமும் தான். 

கூடவே, கழிவுகளை நேரத்திற்கு நேரம் அப்புறப்படுத்தாமல் இருக்கும் பணியாளர்களின் ஏனோதானோ மன நிலையும் வடிகால்கள் அடைப்பிற்கு பெருங்காரணம்.

ஆண்டாண்டு காலமாய் சிறு மழைக்கே நகரம் மிதக்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் அதனைத் தடுக்கவும், முறையான திடக் கழிவு மேலாண்மை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டிய அரசு அவற்றை செயல்படுத்தாமல் இருப்பதே! 

மக்களின் சுயநலன், அரசின் மெத்தனம், பணியாளர்களின் அலட்சியம் இவை மாறி, மக்கள் - பணியாளர்கள் - அரசு ஆகிய மூன்றும் பொதுநலன் என்கிற புள்ளியில் இணைந்து செயல்படவில்லை என்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிறுமழைக்கே வெள்ளத்தில் மிதக்கத்தான் போகிறோம். 

November 14, 2020

தீபாவளி 2020 – பட்டாசு – தொழிலாளர் நலன்

 

விழாக்கள் என்றதும் நினைவிற்கு வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும், பலகாரங்களும், இனிப்புகளும் தான். குறிப்பாகப் பட்டாசுகள் ஏற்படுத்தும் உவகை அலாதியானது. சிறுவயது முதல் இன்று வரை அதிக ஒலி எழுப்புகின்ற பட்டாசுகளின் மீது பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை என்கின்ற போதிலும், வாணவேடிக்கைகளில் மனம் லயித்தே இருந்து வந்திருக்கிறது. 

ஒரு காலமும் இல்லாத அளவிற்கு இந்த முறை பட்டாசுகளுக்கு தடை கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு பல மாநிலங்களில் தடைகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பட்டாசுகள் இல்லையேல் விழாக்களைக் கொண்டாடவே முடியாதா என்கிற கேள்விக்கு பதில்… முடியும் என்பது தான். 

ஆனால், பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பி தங்கள் உயிர்களையும் பணயம் வைத்து வேலை செய்கின்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகைகளைச் செய்து விட்டு இது போன்ற தடைகளை நடைமுறைப்படுத்துதலே அரசுகளுக்கு அழகு.

இதில் இன்னும் நம்மை உறுத்துவது… ‘பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு இத்தனை பேர் மரணம்’ என அடிக்கடி நாம் கேள்விப்படுகிற பரிதாபச் செய்தி!

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் தொழிலாளர்களின் துயரங்கள் இன்னும் மாறாமல் தொடர்வது மிகவும் வருத்தப்படவேண்டிய விடயம். தொழிலாளர்களின் பாதுகாப்போ, தொழிற்சாலைகளின் பாதுகாப்புத்தன்மையோ இங்கு உறுதி செய்யப்படுவதில்லை.

சிவகாசி பட்டாசு ஆலைகளில் பணிபுரிவோர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணிபுரிவது கண்கூடு.

கொரோனாவிற்கு பயந்து முகக் கவசங்கள அணிவது கட்டாயம் என்கிற அரசு பட்டாசுத் தொழிலாளர்கள், கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்பவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மனித மலம் அள்ளுவோர் முதலானோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் என்பதில் உறுதியாய் இருப்பதில்லை, அதற்குரிய நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விதிமுறைகளையும் புறந்தள்ளுகிற நம் சமூகம் மனித உயிர்களைக் கிள்ளுக்கீரைகளாகப் பாவிப்பதில் ஆச்சர்யமில்லை!

September 12, 2020

நீட் எனும் தமிழனத்துவேசம்

 மோனிஷா, விக்னேஷ், ஜோதிஸ்ரீ என இன்றளவும் தொடரும் இந்த ஏமாற்றங்களுக்கும், இழப்புகளுக்கும், சொல்லவொண்ணா துயரங்களுக்கும் பின்னால் இருப்பது அப்பட்டமான வாக்கரசியலும், தமிழனத்தின் மீதான வன்மமும் மட்டுமே. 


முயன்று முயன்று ஒரு தருணத்தில் நமக்கே என்னடா இது என்று வெறுப்பும், மன அழுத்தமும் ஒரு சேர தாண்டவமாடும். 


அப்படியெனில் 1176/1200 மதிப்பெண் எடுத்த அனிதாவின் மன நிலைமையை சற்றும் ஊகித்து கூட நம்மால் பார்க்கவியலாது. 


எத்தனை நம்பிக்கையோடு அவர் உச்ச நீதிமன்றத்தின் வாயிலில் காத்திருந்தார் 💔



நம் தமிழ் பிள்ளைகளை இனியும் இழத்தல் கூடாது. 


அவர்களுக்கு சொல்ல வேண்டியது இவைகளை மட்டும் தான்...


' நம் தலையெழுத்து இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் பிறந்தது '


 ' இங்கு நீதி என்பது விலை கொடுத்து வாங்கப்படுவது '


' நீ தோற்றாலும் பரவாயில்லை; எங்களைத் தோல்வியில் தள்ளி விடாதே ' 


' என்ன நிகழ்ந்தாலும் உன் பக்


கம் நிற்கிறோம் ' அன்பு குழந்தைச் செல்வங்களே!




August 30, 2020

சுந்தரபாய் ஐயப்பன் @ அருளப்பன்

பாட்டி காலமாகி இன்றோடு ஒரு ஆண்டு ஆகிறது. தந்தையாரின் பணியினிமித்தமும் எனது படிப்பினிமித்தமும் சொந்த ஊரில் அதிக நாட்களைக் கழிக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.


ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைகளில் மட்டும் சென்று வருவதுண்டு. செல்கின்ற போதெல்லாம் தாத்தாவும் பாட்டியும் தங்களது பிரியத்தால் திக்குமுக்காடச் செய்வார்கள்.

பாட்டிக்காக வீட்டில் காத்திருக்கையில் வயல்வெளிகளில் வேலையை முடித்து விட்டு தலை மேல் ஒரு பாரம் விறகுக் கட்டையும் வைத்து வீடு வந்து சேர்ந்ததும் சேராததுமாக கேட்கின்ற முதல் கேள்வி 'காப்பி தண்ணி எதும் குடிச்சியா எட்டினு' என்பதாகத் தானிருக்கும்.

தொண்ணூறுகளில் இட்லி தோசை எல்லாம் கனவு உணவுகள் தான். ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இருமுறை அதுவும் உறவினர்கள் வந்தால் தான் சாத்தியம்.

தெரு வழியே இட்லி விற்பனை செய்யும் பெண்மணியின் ' இட்லீ...ஈ...ஈ...ஈ ' குரல் கேட்டுவிட்டால் போதும் பாட்டிக்கு; உடனே ஒரு தட்டையும், சிறு சில்வர் டம்ப்ளரையும் எடுத்துக் கொண்டு சேலைத் தலைப்பில் முடித்து வைத்திருக்கும் சேமிப்புககளைத் துழாவத் தொடங்கி விடுவார்.

அவ்வளவு வறுமையிலும் எட்டு பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் ஐயப்பன் என்கிற அருளப்பனும்; சுந்தரபாயும் அவர்களால் இயன்ற மட்டும் குறைவின்றியே வளர்த்தனர்.

பாட்டி குறித்து பொது வெளியில் இதுவரை எழுதியதில்லை. இதனைப் பதிவு செய்கையில் நாளை நமைக் குறித்து நம் சந்ததி எவ்விதம் வரலாற்றைப் பதிவு செய்யும் என்கிற பதட்டம் மேலிடுகிறது!

வாழ்நாள் முழுவதும் நம் முன்னோர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறோம்! 

August 03, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 5

  ‘இதுவரை இல்லாத அளவு’ அச்சுறுத்தல்!

ஒரு நாட்டின் தூண்கள் என சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய இந்நான்கை குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப காலங்களில் காட்சி ஊடகங்கள் என்றால் அரசே ஏற்று நடத்திய தூர்தர்சன் மட்டும் தான். 1991 ல்  அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் தாராளமயமாக்கக் கொள்கைகளினால் தனியாருக்கும் தொலைக்காட்சி உரிமங்கள் வழங்கப்பட்டன, தென் இந்தியாவின் முதல் தனியார்த் தொலைக்காட்சியாக 1992 ல் சன் குழுமத்தினர் அறிமுகமானார்கள்; இன்றைய தேதியில் அந்த எண்ணிக்கை பல நூறுகளைத் தொடும்.

அரசு ஏற்று நடத்துகின்ற தூர்தர்சனில் இன்றளவும் அரசு சம்பந்தமான நிகழ்வுகளும், செய்திகளும் தான் இடம் பெறும். அந்த தொனியில், தனியார் ஊடகங்களும் அதன் தலைமைக்குச் சாதகமான செய்திகளையே வெளிக்கொணர்ந்தாலும் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானக் கருத்துகள் இருப்பின் அவற்றையும் அவ்வப்போது எடுத்துரைப்பவையாக இருந்து வந்திருக்கின்றன. 

ஆனால் இன்றைய தேதியில் தனியார் செய்தி ஊடகங்களில் கூட எப்படியான செய்திகளை முன்னிறுத்த வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டும் என்பதை ஆளும் ஒன்றிய அரசே தீர்மானம் செய்வதாகத்தான் படுகிறது. குணசேகரன்கள் தரம் தாழ்ந்து நடத்தப்படுவதற்கும் அதைத்தான் காரணம் என்கிறார்கள். இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்களும் அதனை உறுதி செய்திருக்கிறார்.

கோவிட்-19 குறித்தச் செய்திகள் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை ஊடகங்கள் ‘இன்று மட்டும்/ இன்று ஒரே நாளில்/ இதுவரை இல்லாத அளவு’ என்பவற்றைத் தான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லி வருகின்றன. ஆகஸ்ட் 3  மாலை நேரப் புள்ளிவிவரங்களின் படி தமிழகத்தில் 56,698 பேருக்கு தொற்று இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. இது வெறும் தொற்று இருப்பவர்களது எண்ணிக்கை தான். இவர்களில் எத்தனை பேர் நலமாய் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் மறைத்து விட்டு மொத்த எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டு ‘இதுவரை 2.63,222’ பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆகஸ்ட் 3 நிலவரத்தின் படி, தொற்று ஏற்பட்டு நலமாகி வீட்டிற்கு போனவர்கள் 2,02,283 பேர். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை இவ்வளவு என்று லட்சக்கணக்கை காட்டுவதும், இன்று இத்தனை பேருக்கு என குறிப்பிடுவதை விடுத்து, ‘இன்று மட்டும் ஒரே நாளில் இது வரை இல்லாத அளவிற்கு’ எனவும் அழுத்தி சொல்வதும் மக்களை பயமுறுத்துவதற்கான ஒரு உக்தியாகத்தான் படுகிறது. 

உள்ளிருப்பில் நான்கு மாதங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வாதாரத்திற்கு மக்கள் பெரும் அல்லல் படுகிறார்கள். இன்னமும் உள்ளிருப்புக் காலத்தைத் தொடர்வதன் மூலம் மக்களை அடைத்து விட்டு, தொடர் அச்சத்தில் வைத்துக்  கொண்டு, உரிமைகளுக்கெதிரான அவர்களின் குரல்வளைகளையும் நெறித்து விட்டு என்ன சாதிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

July 25, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் - 4 (பசிப்பிணி/ வேலையிழப்பு/மன அழுத்தம்)


இந்த உள்ளிருப்பு காலங்கள் கோடிக்கணக்கான இந்திய சாமானியர்களின் இயல்பு வாழ்க்கையைத் திருப்பிப் போட்டிருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும் போது இங்கு இறப்பு விகிதம் குறைவு என்றாலும், கிராமங்களுக்கும் பரவி விட்ட தற்போதைய நிலையில் இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் ஆறு மாத காலம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அரசு பணியிலிருப்போரும், தனியார்ப் பணிகளில் மாத ஊதியம் பெறுபவர்களும் தவிர்த்து கூலித்தொழிலாளர்கள் துவங்கி வியாபாரம் செய்பவர்கள் வரை அனைத்துத் தர மக்களும் பெரும் அல்லல் படுகிறார்கள்.

சிலர், அறிந்தவர்களிடம்  உதவிகளைக் கேட்டு விடுகிறார்கள்; பலர், கேட்கும் திராணியின்றி பசிக்கொடுமையில் மடிகிறார்கள். வேலைகளைப் பறிகொடுத்த மன அழுத்தத்தில் பலர் உயிரை மாய்த்திருக்கின்றனர்.

கடந்த நான்கு மாதங்களில் அரசு கொடுத்தது ரூ. 2,000 மட்டுமே. அரிசியும், பருப்பும் இலவசம் என அறிவித்து விட்டு, எரிபொருளிலும், மின்சாரத்திலும் கை வைத்து இருக்கிறார்கள்.

இப்படியான தருணத்தில் இன, மத, மொழி வேறுபாடு இன்றி பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்து வருகின்ற நிலையிலும் சுயபிடித்தங்களுடன் சிலர் தங்கள் கரங்களைக் குறுக்கிக் கொள்வதும் தொடர்கிறது.

மாத ஊதியம் பெறுகின்ற ஒருவரிடம் சிறு உதவி கேட்டு நண்பர் ஒருவர் முறையிடுகையில்... ' அய்யோ என் கிட்டவே பெருசா எதும் இல்ல ' என்றவர், தவறாமல் ஆன்லைனில் கோடிக்கணக்கில் புரளும் சாமியார்களுக்கு அனுப்புவது முரண்.

தனியார்ப் பள்ளி/ கல்லூரி ஆசிரியர்களும், ஊழியர்களும் போதுமான ஊதியமின்றி தவிக்கிறார்கள். மாத ஊதியம் தவறாமல் பெறுவோரேனும் நமது பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றும் கற்பிப்பவர்களுக்கு உதவியாய் இருத்தல் அவசியம்.

பெரிய அளவில் செய்யவில்லை எனினும், குறைந்த பட்சம், நமக்கு அருகில் இருப்பவரின் பசிப்பிணி போக்கினாலே போதுமானது. கூடவே தனிமையில் இருக்கின்ற உறவுகளை அடிக்கடி அழைத்து அவர்களின் மன உறுதியை உறுதி செய்து கொள்ளுங்கள். பேரன்பினால் எதையும் எதிர்கொள்ளவியலும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்
எட்வின்
சென்னை

July 23, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 3



சமகாலத்தில் இப்படியானதொரு உலகளவிலான பெருந்தொற்று நமை ஆட்கொண்டிருப்பது பெருந்துயரம் தரும் நிகழ்வு என்றாலும், இது நமை தகவமைத்துக் கொள்வதற்கும், நமது அதீத சுயநலம் பிடித்த லட்சியங்கள் தவறென்பதை உணர்ந்து கொள்வதற்கும், நமை ஆளும் தலைமைகள் எப்படியானவை என்பதை புரிந்து கொள்வதற்கும், அவர்களின் பின்னிருக்கும் கயமைகளை அறிந்து கொள்வதற்கும் கூடவே அவர்களது இயலாமைகளை உலகறிந்து கொள்வதற்கும் நமக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு இது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் சார் நலன்கள் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; எனினும், குறிப்பிட்ட சில சுய தேவைகளைத் தாண்டி பொதுநலன் சார் விடயங்களிலும், சமூகம் சார் விடயங்களிலும் கண்களைக் கட்டிக் கொண்டிருப்போமானால் நமது பிறப்பிற்கு நியாயம் செய்து விட முடியும் எனத் தோன்றவில்லை.

தொற்றின் ஆரம்ப நிலையில் அறிவியல் பூர்வமாக அதனை அணுகாமல், தமிழகத்திற்குள் தொற்று வரும் வாய்ப்பில்லை; ஏப்ரல், மே மாதங்களின் வெயிலுக்கு எந்த கிருமியானாலும் பரவாது; வயது மூத்தோருக்கு மட்டும் தொற்றும்/ பாதிப்பை ஏற்படுத்தும் என அவையிலேயே கேலி பேசிக்கொண்டும், மெத்தனமாகவும் இருந்து விட்டு இப்போது முட்டிக்கொண்டிருக்கிறது அரசு.

அரசு மருத்துவமனைகளுக்கான முக்ககவசங்கள், தற்காப்பு உடைகள் கொள்முதலில் கூட பெருமளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. மறுபுறம், தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 ன் பெயரில் பெருங்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ரூபாய் 500 மதிப்பிலான தற்காப்பு உடைகளுக்கு ரூ. 2500 வரை கணக்கு காட்டப்படுகின்றன. நுகம் சுமக்கும் மக்களின் மீது தனியார் மருத்துவமனைகள் தமது வணிகத்தை வலிந்து திணிக்கின்றன என்பது கண்கூடு.

PPE எனப்படும் தற்காப்பு உடைகளின் தேவையிலும், அவற்றை அணிவதிலும் சில நகைமுரண்களும், பெருமுரண்களும் இருப்பதாகப் படுகிறது. இன்றைய தேதியில் எந்த மருத்துவமனை வளாகத்தை நெருங்கினாலும் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு நிற்கும் மருத்துவப் பணியாளர்களை நாம் காண முடியும். அவர்கள் அணிந்திருக்கும் தற்காப்பு உடையை அவர்களின் பணி நேரம் முடியும் மட்டும் அணிந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

முரண் என்னவென பார்ப்போம்… தொற்று இருக்கும் ஒரு நபரை, மருத்துவப் பணியாளர் ஒருவர் சோதனை செய்திருக்கிறார் அல்லது குறிப்பிட்ட அறையில் சென்று அனுமதித்து விட்டு வருகிறார் அல்லது கொரோனாப் பிரிவில் உடனிருந்து கவனிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பின்னர் அம்மருத்துவப் பணியாளர் அதே தற்காப்பு உடையுடன் தொற்று இல்லாத வேறொருவரை அணுகுதல் புதிய தொற்றிற்கு வழிவகுக்கத்தானே செய்யும்!! அதைத்தானே நம் சமூகம் தொடர்ந்து செய்கிறது.

மருத்துவப்பணியாளர்கள் அவ்விதம் செய்வதிலும் தவறில்லை… PPE என்பதற்கு Personal Protective Equipment – ‘தற்’காப்பு உடைகள் என்பது தானே பொருள். பிறர் எக்கேடு கெட்டால் என்ன!!  

எட்வின்
சென்னை
23/7/2020

July 19, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 2


சென்னையில் மெதுவாகத் தொற்று பரவ ஆரம்பித்த நாட்களிலேயே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பில்லை.

ஆரம்பத்தில் 'குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின்' டெல்லி மாநாட்டைக் காரணம் சொல்லிக் கொண்டும், பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றானக் கோயம்பேடு சந்தையை காரணம் சொல்லிக்கொண்டும் இருந்தார்களே தவிர, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ/ சுகாதார நடவடிக்கைகளையோ போதுமான அளவு திட்டமிடவில்லை.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூடுகின்ற சந்தைகளிலேனும் போதுமான கண்காணிப்பு நடவடிக்கைகளை செய்திருத்தல் அவசியம். அதை விடுத்து டாஸ்மாக் கடைளைக் கண்காணிப்புச் செய்த பெருமையெல்லாம், காலத்திற்கும் பல்லிளிக்குமாறு வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன.

இதற்கடுத்து கையைக் காண்பித்தது வடசென்னையின் சேரிப் பகுதகளைத் தான். சாலையோரங்களிலும், தெரு ஓரங்களிலும், குடிசைகளிலும், வாழ்க்கை நடத்தும் மக்கள் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் என்ன பங்களிப்பைச் செய்து விட முடியும்!?

ராயபுரம், மண்ணடி, தண்டையார்பேட்டை முதலான இடங்களில், சுகாதாரமில்லாத பகுதிகளில் வாழும் மக்களைப் பள்ளிக்கூடங்களிலோ, கல்லூரிகளிலோ ஆரம்பத்திலேயே தனிமைப் படுத்தியிருந்தால் வடசென்னையின் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

உள் ஊரடங்கு அறிவித்த அன்று ராயபுரம் சந்தையில் கூடிய பெருந்திரளான மக்களையும் கூடக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தான் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் களுக்கு டோக்கன் விநியோகம் சிறப்பான கண்காணிப்புகளோடு நடைபெற்றது.

இன்றளவும், மண்ணடி, தண்டையார்பேட்டைப் பகுதிகளைக் கடந்து போகின்ற போது, சாலையோரங்களில் குடியிருக்கும் மக்களைக் காண முடியும்.

இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு தொற்றிற்கு அவர் காரணம், இவர் காரணம் என்கிற பழி போடல்கள் இன்றளவும் தொடர்கிறது… இன்னும் உண்டு

July 18, 2020

கோவிட் – 19 சில புரிதல்கள்


முடக்கல் ஆரம்பித்த மார்ச் ஏப்ரலிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயங்களும், அனுபவங்களும் பல உண்டு.

பொதுவாக தொற்று வியாதிகள் மக்கள் நெருக்கடி மிகு இடங்களிலும், சுகாதாரமில்லாத இடங்களிலும் இன்னும் அதிகமாக தொற்றவே செய்யும் என்பது பிறர் விளக்கித்தான் நமக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை.

அதிலும் பிற மாநிலங்களைக் காட்டிலும் உயர் மருத்துவக்கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் நமது சுகாதாரத் துறைக்கும், அரசுக்கும் நினைவூட்ட வேண்டிய அவசியமேயில்லை.

கைகளைக் கழுவுங்கள், தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள் என அறிவித்து விட்டு

மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை மாட்டிக் கொண்டு நடப்பதும்
அருகருகே நின்று கொண்டு விழாக்களில் பங்கு பெறுவதும்
முடக்குதலின் உள்ளேயே உள் முடக்குதல் அறிவிப்பதும்
கூடி நின்று கைதட்டுவதும், விளக்கேற்றுவதும்
மதுக் கடைகளை திறந்து விடுவதும்

என இருந்தால் தொற்று பரவாமல் என்ன செய்யும்!

சில நூறுகளாகத் தொற்று இருந்த போதும் சரி, கட்டுப்படுத்தவியலாத அளவிற்கு பரவிய  பின்னரும் சரி, பொது சுகாதாரத்தைக் குறித்து அரசும் மக்களும் எவ்வித கவலையும் பட்டதாகவோ! படுவதாகவோ! தெரியவில்லை.

குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன, அவைகள் முறையாக அகற்றப்படுவதில்லை, அவைகளில் எவ்விதமான கழிவுகள் கொட்டப்படுகின்றன என்பதும் எவருமறியார்; அதின் துர்நாற்றம் அதன் வழியாக கடந்து போகின்றவர்களின் முகக்கவசத்தையும் மீறி மூக்கிலடிக்கிறது.

மறுபுறம் மக்கள், தனி மனித இடைவெளியை முறையாகக் கடைபிடிப்பதில்லை, கறிக்கடைகளிலும். மீன் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் இடைவெளி விட்டு நில்லுங்கள் என Flex விளம்பரங்கள் கண் சிமிட்டினாலும், ‘அத ஏன் நாங்க செய்யப்போறோம்‘ என்கிற தொனியிலேயே கூடுகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு அடைப்பு என அறிவித்ததில் இருந்து மேற்குறிப்பிட்ட கடைகளில் சனிக்கிழமை அந்தி வேளைகளில் தள்ளுமுள்ளு என்பது வாடிக்கையாகிப் போனது. ‘சண்டேன்னா கறி’ அப்படிங்கிற எண்ணத்தில இருந்து கூட இன்னும் மீள முடியாத சமூகம் கொரோனா தொற்றிலிருந்து மீள இன்னும் காலம் இருக்கிறது!

முகக்கசவசங்கள் நாடிக் கவசங்களாகவே அணியப்படுகின்றன. அறிகுறிகள் தமக்கு இருந்தாலும், அதனை மறைக்கும் முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன; அதற்கு,  சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவோம் என்பதும், அரசினால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் படுவோம் என்பதும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன… இன்னும் உண்டு

July 01, 2020

எட்வின் எனும் நான்...


என்ன இவன் வர வர கழுத தேஞ்சி கட்டெறும்பா ஆன கத மாதிரி மத (மூட) நம்பிக்கைகளை கேலியா எழுதிட்டிருக்கான்னு சிலருக்கு தோணும். தோணலன்னா தான் பிரச்சன!

2008 ல தான் ஆசான் உந்துதல்ல பொதுவெளில எழுத ஆரம்பிச்சேன். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' ங்கிற தலையங்கத்தில எழுதின மொத பதிவுலயே 'இறைவன் வரும் வரை இந்திய மண்ணில் சமாதானத்திற்கு வாய்ப்பில்லை" ன்னு தான் முடிச்சிருப்பேன்!

இலக்கிய, வரலாறு, மண், தமிழ் சார்ந்த புத்தகங்கள் வாசித்திராத காலம் அது. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்கிற பெயரில் 'ஜெயகாந்தன்' எனும் பெரிய எழுத்தாளர், நாவல் எழுதி இருக்கார் அப்டிங்கிறதே ஆசான் சொல்லித்தான் தெரியும். அது தெரியாமத்தான் நான் அந்த தலைப்புல கிறுக்கி வச்சிருந்திருக்கேன்!!

அவ்வளவு புரிதல் தான் அப்போது இருந்தது. 2008-2020 பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்திருக்கின்றன, கூடவே, சில அறியாமைகளும், சுயபிடித்தங்களும் கடந்திருக்கின்றன. 

தொடர் வாசிப்பும் அதன் நீட்சியாக வரலாற்றை, சமகால நிகழ்வுகளை, ஆன்மீக விழுமியங்களை ஓரளவு பகுத்தறியும் மனதும் விசாலமாகியிருக்கிறது. 

சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் உரையாடல்களை முன்னெடுப்போரையும், உள்ளதை உள்ளபடி பொதுவெளியில் விவாதிப்போரையும் நாடிச் சென்று வாசித்தறியும் வேட்கை அதிகரித்திருக்கிறது.

சாதியம், தீவிர அடிப்படைவாதம், மதவாதம் குறித்து பேசுவோர் பலரையும், தனி மனித தாக்குதல் செய்வோரையும் விலக்கி வைத்திருக்கிறேன்; அது கிட்னிக்கு நல்லது என்பதாலும்!

இன்றைய தேதியில் இதனாலேயே எனது கருத்துகள் மனிதம் மறுக்கும் மத அடிப்படைவாதங்களுக்கு எதிராக இருக்கிறது; ஈயம் பூசின மாதிரியும்/ பூசாத மாதிரியுமான போலி அன்பை வெளிப்படுத்துவோரையும் எதிர்க்கிறது.

நம்பிக்கை என்பது அவரவர் மனது சார்ந்த விடயம். அதை மற்றவர் மீது திணிப்பதில் எள்ளளவும் நியாயம் இல்லை.

நம்பிக்கைகள் - மூடநம்பிக்கைகள் ஆகி விட்டால் பேரன்பிற்கு அங்கு இடமில்லை; பேரழிவே நிச்சயம்.

பேரன்பிற்கு மனிதம் போதும், மதங்கள் தேவையில்லை. அன்பு செய்வோம் ❤

எட்வின்
1/7/2020
சென்னை

June 24, 2020

சென்னை – சுயநலங்களுக்கு இரையாக்கப்பட்ட நகரம்!


‘சென்னைலயா இருக்கீங்க’?
‘சென்னை அழிஞ்சிருமாமே’?
‘சென்னைல தான் இன்னும் இருக்கீங்களா’?
‘சென்னைல உங்களுக்கு ஒண்ணுமில்லையே’ ?
‘சென்னைல கவனமா இருங்க’!

இவைகளில் ஏதாவது ஒன்று இல்லாமல் சென்னைவாசிகளின் சமீபத்திய தொலைபேசி உரையாடல்கள் துண்டிக்கப்பட்டிருக்காது என்பது திண்ணம்!

1997 ல் தான் முதன்முறையாக சென்னையில் காலடி வைத்தேன். ஐதராபாத்திற்குப் பள்ளிச் சுற்றுலா போகின்ற வழியில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் சில மணி நேரங்களும், திரும்பி வருகையில் மக்கள் நெருக்கடி நிறைந்த வணிகப் பகுதியான தி.நகரில் சில மணி நேரங்களுமாக முற்றுப் பெற்றது அந்த பயணம்.

அப்போதே சில கேள்விகள் மனதை ஆக்கிரமித்திருந்தன. அதிகம் பிறரிடம் பேசிப் பழக்கமில்லாதால், எழுகின்ற எண்ணங்கள் பெரும்பாலும் குரல்வளையைத் தாண்டியதில்லை; ஆசிரியர்களிடம் கூட சொல்ல  முற்பட்டதுமில்லை!

அவற்றில் சில…

‘சென்னை ஏன் இத்தனை நெருக்கடியாக இருக்கின்றது’
‘ஏன் தேநீர் கோப்பைகளையும், குப்பைகளையும் பொது இடங்களில் வீசுகிறார்கள்’
‘குப்பை தொட்டிகள் ஏன் நிரம்பி வழிகின்றன’

அதே எண்ணங்கள் 1998, 2000, 2002, 2003, 2006, 2008 என தொடர்ந்த பயணங்களிலும் மனதை ஆக்கிரமித்திருந்தன. பத்து வருட இடைவெளிக்கு பின்னர் 2018 ல் மீண்டும் சென்னைக்கு வந்த போது, பலர் கரங்களில் சரளமாக மொபைல் போன்கள் தவழ்ந்திருந்ததும்; உயர் கட்டிடங்களும், மெட்ரோ பாலங்களும் முளைத்திருந்ததுமான மாற்றங்களைத் தவிர்த்து நகரம் ஒரு நகரத்திற்கான அடையாளத்தைப் பெற்றிருந்ததா என்றால், அதற்கு பதிலில்லை!

கூடவே, முதல் சென்னைப் பயணத்தில் தோன்றிய கேள்விகள் மீண்டும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு, ’இதற்கு விடிவே இல்லையா’ என்ற புதியதொரு கேள்வியையும் விதைத்திருந்தது.

1997 ல் நான் பார்த்த சென்னையாகவே 2020 லும் சென்னை தொடர்கிறது.

வணிகத்திற்காக, பிழைப்பிற்காக, தங்களின் திறமைகளை எப்படியாவது உலகறியச் செய்து விட வேண்டுமென்பதற்காக புலம்பெயர்ந்த என் போன்ற மக்களால் அதிகரித்தச் சென்னைக் குடியேறல்கள் குளங்களையும், ஏரிகளையும், காடுகளையும், வயல்நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு இன்னும் தனது இருப்பை விரிவு படுத்திக் கொண்டிருக்கின்றது.

இதைப் பதிவு செய்வதும் ஏரியை ஆக்கிரமித்து (அரசு அனுமதியுடன்) கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் இருந்து தான். இதற்கு சொல்லப்படும் காரணங்கள்

1.    மக்கள் நெருக்கடியைச் சமாளிக்க வேறு வழியில்லை
2.    வறட்சியான பயனற்ற நீர்நிலைகள்

சரி, மக்கள் வாழ்வதற்காக இயற்கை வளங்களைக் ஆக்கிரமித்து குடியிருப்பாக மாற்றி இருக்கிறீர்கள், சுற்றுப்புறத்தை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்!! முக்கிய இடங்கள் தவிர்த்து பரவலான இடங்களில் சென்னையின் அடையாளம் இவைகள் தான் என்று சொல்லுமளவிற்கு குப்பைகளும், நெகிழிப் (Plastic) பைகளும், துர்நாற்றமும் ஆக்கிரமித்திருக்கின்றன.

போதுமான அளவு குப்பைத் தொட்டிகள் இல்லை, பெரும்பாலானோர் குப்பைகளை முறையாகக் களைவதில்லை; அப்படியே முறையான தொட்டிகளில் குப்பைகளைக் களைந்தாலும் அவற்றை  அகற்றுவதற்குப் போதுமான துப்புரவு தொழிலாளர்களும் இல்லை. பலர் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுகின்றனர்.

இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கையில், மக்கள் நெருக்கடி நிறைந்த, சுகாதாரம் குறித்தும், சுற்றுப்புறங்கள் குறித்தும் பெருமளவில் அக்கறையில்லாத மக்கள் கொண்ட  சென்னைப் போன்றதொரு நகரத்தில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துதல் என்பது மிகப்பெரும் சவால்.

இதில் இன்னும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால், மருத்துவப்பணிகளில் இருப்போர் கூட முறையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை; முகக்கவசங்கள் ஆங்காங்கே தெருக்களில்  சிதறிக் கிடக்கின்றன;

வீட்டுக்கழிவுகளே சரிவர அகற்றப்படாமலும், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாமலும் இருக்கும் நகரத்தில், மருத்துவக் கழிவுகளைக் குறித்து வாயைத் திறந்தால் இன்னும் குமட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலமே அதற்கு சாட்சி!

இப்படியான ஒரு நகரத்தில் தான் இன்னும் பிழைப்பிற்காக பலரும் ஒட்டிக் கொண்டுள்ளனர். இயற்கையின் சமநிலையை சீர்குலைத்து விட்டு, நாம் சீரும்  சிறப்புமாக இருந்து விட முடியுமா என்பதற்கு பதில், "முடியவே முடியாது" என்பது தான்!

  

Related Posts with Thumbnails